மோடி இந்தியாவில் தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம்

 டேனியல் டென்விர்

ஜேக்கபின் இதழ்


இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா கட்சி ஹிந்து தேசியவாத இயக்கத்தின் தேர்தல் அரசியல் பிரிவாக இருக்கிறது. அது இந்தக் கிரகத்தின் மிகப்பெரிய, ஒழுங்கமைக்கப்பட்ட தீவிர வலதுசாரி சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதன் எழுச்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்தியாவின் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை நாம் காண  வேண்டும்.  

அச்சின் வனைக்

தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், எழுத்தாளர், சமூக ஆர்வலரான அச்சின் வனைக் ஆம்ஸ்டர்டாமைச் சார்ந்த டிரான்ஸ்நேஷனல் இன்ஸ்டிட்யூட்டின் தில்லி தளத்தில் பணியாற்றி வரும் ஆய்வாளராவார். அவர் ‘வலிமிகு மாற்றம்: இந்தியாவில் முதலாளித்துவ ஜனநாயகம்’, ‘ஹிந்து அதிகாரத்துவத்தின் எழுச்சி’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.     

டேனியல் டென்விர்

டேனியல் டென்விர் ஆல்-அமெரிக்கன் நேட்டிவிசம் என்ற நூலின் ஆசிரியர். ஜேக்கபின் ரேடியோவில் தி டிக் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கிறார்.


டேனியல் டென்விர் நேர்காணல்

தீவிர வலதுசாரிகளின் எழுச்சி இன்றைக்கு உலகளாவிய நிகழ்வாகக் காணப்படுகிறது. அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாவது நாடான இந்தியாவைக் காட்டிலும் வலதுசாரிகள் இந்தப் பூமியில் வேறெங்கும் வலுவாக இருப்பதாகத் தோன்றவில்லை. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் 2014ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்து வருகிறது. அது வெறுமனே ஒரு கட்சியாக மட்டும் இயங்கவில்லை. பாஜக, அதன் தொண்டர்கள் அமைப்பாக இருக்கின்ற ஹிந்து தேசியவாத தன்னார்வம் கொண்ட, துணை ராணுவத்தைப் போன்ற அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பார்வை இந்தியப் பெருமை குறித்த ராணுவவாதம், வன்முறைப் பாதை நோக்கியே இருந்து வருகிறது. முஸ்லீம்களுக்கென்று இந்தியாவில் எந்தவொரு வரலாறும் இல்லை என்பதால் நிகழ்காலத்தில் அவர்களுக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என்ற பார்வையும் அவர்களிடையே இருக்கிறது.     

ஜேக்கபின் ரேடியோவின் பாட்காஸ்ட் நிகழ்வான தி டிக் நிகழ்ச்சியின் சார்பில் நடைபெற்ற நேர்காணலில் டேனியல் டென்விர் இந்தியாவின் அழுத்தமான அரசியல் பிரச்சனைகளை அச்சின் வனைக்குடன் விவாதித்தார். ஆழமாக வேரூன்றியுள்ள, பிரிவினைக்கு முந்தைய சவால்களை ஆராய்ந்த அவர்கள் இருவரும் புதிய தாராளவாதத்தின் எழுச்சி, காங்கிரஸ் கட்சி மற்றும் நேரு-காந்தி பாரம்பரியத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் மட்டுமே பாஜகவின் ஏற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்ற வாதத்தை முன்னிறுத்துகின்றனர்.   

தெளிவு மற்றும் நீளம் கருதி இந்த நேர்காணல் திருத்தப்பட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி

டேனியல் டென்விர்: பிரதமர் நரேந்திர மோடி, அவர் சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அதாவது பாஜக குறித்த கேள்விகளுடன் இந்த நேர்காணலைத் தொடங்கலாம்.  

அச்சின் வனைக்: தேசிய தன்னார்வலர் அமைப்பு என அழைக்கப்படும் ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட நரேந்திர மோடி தனது சிறுவயதிலேயே அந்த அமைப்பின் சித்தாந்தத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். தன்னுடைய பதின்ம வயதின் பிற்பகுதியில் ஆர்எஸ்எஸ்சின் முழுநேர உறுப்பினராக மாறிய அவர் அந்த அமைப்பின் படிநிலையில் மெதுவாக முன்னேற்றம் கண்டார்.      

மோடி 1980களின் பிற்பகுதி 1990களின் முற்பகுதியில் பாஜகவிற்கு மாறிக் கொண்டார். குறிப்பாக ராமஜென்ம பூமி பிரச்சாரத்தின் போது பல்வேறு வகைகளில் தேவைப்பட்ட பாத்திரங்களுக்காக அவர் உட்பட பல தொண்டர்களை ஆர்எஸ்எஸ் பாஜகவிற்கு வழங்கியது. அதன் பிறகு கிடைத்த பதவிகள் மூலமாக மோடி தன்னை நன்கு மேம்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் பாஜக தலைமையில் இருந்த குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். 2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளில் குறிப்பிடத்தக்க பங்கையாற்றிய பிறகு அவர் அதிக முக்கியத்துவத்தைப் பெற்றார். அடுத்தடுத்து குஜராத்தில் நடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றியால் அவரது புகழ் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெருகியது. அந்தப் புகழே 2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக ஆர்எஸ்எஸ்சில் தனக்கான ஆதரவை அவர் அதிகரித்துக் கொள்வதற்கான வழியை வகுத்துக் கொடுத்தது.   

      

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்தில் முக்கியமான பதவிகளை வகித்திருந்த மூத்த தலைவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி, பாஜகவின் பிரதமர் வேட்பாளராக 2013ஆம் ஆண்டு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில் அது குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது.  

உங்கள் இரண்டாவது கேள்வி பாரதிய ஜனதா கட்சி பற்றியது. தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்புடைய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் வலையமைப்புடன் இருக்கின்ற சங் பரிவாரின் அரசியல் பிரிவாக பாஜக செயல்பட்டு வருகிறது. அந்த வலையமைப்பு அமெரிக்கா உட்பட உலகளவில் கிளைகளைக் கொண்டுள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது.   

அதில் பெண்கள் பிரிவு, தொழிற்சங்கக் கூட்டமைப்பு, பாதுகாப்புப் படையுடன் ஒப்பிடப்படக் கூடிய அலவில் இயங்குகின்ற பஜ்ரங் தள் எனும் ஹனுமன் சிப்பாய்கள் குழு உட்பட பலவிதமான அமைப்புகளும் அடங்கும். ஆர்எஸ்எஸ்சின் அரசியல்  பிரிவு முந்தைய பிறவியில் 1951ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரை ஜனசங்கம் என்று அறியப்பட்டது. இந்திராகாந்தியை ஆட்சியில் இருந்து வெளியேற்றிய கூட்டணியில் ஜனசங்கம் 1977ஆம் ஆண்டு இணைந்தது. ஆர்எஸ்எஸ்சுடன் கொண்டிருந்த தொடர்பு காரணமாக 1979ஆம் ஆண்டு ஜனதா கட்சியில் இருந்து ஜனசங்கம் வெளியேற்றப்பட்டது.            

1980ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சி என்று தன்னை மறுபெயரிட்டுக் கொண்ட அந்தக் கட்சி இந்திய அரசியலில் படிப்படியாக முக்கியத்துவம் பெறத் துவங்கியது. காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியால் உருவான வெற்றிடத்தைக் கைப்பற்றிக் கொண்டதன் மூலம் அதனால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற முடிந்தது.  அந்த வெற்றிடத்தைக் கைப்பற்றுவதற்கான பாதையில் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் உருவான கூட்டணிக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸைப் போன்ற மூன்று நடுநிலைவாதக் கட்சிகளின் ஆட்சியை பாஜக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கூட்டணிகள் எதுவாலும் தங்களுடைய முழு பதவிக் காலத்தை முடிக்க முடியாமல் போனது. அந்த மாற்றங்களுக்குப் பிறகு கூட்டணி அமைத்து 1998ஆம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆட்சியும் 2004ஆம் ஆண்டு வீழ்ந்தது.     

காங்கிரஸ் கட்சி அதற்குப் பிறகு பத்தாண்டுக் காலம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தது. 2014ஆம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பாஜகவால் முப்பத்தியொரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அதிக வாக்கு பெறுபவர் வெற்றி பெறும் வகையிலான இந்திய தேர்தல் முறையின் காரணமாக பெறுகின்ற வாக்கின் அளவிற்கும், நாடாளுமன்றத்தில் வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கைக்கும் இடையிலே அதிக வேறுபாடு இருந்து வருகிறது.   

வரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது காங்கிரஸ் போன்ற ஒற்றைக் கட்சி பெரும்பான்மையுடன்  ஆட்சியிலிருந்த கட்சிகள் பொதுவாக நாற்பத்தியொரு சதவிகிதம் முதல்  நாற்பத்தியொன்பது சதவிகிதம் வரை வாக்கு சதவிகிதத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால் பாஜக அதற்கு முற்றிலும் மாறாக  2014ஆம் ஆண்டு வெறுமனே முப்பத்தியொரு சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று  ஆட்சியைக் குறைவான பெரும்பான்மையுடன் பிடித்தது. அந்தக் கட்சிக்கு ஹிந்தி பேசுகின்ற மத்திய, வட இந்தியாவில் குறிப்பிடத்தக்க மாநிலங்களில் இருந்த ஆதிக்கமே அதற்கான காரணமாக இருந்தது.   

2019ஆம் ஆண்டில் தன்னுடைய வாக்கு அளவை முப்பத்தியொரு சதவிகிதத்திலிருந்து முப்பத்தியேழு சதவிகிதமாக அதிகரித்துக் கொண்ட பாஜக நாடாளுமன்ற இடங்களின் அடிப்படையில் கணிசமான அளவு பெரும்பான்மையைப் பெற்றது. இந்தியாவின் வடக்கு, மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் குவிந்திருந்த கட்சியின் வாக்குகளே அந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தன. குறைவான வாக்குகளைப் பெற்ற போதிலும் பாஜகவால் அந்த தேர்தலில் நாடாளுமன்றத்தில் மிகக் கணிசமான பெரும்பான்மையைப் பெற முடிந்தது.    

இவ்வாறு சொல்வதன் மூலம் பாஜகவின் மேலாதிக்கத்தின் அளவை, அதனுடைய சித்தாந்தத்திற்கான கருப்பொருள்களின் பிரபலத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.   

ஹிந்து தேசியவாதம்

பாஜக ஹிந்துத்துவா என்ற கருத்தாக்கத்திற்கு ஆதரவாக இருக்கிறது. ஹிந்துத்துவா என்பது பெரும்பாலும் ‘ஹிந்துத்துவம்’ என ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்ற ஹிந்து தேசியவாதத்தின் ஒரு வடிவமாக உள்ளது. எதனைக் கட்டமைக்க அது நினைக்கிறது? பாசிசத்தின் ஒரு வடிவம் என விவரிக்கப்படும் வகையில் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளால் இந்த அளவிற்கு அதிகாரத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்ள முடிந்தது?     

  

அதனை பாசிச குணாதிசயங்கள் கொண்ட அதிகாரம் என்றே நான் கூறுவேன். இந்தியச் சூழலில் பாஜக பாசிசத்தின் மற்றொரு மாறுபாடா அல்லது வடிவமா அல்லது பாசிச குணாதிசயங்கள் அதனிடம் உள்ளனவா என்ற விவாதம் தொடர்ந்து இருந்து வருகிறது. வெளிப்படையான பாசிச குணாதிசயங்களைக் கொண்ட மோசமான தீவிர வலதுசாரி சக்தியாக உள்ள பாஜக மிகப் பெரிய ஆபத்தைப் பிரதிபலிக்கும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.     

ஹிந்துத்துவா என்பது ஹிந்துத்துவம் என்றே பொருள்படுகிறது. அதனைச் சுட்டிக்காட்டும் போது நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது. ஹிந்துத்துவம் இந்தியாவின் சாராம்சம், இந்திய தேசியத்தின் சாராம்சம் என்ற அடிப்படை வாதமும் இருந்து வருகிறது. அதாவது இந்திய தேசியவாதம் ஹிந்துத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே அது அடிப்படையில் ஹிந்து தேசியவாதமாகத்தான் இருக்கிறது. பல நாடுகளில் இருப்பதைப் போல மத தேசியவாதத்தை மையமாகக் கொண்ட இன அடிப்படையிலான தேசியவாதமும் உள்ளது. இந்தக் கருத்து எவ்வாறு விரிவடைந்து வளர்ந்தது?       

போட்டியிட்டுக் கொள்ளும் தேசியவாதங்கள் எப்போதுமே இருந்துள்ளன. தேசிய போராட்டக் காலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டு தேசியவாதம் என்று அழைக்கப்படும் மற்றொரு கருத்தாக்கத்தை  வழிநடத்தியது என்றாலும் இந்திய ஹிந்து சாரம் என்ற கருத்தின் மீது குறிப்பிடத்தக்க அளவிலே அடிமட்டத்தில் அனுதாபங்கள் எப்போதும் இருந்தே வந்திருக்கின்றன.      

ஹிந்துத்துவத்தை ஹிந்து மதத்துடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஹிந்து என்பது ஓர் அரசியல் கட்டமைப்பாக இருக்கிறது. அனைத்து மதங்களையும் போல ஹிந்து மதமும் ஒரு மதமாக அரசியல் கட்டுமானத்திற்கு, அரசியல் இயக்கங்கள், போராட்டங்களை வடிவமைப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்எஸ்எஸ் இத்தாலிய, ஜெர்மன் பாசிசத்திடமிருந்து தனக்கான உத்வேகத்தைப் பெற்றுக் கொண்டது. அந்த அமைப்பிற்கு 1980களின் நடுப்பகுதி வரையிலும் குறிப்பிடத்தக்க அளவிலான தேர்தல் செல்வாக்கு எதுவுமில்லை.

ஆனாலும் இந்தியாவின் வடமேற்கு, மத்தியப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவிலான செல்வாக்கைப் பெற்றிருந்த அவர்கள் குடிமைச் சமூகத்திற்குள் தங்களை ஆழப் பதித்துக் கொண்டனர். பெரும்பாலும் அவர்களுடைய வெற்றி சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களின் பல்வேறு சமூக தேவைகள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்ளும் வகையில் அடிமட்டத்தில் அவர்களிடமிருந்த மிகப் பரந்த இருப்பையே சார்ந்திருந்தது.  

அவர்கள் இப்போது கடந்த இருபதாண்டுகளில் கிராமங்களுக்குள்ளும் விரிவடைந்துள்ளனர். இடதுசாரிகளிடம் பாரம்பரியமாக இருக்கும் பலத்தைப் போல கருத்தியல் ரீதியாக உறுதியான, ஒழுக்கமான தொண்டர்களைக் கொண்டிருப்பது அவர்களுடைய அடித்தளத்தை வளர்ப்பதற்கு முக்கியமானதாக இருந்துள்ளது. போர் இடைக்காலம் போன்ற சவாலான காலகட்டங்களில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பின்னடைவின் போது நிலைத்து நின்ற இடதுசாரி இயக்கங்களுக்கு இணையாக அவர்களாலும் - தேர்தல் திறமை இல்லாவிட்டாலும் - நிலைத்து நீடித்து நிற்க முடிந்தது.      

அடிமட்டத்தில் விரிவான அமைப்பைக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனமாக இருக்கும் அவர்களால் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்க முடிந்துள்ளது. உலகளாவி இருந்து வருகின்ற மற்ற தீவிர வலதுசாரி இயக்கங்களுடன் ஒப்பிடும் போது ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடன் இணைந்த குழுக்கள்  பல வேறுபாடுகளுடன் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளே அவர்களின் வலிமையை விளக்கப் போதுமானவையாக இருக்கின்றன.

முதலாவதாக நீடித்து நிற்பது - தொண்ணூறு ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இருந்து வரும் தீவிர வலதுசாரி சக்தி ஏதேனும் ஐரோப்பாவில் அல்லது வட அமெரிக்காவில் அல்லது உலகில் வேறு எங்காவது இருக்கிறதா?

இரண்டாவதாக இந்த உலகில் வேறு எங்கும் அடித்தட்டு மக்களுடன் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ள பாசிச குணாதிசயங்களைக் கொண்ட தீவிர வலதுசாரி சக்திகளை  - அவர்களை எவ்வாறு வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள் - காண முடியாது. ஈடு இணையற்ற வகையில் குடிமைச் சமூகத்திற்குள் அவர்கள் நன்கு ஊடுருவியுள்ளனர். தங்களுக்கான தொண்டர்களை உருவாக்கும் அவர்களுடைய பணி குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக இருக்கிறது.    

1947ஆம் ஆண்டு முதல் 1960களின் பிற்பகுதி வரையிலும் காணப்பட்ட காங்கிரஸின் மேலாதிக்கத்தின் போது கூட, எண்ணிக்கையின் அடிப்படையில் மிக வலுவானதொரு தொண்டர் தளத்தை ஆர்எஸ்எஸ் தனக்கெனப் பெருமையுடன் கொண்டிருந்தது. எகிப்து ஹமாஸ் இயக்கங்களைப் போல பல துணை அமைப்புகளை உருவாக்கி, தன்னுடைய செயல்பாட்டை, செல்வாக்கை ஆர்எஸ்எஸ் விரிவுபடுத்திக் கொண்டது. இந்த பரந்த விரிவான உள்ளமைப்பே மதச்சார்பற்று இருப்பதற்கான தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள், பேரிடர் நிவாரண முயற்சிகள், கலாச்சார முன்முயற்சிகளை மேற்கொள்வதற்கு உதவியதன் மூலம் இந்தியச் சமூகத்தில் அவர்களுக்கென்று தனித்துவமான பலன்களை உருவாக்கிக் கொடுத்தது.    

அவர்களால் இந்தப் பலன்களை - இடதுசாரிக் கட்சிகளைத் தவிர இந்தியாவில் உள்ள வேறு எந்த சக்தியாலும் முடியாத போதிலும் - சில பிராந்தியங்களில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது. வரலாற்றுரீதியாகப் பார்த்தால், தீவிர இடதுசாரி மற்றும் பிரதான இடதுசாரிகளைப் போல தீவிர வலதுசாரிகளும் தங்களுக்கிடையே பொதுவான பண்பாக மிக வலுவான தொண்டர் அமைப்பைக்  கொண்டுள்ளனர்.         

தேசிய சுதந்திரப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கென்று செயல்வீரர்கள் இருந்தனர். ஆனால் அந்தக் கட்சியின் சித்தாந்தம் பிந்தைய காலகட்டத்தில் தவறாகிப் போனது. ஆதரவாளர்களிடமிருந்து முற்றிலுமாக வேறுபட்ட தொண்டர்கள் என்று ஒருவரும் அந்தக் கட்சிக்கு இல்லாமல் போன நிலைமை ஏற்பட்டது. காங்கிரஸின் தலைமை ஆதரவளிப்பவர்கள், வாடிக்கையாளர்கள் என்ற வலையமைப்புடன் மட்டுமே கட்டமைக்கப்பட்டது. அதன் காரணமாக பாஜக அபரிமிதமாக வளர்ந்தது. அந்த வளர்ச்சியின் அளவைப் புரிந்துகொள்ள சில தோராயமான புள்ளிவிவரங்களை இங்கே தருகிறேன்.    

பதினெட்டு கோடி உறுப்பினர்கள் தங்களிடம் இருப்பதாக பாஜக கூறுகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் மிகப் பெரியதாக அந்த எண்ணிக்கை இருக்கின்றது. ஆனாலும் வெறுமனே மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பாஜகவில் உறுப்பினராக முடியும் என்ற நிலைமை பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் செயலற்று இருப்பதற்கே வழிவகுத்துக் கொடுத்திருக்கிறது. ஆயினும் அந்த செயலற்ற உறுப்பினர்களிடம் பாஜகவிற்கு இருக்கின்ற பிரபலத்தைக் காட்டுவதாகவே அது இருக்கிறது. 

கட்சியில் உள்ள எண்ணூறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கட்சிக்குத் தேவையான அனைத்து வகையான வேலைகளையும் செய்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பு, மாணவர் கூட்டமைப்பு உட்பட முப்பத்தாறு துணை நிறுவனங்களை கட்சி வைத்திருக்கிறது. கூடுதலாக பெண்கள் பிரிவையும் கட்சி குறிப்பிடத்தக்க வகையில் பராமரித்து வருகிறது. கலாச்சாரம் மற்றும் மத விவகாரங்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கட்சியின் மேற்பார்வையில் விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு நிர்வகித்து வருகிறது.     

முப்பது முதல் ஐம்பது லட்சம் வரை உறுப்பினர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த அமைப்பிற்கென்று முழுநேரப் பணியாளர்களும் இருக்கின்றனர். பல்வேறு சிறுநகரங்கள் மற்றும் பெருநகரங்களில், கிராமப்புறங்களில் அறுபதாயிரம் கிளைகளை இந்த அமைப்பு கொண்டுள்ளது.

தொண்டர் அமைப்பு என்ற வகையில் அந்த எண்ணிக்கை மிக அதிகம் என்றே தோன்றுகிறது.

ஆம். அதன் பல துணை அமைப்புகளுக்கு முதுகெலும்பாக ஆர்எஸ்எஸ் செயல்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக பல இடங்களில் தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள் போன்ற தனது அமைப்புகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்காக ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர்களை வழங்கி வருகிறது. மேலிருந்து கீழ் வரை கீழ்ப்படிதலை அதனுடைய படிநிலை அமைப்பு உறுதி செய்து தருகிறது. மிகப் பயனுள்ள மேற்பார்வை, ஒருங்கிணைப்புடன் ஆர்எஸ்எஸ் இயங்குகிறது.    

அதுவே உண்மையில் அதன் வலிமைக்கு மிகச் சிறந்த ஆதாரமாகவும் இருக்கிறது. கணிசமான எண்ணிக்கையிலான முழு நேர ஊழியர்களுடன் இயங்கி வருகின்ற போதிலும் அவர்களுடைய சரியான எண்ணிக்கை குறித்து தெளிவில்லை. முழுநேர ஊழியர்களாக இல்லாமல் செயல்பட்டு வரும் உறுப்பினர்களுடைய ஈடுபாட்டையும் ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொள்கிறது. மிகப் பெரிய ட்ரோல் ராணுவத்துடன் உள்ள ஆர்எஸ்எஸ் வழக்கமான வாராந்திரக் கூட்டங்களை நடத்தி வருகிறது. தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு ஏற்ப தன்னைத் திறமையாக மாற்றியமைத்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ் தனக்கான செய்திகளைப் பரப்புவதில் மிகவும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் சமீபத்திய செயல்பாடுகளைப் பற்றிச் சொல்வதற்கு இன்னும் ஏராளம் இருக்கிறது. ஆனாலும் அதன் வலிமையைப் பற்றிக் கூறுவதை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.   

கலாச்சாரத் தனித்துவங்கள்

சுதந்திரத்திற்குப் பின்னரும் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும்  சக்தியாக பல தசாப்தங்களுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் இருந்தது. ஆனால் அது இப்போது தன்னுடைய முந்தைய சுயத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸின் பழைய மேலாதிக்கம் எவ்வாறு செயல்பட்டது, பின்னர் எவ்வாறு அது செயல் இழந்து போனது என்பது போன்றவற்றைக் கணக்கில் கொள்ளாமல் பாஜகவின் புதிய மேலாதிக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாது என எழுதியிருக்கிறீர்கள். அதுகுறித்து கொஞ்சம் உங்களிடம் பேச த் தோன்றுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு 1964ஆம் ஆண்டு வரை பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கீழ் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கத்திற்கான மாடல் எவ்வாறு இருந்தது என்பதை முதலில் விளக்குவீர்களா?         

தேசிய சுதந்திரப் போராட்டத்தில் ஏற்றுக் கொண்ட தலைமைப் பாத்திரமே சுதந்திரத்திற்குப் பிறகான காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கத்திற்குக் காரணமாக இருந்தது. சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைப் போல ஓர் அமைப்பாக தீவிரமாக ஆர்எஸ்எஸ் ஒருபோதும் பங்கேற்றதே இல்லை. அதன் கவனம் முழுக்க ஆங்கிலேயர்களைக் காட்டிலும் முஸ்லீம்கள் மீதே இருந்தது. சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் பெற்ற அந்த மரியாதைதான் சுதந்திரத்திற்குப் பிந்தைய காங்கிரஸின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.         

இரண்டாவதாகச் சொல்வதென்றால், காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிற தலைவர்கள் அனைவரும் கட்சிக்கான ஆதரவு வலையமைப்பை கிராமப்புறத் தலைவர்கள். கிராமப்புற மேல்தட்டைச் சார்ந்தவர்களிடையே உருவாக்கியிருந்தனர். அது சுதந்திரத்திற்குப் பிறகு பதினைந்து ஆண்டுகளுக்கு அந்தக் கட்சியைத் தக்கவைத்துக் கொள்ளப் போதுமானதாக இருந்தது. ஆனாலும் காங்கிரஸுடம் சித்தாந்த ரீதியாக உறுதியான, ஒழுக்கமான தொண்டர்களை வளர்த்தெடுத்துக் கொண்ட ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தம் காணப்படவில்லை. காங்கிரஸின் சித்தாந்தம் மிகவும் குழப்பத்துடனே இருந்தது.       

காங்கிரஸ் கொண்டிருந்த சித்தாந்தம் சோசலிசம், முதலாளித்துவம், ஒருங்கிணைந்த தேசியவாதத்துடன் இணைந்த மதச்சார்பின்மை குறித்த தளர்வான விளக்கம், வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை அணிசேராமை, தேர்தல்கள் மற்றும் அடிப்படை குடிமை உரிமைகள் போன்ற ஜனநாயகக் கொள்கைகள் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்பட்டிருந்தது. 

1964ஆம் ஆண்டு நேருவின் மரணத்திற்குப் பிறகும் 1960களின் பிற்பகுதி வரையில் நீடித்திருந்த காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்கத்திற்கு காங்கிரஸின் பன்முகச் சித்தாந்தத்திலிருந்து உருவான நம்பகத்தன்மையே காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் 1967ஆம் ஆண்டு முற்றிலுமாக அந்த நம்பகத்தன்மை தளர்ந்து போனது.    

அந்த நம்பகத்தன்மை பலகாலத்திற்கு நீடித்திருந்தமைக்கு காங்கிரஸ் மீதிருந்த நற்பெயர், அது வளர்த்தெடுத்து வைத்திருந்த ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்களின் விரிவான வலையமைப்பு, இந்திய சுதந்திரத்தின் ஆரம்ப பத்தாண்டுகளில் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் போன்றவையே காரணமாக இருந்திருக்கலாம். மக்களின் வாழ்நிலைகள் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் மிக மோசமான நிலைமையிலேயே இருந்தன. ஆனால் சுதந்திர இந்தியாவில் 1947ஆம் ஆண்டு முதல் 1960களின் பிற்பகுதி வரை சுமார் மூன்றரை சதவிகித வளர்ச்சி விகிதம், பொதுத் துறை, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை நிறுவப்பட்டதால் அரசு வேலை வாய்ப்புகள் அதிகரித்தன.   மட்டுப்படுத்தப்பட்ட நிலச் சீர்திருத்தங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்ட வளர்ச்சிவாத முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட போதிலும் வளர்ச்சி குறித்த தன்னுடைய நோக்கங்களை அடைவதற்கு கட்சி கடுமையாகப் போராட வேண்டியதாயிற்று.  1970களின் பிற்பகுதியில் அது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இந்திய அரசியல் பிராந்தியமயமாக்கப்படுவதன் தொடக்கத்தைக் குறிக்கின்ற வகையில் கிராமப்புற  மேல்தட்டு வர்க்கத்தினர் தங்கள் விசுவாசத்தைப் பிராந்தியக் கட்சிகளின் பக்கம் மாற்றிக் கொள்ளத் தொடங்கினர். அதனால் குறிப்பிடத்தக்க அளவிலான சவாலை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உருவானது. பிராந்திய அளவில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் தோற்றத்தில் குறிப்பாக 1967ஆம் ஆண்டு தேர்தல்களில் கவனிக்கத்தக்க வகையில் அந்த மாற்றம் தெளிவாகத் தெரிந்தது. தன் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள அரசு அதிகாரத்தை அணுகுவதையும், ஆதரவளிக்கும் அமைப்புகளையும் நம்பியிருந்த காங்கிரஸ் அந்த மாற்றத்தின் விளைவாக தேசிய மற்றும் மாகாணத் தேர்தல்களில் தனது கோட்டையை இழக்க நேரிட்டது.   

வளர்ச்சிவாதப் பொருளாதார திட்டத்திலிருந்து புதிய தாராளவாதத்திற்கு இறுதியாக காங்கிரஸ் நகர்ந்தது. வரலாற்று ரீதியாக அதன் விளைவுகள் எவ்வாறு இருந்தன? காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளிடமும் புதிய தாராளவாதம் குறித்து இருந்த ஒருமித்த கருத்து பாஜகவின் எழுச்சிக்கான இடத்தை உருவாக்கிட உதவி செய்ததா?  

ஆரம்பத்தில் கெயின்சியனிசத்தின் மூன்றாம் உலக பதிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்த இந்திய பொருளாதார சித்தாந்தம் அரசு தலைமையிலான வளர்ச்சிவாதத்தை முன்னிறுத்தியது. ஆனால் நேருவின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் முயற்சிகள் தென் கொரியா போன்ற நாடுகளைப் போன்று வெற்றிகரமான வளர்ச்சிவாத அரசை நிறுவத் தவறிவிட்டன. அவ்வாறான தோல்வியால் இந்தியா தனது நிலையை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்காக எழுச்சிமிக்க முதலாளித்துவத் தோற்றத்துடன் ஒத்துப்போக வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

மற்ற நாடுகளைப் போல இந்தியாவையும் அதிகரித்து வந்த முதலாளித்துவம் கொடுத்த அழுத்தம் மற்றும் உலகளாவி ஏற்பட்ட மாற்றங்கள் புதிய தாராளவாதப் பாதையை நோக்கித் தள்ளின. நிலையான நிலை என்பதைக் காட்டிலும் ஒரு திசை என்றே புதிய தாராளமயம் புரிந்து கொள்ளப்பட்டது. நாடுகள் வெவ்வேறு தொடக்கப் புள்ளிகளிலிருந்து வெவ்வேறு வேகங்களில் அந்தத் திசையில் நகர்ந்தன. 1970களின் பிற்பகுதியில் தாங்கள் உணர்ந்து கொண்ட கெயின்சியனிசத்தின் தோல்விகள் காரணமாக ரீகனிசத்தின் கீழ் அமெரிக்கா, தாட்சரிசத்தின் கீழ் இங்கிலாந்து போன்ற நாடுகள் அதிலிருந்து விலகி புதிய தாராளவாதக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டன.    

தொழிலாள வர்க்கம் அடைந்த கடுமையான தோல்விகளால் பல்வேறு நாடுகளில் புதிய தாராளவாதத்தை நோக்கிய மாற்றம் மிகவும் எளிதாகிப் போனது. அமெரிக்காவில் பாட்கோ (PATCO - தொழில்முறை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு) தோற்கடிக்கப்பட்டது, இங்கிலாந்தில் சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போன்றவை முக்கிய தருணங்களாகும். மும்பையில் 1982ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் ஜவுளித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் தோல்விக்குப் பிறகு புதிய தாராளவாதத்தை நோக்கிய நகர்வு இந்தியாவில் வேகம் பிடித்தது.  

பிரதான எதிர்க்கட்சியும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பொருளாதார மாற்றங்கள் வெற்றி பெறும்.  அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த போராட்டத்தில் ஆரம்பத்தில் எதிர்ப்பே காணப்பட்டது. அதாவது ஜெஸ்ஸி ஜாக்சனின் தோல்வி பில் கிளின்டனின் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகக் கட்சியினரின் எழுச்சிக்கு வழி வகுத்தது. அதேபோல் இங்கிலாந்தில் பென்னிசம் முறியடிக்கப்பட்ட பிறகு டோனி பிளேயரின் தலைமையில் புதிய தொழிற்கட்சி உருவானது. ஆயினும் இந்தியாவில் உட்கட்சிப் போராட்டம் என்று எதுவும் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கவில்லை; நாட்டை புதிய தாராளவாதத்தை நோக்கி ஆளும் கட்சியே - எதிர்க்கட்சி அல்ல - இட்டுச் சென்றது. பாஜக 1980களில் மிகக் குறைவான தேர்தல் முக்கியத்துவத்துடனே இருந்தது.

பாஜகவின் முழுக்கவனமும் 1980களில் ராம ஜென்மபூமி இயக்கத்தின் மூலம் தன்னை வளர்த்துக் கொள்வதிலேயே  இருந்து வந்தது. குறிப்பிடத்தக்க பங்காளியாக தான் இருக்க வேண்டுமென்றால் ஆளும் வர்க்கத்தை தனது பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பாஜக உணர்ந்து கொண்டது. அதன் விளைவாக தனது பொருளாதார தேசியவாதத்தின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து விலகிய பாஜக சங்பரிவாருடன் இணைந்து புதிய தாராளவாதப் போக்குடன் தன்னை இணைத்துக் கொண்டது.    

காங்கிரஸால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய தாராளமய நகர்வு 1991க்குப் பின்னர் கூடுதல் வேகம் பெற்றது. ஆரம்பத்தில் அந்த நகர்விற்கான கருத்தொற்றுமையை பாஜகவிடமிருந்து காங்கிரஸால் பெற முடியவில்லை. அந்த நகர்வு வேகமெடுத்த பிறகே பிரதான இடதுசாரிகளைத் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் புதிய தாராளவாத திசையை ஏற்றுக் கொண்டன.   

1998ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக புதிய தாராளவாதக் கருத்தொற்றுமையின் ஒரு பகுதியாக மாறியது.  பிரதான இடதுசாரிகள் அதற்கு எதிராகப் போராட முயன்றாலும் தொழில்மயமாக்கலை முன்னெடுப்பதற்காக மேற்குவங்க மாநிலம் தீவிர விட்டுக்கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிலைமை உருவானது. இடதுசாரிகளின் உரையாடல் புதிய தாராளவாதத்திற்கு எதிராக இருந்த நிலையில் அவற்றின் நடைமுறை அப்படியிருக்கவில்லை என்பதால் அவர்கள் மிகப் பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டனர்.   

எழுபதுகளின் பிற்பகுதியில் உலகளாவிய போக்கு உருவானது. எரிக் ஹோப்ஸ்பாமைப் பின்பற்றி நான் அதனை கலாச்சாரத் தனித்துவ அரசியல் எனக் குறிப்பிட்டேன். தனிப்பட்டு சுதந்திரமாக அல்லது இணைந்து இனம், மதம், தேசியவாதம் உட்பட பல்வேறு வடிவங்களை அந்த நிகழ்வு எடுத்தது.     

முந்தைய முதலாம் உலகில் ஐரோப்பாவில் காணப்பட்ட இனவாதம், இனவெறி ஆகியவை அதற்கான எடுத்துக்காட்டுகளாகும். முந்தைய இரண்டாம் உலகில் முன்னாள் யூகோஸ்லாவியா, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தேசியவாதப் புறக்கணிப்பு நிலவியது. கிறிஸ்தவ, ஹிந்து, இஸ்லாமிய, பௌத்த தீவிரவாதம் என்று மத தீவிரவாதம் உலகளாவி இருக்கிறது. இஸ்ரேல் யூத மதத்தின் தீவிரவாத வடிவத்தை நிரூபிக்கும் வகையிலேயே இருக்கிறது.   

தேசிய வலதுசாரி அரசியல் மற்றும் சித்தாந்தங்களின் தனித்துவமான பண்புகளையே வலதுசாரி வெளிப்பாடுகளின் ஸ்திரத்தன்மை சார்ந்துள்ளது. வளர்ச்சிவாதத்தின் தோல்விகள் ஜனநாயகத்தைச் சீர்குலைத்த சித்தாந்த சீர்குலைவுகள், வருமானம், செல்வம், அதன் விளைவாக அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து குறிப்பிடத்தக்க விரக்திகள் உருவாவதற்கு வழிவகுத்தன. இந்தக் காரணிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பரவலான விரக்தியை, கோபத்தைத் தூண்டி விட்டன. அந்த அதிருப்தியை உருவாக்கிப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் சூழ்ச்சிக்கான களத்தை அது வடிவமைத்துக் கொடுத்தது.      

அது கடந்த பத்து ஆண்டுகளில் வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி சர்வாதிகார ஜனரஞ்சகத்தின் வடிவத்தை எடுத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.      

மையம் தாங்காது

பரம்பரை ஆட்சிக்கு காங்கிரஸ் கொடுத்த முக்கியத்துவம் அதனுடைய மேலாதிக்கத்தின் அடிப்படையை எந்த அளவிற்குத் தகர்த்தது அல்லது குறைந்தபட்சம் ஒத்திசைவான சித்தாந்தத்திற்காக மிகக் குறைவான பிரபலத்துடன் இருந்த குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு அந்த மேலாதிக்கத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியை மறுப்பதற்கு அது துணைநின்றது?

இந்தியாவைப் பொருத்தவரை புதிய தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்குள் குறிப்பிடத்தக்க வகையில் எதிர்ப்பு எதுவும் எழவில்லை. வலுவான கட்டமைப்புகளைக் கொண்ட கட்சிகளைப் போலல்லாமல் குடும்ப வாரிசு, தலைமையைச் சுற்றியுள்ள கூட்டம் போன்றவையே காங்கிரஸ் கட்சியின் தலைமை அடிப்படையில் புதிய தாராளவாதத்தை நோக்கி நகரத் துணைநின்றன.  

காங்கிரஸ் கட்சி மீது கணிசமான ஏமாற்றத்தை, அதிருப்தியை அது ஏற்படுத்தியது குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஒத்திசைவான அமைப்பை காங்கிரஸ் கட்சியால் ஏன் பராமரிக்க முடியாமல் போனது என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வியாகும். ஆதரவாளர், வாடிக்கையாளர் அடிப்படையிலான வலையமைப்பில் ஏற்பட்ட கட்சியின் மாற்றத்திலேயே அந்தக் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி உள்ளது.    

கீழ்நிலையில் இருந்தவர்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த கிராமப்புற மேல்தட்டுக் கட்டமைப்பை இழந்ததாலேயே அது தன்னுடைய ஒத்திசைவை இழந்தது. அதிகாரத்தைப் பெறும் வாய்ப்பால் மட்டுமே சமாதானமடைந்த பல்வேறு பிரிவினருக்கு அது காங்கிரஸுக்குள் புகலிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.  அத்தகைய கோஷ்டி பிளவுகளுடன், வலுவான ஒருங்கிணைந்த சித்தாந்தமும் இல்லாமல் போனதால் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் குடும்பம் மத்தியஸ்தராகப் பணியாற்ற வேண்டியதாயிற்று. அந்த வேலையும்கூட காங்கிரஸ் கட்டமைப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் அதிக அளவிற்கு சவாலை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.  

ஆக வாரிசு ஆட்சியின் முடிவு மட்டுமல்லாது, அதன் மிகப் பெரிய வீழ்ச்சியே காங்கிரஸ் கட்சி முற்றிலும் முக்கியமற்றுப் போனதற்குக் காரணமாகிப் போனதைக் காண முடிகிறது. கட்சியின் வரலாறு, நீண்ட ஆயுளைக் கருத்தில் கொண்டு இவையனைத்தும் மறந்து போகும் என்று நான் கணிக்க மாட்டேன். ஆனாலும் என்னால் ஒருகாலத்தில் லத்தீன் அமெரிக்காவில் இருந்த மையவாதக் கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சியும் பாரம்பரியமாக ஒரு வகையான மையவாதக் கட்சி என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.   

இந்த மையவாதக் கட்சிகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அந்தந்த சமூகங்களின் வளர்ச்சியில் முக்கியமான பங்குடன் இருந்தன. இறக்குமதிக்கு மாற்றாக தொழில்மயமாக்கல் போன்ற உத்திகளை அவை ஆதரித்தன. காங்கிரஸ் கட்சியைப் போல அவர்களும் தங்கள் அணிகளுக்குள் இடது, வலது பிரிவுகளை உள்ளடக்கி வைத்துக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் லத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சிக்கான அவர்களுடைய திட்டங்கள் தடுமாற்றம் அடைந்ததால் மையவாதக் கட்சிகள் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது.      

இதேபோன்றதொரு முறையை பொலிவியா, பெரு, பிரேசில், கொலம்பியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பல்வேறு மையவாதக் கட்சிகளிடமும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றில் பல கட்சிகள் அளவில் சிறுத்து விட்டன. அவை முந்தைய முதலாளித்துவ மையவாதத்திலிருந்து வெளிப்படையான வலதுசாரி நிறுவனங்களாக மாற்றம் கண்டு விட்டன அல்லது முற்றிலும் இருட்டடிப்புக்குள்ளாகி விட்டன. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை அது இன்னும் முழுமையாக மறைந்து விடவில்லை என்றாலும் அது சிறிய அளவில், வெளிப்படையான வலதுசாரிப் பிரிவாக மாற்றம் கண்டிருக்கிறது.  

பாஜகவின் எழுச்சிக்கான முக்கியமான தருணமாக ராம ஜென்மபூமி பிரச்சாரம் இருந்தது. எண்பதுகளின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட மிகப் பெரிய ஹிந்து தேசிய இயக்கத்தின் விளைவாக கடவுள் பிறந்த இடம் என்ற காரணத்தை வலியுறுத்தி ஹிந்து தேசியவாதிகள்  பதினாறாம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடித்துத் தள்ளினர். இந்தியர்களை ஹிந்து அரசியலுக்காக அணிதிரட்டவும், பாஜக அதிகாரத்தைக் கட்டியெழுப்பவும் ஹிந்து தேசியவாதிகள் இந்தப் பிரச்சாரத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டனர் என்பதை விளக்குங்களேன்.  

சுதந்திரப் போராட்ட காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய, நீண்ட காலம் நீடித்து நின்ற மக்கள் இயக்கமாக ஹிந்து தேசிய இயக்கம் இருந்தது. அது பல ஆண்டு காலம் நீடித்தது. வடக்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் மட்டுமல்லாது தெற்கு மற்றும் கிழக்கிலும் கூட மிகப் பெரிய இயக்கமாக அது இருந்தது. மற்ற அனுதாபிகளுடன் இணைந்து தொண்டர் படையை வலுப்படுத்திக் கொண்ட அந்த இயக்கம் அவர்களை மிகச் சாதாரண மக்களுடன் பல்வேறு வழிகளில் இணைத்து வைத்தது. அந்த இடத்தில்தான் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்து சாதாரண மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதில் அவர்கள் குறிப்பிடத்தக்க ஆற்றலுடன் இருந்தனர்.       
அந்தக் காலகட்டத்தில் கணிசமான அளவு இலக்கியங்கள், ராமர் குறித்த தொலைக்காட்சித் தொடரின் பிரபலம் தந்த ஆதரவால் ஏராளமான மத ஊர்வலங்கள், வாகன அணிவகுப்புகள் நடைபெற்றன. மிகவும் சாதாரண மக்கள் அந்த  இயக்கத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை அது வழங்கியது. 
எடுத்துக்காட்டாக வருங்காலத்தில் அந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கற்களைச் சேகரிப்பதன் மூலம் மக்கள் தங்களை அந்த இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டனர். செங்கற்களைப் பிரதிஷ்டை செய்வது அல்லது அதற்காக உதவுவது போன்று மேற்கொள்ளப்பட்ட முன்முயற்சிகள் பலவகைகளிலும் மக்கள் தங்கள் பங்கை அளிக்க ஊக்குவித்தன. அது அர்த்தமுள்ள முயற்சிகளில் தாங்கள் தீவிரமாக ஈடுபடுவதான சிந்தனையை அவர்களிடம் உருவாக்கியது.    

   
நீண்ட தூரம் நடந்து வருபவர்களுக்காக ‘ரொட்டிகள் மற்றும் பராத்தாக்களைத் தயாரித்துக் கொடுங்கள்’ என்று அவர்கள் மக்களிடம் கேட்பார்கள். அவற்றை அந்தப் பகுதியில் உள்ள குடும்பத்தினர் தயார் செய்து கொடுப்பார்கள். இதுபோன்ற பிரச்சாரங்களே அவர்களை மக்களுடன் இணைத்து வைத்தது; அது உண்மையில் மத உணர்வைக் கொண்டு நடத்தப்பட்ட நாடகம். அந்த இயக்கத்தை ஆதரித்தவர்களிடம் இருந்த மிகச் சாதாரண உணர்வுநிலைக்கும், அந்த இயக்கத்தில் முன்னணியில் இருந்த சங்பரிவார், ஆர்எஸ்எஸ், விஎச்பி உறுப்பினர்கள், தொண்டர்களின் உணர்வுநிலைக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருந்தது. அந்த அமைப்புகள் தங்களுடைய கலாச்சார செல்வாக்கு காரணமாக அந்தப் பிரச்சாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தன. இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ‘அங்கே ஒரு மசூதி இருப்பது தெரியும். அந்த மசூதியை இடிக்கப் போவதாக நாங்கள் கூறவில்லை. வேறொரு கோவில் அங்கே கட்டப்பட வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கப் போகிறது’ என்ற வகையிலேயே அந்த இயக்கத்திற்கான பெரும்பாலான மிகச் சாதாரண ஹிந்து ஆதரவாளர்களின் மனநிலை இருந்தது. ஆக ராமர் கோவில் கட்டும் யோசனைக்கு மக்களிடம் ஏற்கனவே ஆதரவு இருந்தது.       
ஆனாலும் இதுபோன்ற சராசரி உணர்வுகள் இறுதி இலக்கை, முடிவைத் தீர்மானிப்பதில்லை.  முன்னணியில் இருப்பவர்களின் உணர்வே எப்போதும் மசூதியை அழிப்பதை நோக்கிச் சாயும். அவர்களைப் பொருத்தவரை கட்டுவதைக் காட்டிலும் இடிப்பதே முக்கியமானது. இறுதியில் அதுதான் நடந்தேறியது.   
அது ‘எந்தவொரு இயக்கத்தின் திசையும் மிகச் சாதாரணமான சராசரி உணர்வுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது செயல்பாட்டில் இருக்கின்ற கூறுகளின் உணர்வுகளாலேயே  தீர்மானிக்கப்படுகிறது’ என்று வலியுறுத்திய விளாடிமிர் லெனின் போன்றவர்கள் மிகத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்த விஷயமாகவே இருந்தது. மேலும் அது பதினாறாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பிரச்சனையைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்ட வெகுஜன இயக்கத்தின் கட்டுமானமாக இருந்ததையும் கவனிக்க வேண்டும். வெகுகாலத்திற்கு கட்டமைக்கப்பட்ட பிரச்சனையாகவே அது இருந்துள்ளது.   

 
தங்கள் வாழ்க்கைக்காக, தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்காக அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே தங்கிக் கொள்ள விரும்புகின்ற, இந்தியாவில் மீண்டும் குடியேறுவது பற்றிய எண்ணம் எதுவுமில்லாத புலம்பெயர் இந்தியர்களில் பெரும்பகுதியினர் இந்த இயக்கத்தில் தங்களை நுழைத்துக் கொண்டனர். இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் ராமர் கோவில் இயக்கத்தை எதிர்க்கும் குற்றத்தை இழைத்து வருகிறார்கள் என்று அந்தப் புலம்பெயர் இந்தியர்கள் கூறிய அசாதாரணமான சூழலை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்றே கருதுகிறேன்.
அது மிகவும் அசாதாரணமான நிலையாகும். சாதிய அமைப்பு காரணமாக பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஹிந்துக்கள் அனைவருக்கும்  ஹிந்துக் கோவில்கள் திறந்து வைக்கப்படவில்லை என்ற உண்மையை அனைவரும் மறந்து விட்டதாகவே தோன்றுகிறது. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு அல்லது சாதியினருக்கு மட்டுமே பெரும்பாலான ஹிந்துக் கோவில்கள் உடைமையாக இருந்தன.    
அவையனைத்தும் மக்களுக்கு மறந்து போய் விட்டது. சரியான ஆதாரங்கள் எதுவுமற்ற கோபம், மனக்குறையின் கட்டுமானமே அத்தகைய உணர்வுகளுக்குக் காரணமாக இருப்பதை நாம் கண்டு வருகிறோம் என்பதையே நான் இங்கே கூற வருகிறேன். இதுபோன்றதொரு உத்வேகத்தை மக்களிடம் உருவாக்க முடிந்துள்ளதே அவர்களின் வெற்றிக்கான அறிகுறியாகும். செயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட ஒன்றைக் காட்டிலும் வரலாற்றுத் தவறு என உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றைச் சுற்றி மிகப் பெரிய இயக்கத்தைத் திரட்டுவது மிகவும் எளிதான காரியமாகவே இருக்கிறது.

 ஹிந்து தேசியத்தைக் கட்டமைத்தல்

தங்கள் அரசியலுக்கு ஏற்றவாறு ஆர்எஸ்எஸ்சும், பாஜகவும் எந்த அளவிற்கு ஹிந்து மதத்தை மாற்றி அமைக்க வேண்டியிருந்தது? ஒருங்கிணைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த மதம் என்ற ஹிந்து மதம் குறித்த அவர்களுடைய கற்பனையான விளக்கம் வரலாற்று யதார்த்தத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?   

ஹிந்து மதம் குறித்த பல்வேறு புரிதல்கள் இருந்துள்ளன. தத்துவார்த்த, நடைமுறை அம்சங்களை முறையே உயர்ந்த பாரம்பரியம், குறைந்த பாரம்பரியம் என்று ஹிந்து மதம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக ஒரு வாதம் இருந்து வருகிறது. இந்த இருமை இஸ்லாம் அல்லது கிறிஸ்தவம் போன்ற பிற மதங்களில் காணப்படுகின்ற இது போன்ற வேறுபாடுகளையே பிரதிபலிக்கிறது.     

அது ஒரு வகையான பார்வை. இரண்டாவது பார்வை பலவிதமான நடைமுறைகளைக் கொண்ட ஒரு மொசைக் போன்றது ஹிந்து மதம் என்பதாக உள்ளது. சில தனித்துவமான விஷயங்கள் இந்த மொசைக்கின் ஊடே இருந்து அது நிலைத்திருப்பதை உறுதி செய்கின்றன. அது இரண்டாவது பார்வை.  

ஒன்றைப் பற்றி மற்றொன்று எதுவும் அறிந்திராத, தங்களுக்குள் உண்மையான தொடர்புகள் எதுவுமே இல்லாத வெவ்வேறு பிரிவுகள், நடைமுறைகளால் ஹிந்து மதம் ஆனது என்று என்னிடம் உள்ள மூன்றாவது நிலைப்பாட்டை மிகத் துல்லியமானதாக நான் கருதுகிறேன்.  

பொது சகாப்தத்திற்கு முன்பு அல்லது பதினான்காம் அல்லது பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு வரலாற்றின் பிற்பகுதியிலேயே ஒரு மதமாக ஹிந்து மதம் என்ற சொல் தோன்றியது என்று மதிப்புமிக்க வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். பதினாறாம் நூற்றாண்டில்தான் ஹிந்து என்ற வார்த்தை உண்மையில் இந்திய மக்களுக்கான சுய அடையாளமாக முக்கியத்துவம் அடைந்தது.       வரலாற்றுரீதியாகப் பார்க்கும் போது ஹிந்து என்ற சொல் சிந்து என்ற வார்த்தையிலிருந்தே பெறப்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் தோன்றிய அந்த வார்த்தை சிந்து நதிக்கு அப்பால் உள்ள நிலத்தைக் குறிக்கிறது. ஹிந்து மதத்தை ஒற்றை மதம் என்பதான கருத்தை உருவாக்கிடத் பதினாறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டு வரை பல நூற்றாண்டுகளாக பல்வேறு காரணிகள் தங்கள் பங்கை அளித்து வந்துள்ளன. ஆர்எஸ்எஸ் இந்த வரலாற்றுப் பரிணாமத்தை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய திட்டங்களுக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தி  வடிவமைத்து வந்துள்ளது.    

இன்று பலவிதமான நடைமுறைகள், நம்பிக்கைகளை உள்ளடக்கிய ஹிந்து மதத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அந்த மதம் தனக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு ஹிந்துத்துவா வலியுறுத்தி வருகிறது.   

ஓரளவிற்கு அது சுய-கீழைத்தேயவியலின் வடிவமாக இருக்கிறதா?  

ஆமாம் அது ஒரு வகையில் நீங்கள் சொல்வதுடன் தொடர்புடையதாகவே உள்ளது. ஏனென்றால் ஒற்றை ஹிந்து மதம் என்ற கருத்து இந்திய சூழலுக்குள் பின்னர் திணிக்கப்பட்ட ஐரோப்பிய மதக் கருத்துகளின் பாதிப்புடனே உள்ளது. குறிப்பாக அந்தக் கருத்து ஹிந்து என்ற வலுவான உணர்வு தோன்றிய காலகட்டத்தில்தான் இந்திய தேசிய இயக்கத்திற்குள் கட்டமைக்கப்பட்டது.          

கூட்டு தேசியவாதம் பற்றி நான் முன்பு பேசியவற்றை இங்கே நினைவில் கொள்ளவும். காலனித்துவம் என்றால் என்ன? காலனித்துவம் என்பது காலனித்துவப்படுத்தப்பட்டவர்களின் தோல்வியைக் குறிப்பதாகும். காலனித்துவத்தால் தாங்கள் தோற்கடிக்கப்பட்ட யதார்த்தத்தை உணர்ந்து கொண்ட இந்தியர்கள் பலரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகத் தொடங்குகின்றனர்.

சுய மதிப்பு உணர்வுடன் மேல்தட்டினர் இருந்த காரணத்தால் இவர்களிடமும் அந்த சுயமதிப்பு உணர்வு எழுந்திருக்கலாம். அவர்கள் இந்த சுயமதிப்பு உணர்வை எவ்வாறு பெற்றார்கள்? தங்களைப் பற்றிய உணர்வு அவர்களுக்கு காலனியாதிக்கம் தோல்வியடைந்த கட்டத்தில் எவ்வாறு வந்தது? அவர்களால் பொருள் மட்டத்தில் அதனைக் கொண்டிருந்திருக்க முடியாது. ஆங்கிலேயர்களிடம் இருந்த தொழில்நுட்பம், ராணுவ மட்டத்திலும் அவர்களால் அதைக் கொண்டிருந்திருக்க முடியாது.        

ஆங்கிலேயர்களிடம் இல்லாத சுயமரியாதை உணர்வும், மேன்மையும் கொண்டவர்கள் என்று தங்களைப் பற்றி அவர்களால் எந்தப் பகுதியில் பேச முடிந்திருக்கும்? கலாச்சாரம், மதம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் மட்டுமே அவர்களால் அவ்வாறு பேச முடிந்திருக்கும். அந்த இடத்தில்தான் ஹிந்து மதம் குறிப்பிடத்தக்க அளவிலான சகிப்புத்தன்மை கொண்ட மதம், பொதுவான மதம்,  செமிடிக் மதங்களில் உள்ளதைப் போல முன்மொழிவு உண்மையைக் கொண்டிராத மதம் என்பதால் சிலுவைப் போர்கள், ஜிஹாத்கள் மற்றும் பல கொடூரங்கள் அதில் இல்லை என்ற கருத்தாக்கத்திற்கான கட்டுமானத்தின் ஆரம்பம் துவங்குகிறது.       

அரசியல் தேசியவாதத்தைப் பெறுவதற்கு முன்பாக ஒருவிதக் கலாச்சார தேசியவாதம் தேவைப்படும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய அடையாளத்தின் மீது தங்கள் சொந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருந்த தேசியவாதத்தின் பல்வேறு வடிவங்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் தோன்றின. அந்த வடிவங்களில் ஒன்று ஆர்எஸ்எஸ்சால் பரிந்துரைக்கப்பட்ட, சர்தார் பட்டேல் போன்ற தலைவர்களால் ஆதரிக்கப்பட்டது. ஹிந்துக்களின் ஒற்றுமையை அது வலியுறுத்தியது. மற்றொரு தேசியவாத வடிவம் இந்தியாவின் பன்முகத்தன்மையை தன்னுடைய வரையறுக்கும் பண்பாகக் கொண்டு ஒருங்கிணைந்த தேசியவாதக் கருத்தை முன்வைத்தது. அந்த அணுகுமுறை வரலாற்றுரீதியாக இந்தியாவின் பல்வேறு கலாச்சாரங்கள், மதங்களுக்கு இடையே இருந்த ஒற்றுமையை எடுத்துக்காட்டியது.      

வேற்றுமையில் ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் வேற்றுமையில் ஒற்றுமைக்கான மூலத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும் அல்லது கண்டுபிடிக்க  வேண்டும். அது மிகமிகப் பழமையானது என்று கருதப்படுவதால் இந்தியாவில் ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் இஸ்லாம் வருவதற்கு முந்தையதாகவே இருக்க வேண்டும். மறைமுகமாக அல்லது வெளிப்படையாக  ஹிந்து மதத்தின் குறிப்பாக பிராமண ஹிந்து மதத்தின் செழுமையில் அது வேரூன்றியுள்ளதையே கூற முனைகிறது.     

அப்போது இங்கே உருவான கட்டுமானத்தை உங்களால் காண முடியும். அந்தக் கட்டுமானம் சுதந்திரப் போராட்டக் காலத்தில் துரிதப்படுத்தப்பட்டு சுதந்திரத்திற்குப் பின்னரும் தொடர்ந்தது.  

இந்த எளிமையான எடுத்துக்காட்டைக் கவனியுங்கள்: 1931ஆம் ஆண்டு பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பழங்குடியின மக்கள் ஆன்மவாதிகள் என்று வகைப்படுத்தப்பட்டனர். ஆயினும் மானுடவியலாளர்கள் பழங்குடியின மக்களை இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நடத்தப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஹிந்துக்கள் என்ற பிரிவிலேயே  வகைப்படுத்தி வைத்தனர். அது ஹிந்துமயமாக்குகின்ற செயல்முறையை விளக்குகிறது. ஹிந்து மதம் என்பது தனித்துவம்  கொண்ட மதமாக இல்லை. மாறாக அது பல பிரிவுகளின் தொகுப்பாகவே உள்ளது. ஆயினும் அந்தப் பிரிவுகள் தங்களுக்கிடையே ஒருங்கிணைந்த அடையாளம் கொண்டிருப்பதை அது தடுக்கவில்லை. ஒரு பெரிய மதக் கட்டமைப்பிற்குள் அவரவருக்குச் சொந்தமான உணர்வை, ஆதரவை தனிநபர்களுக்கு அதற்குப் பங்களித்த பல்வேறு அழுத்தங்கள், தாக்கங்கள்  வழங்கின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் மத அடையாளம் கட்டமைக்கப்பட்டது.      

தேசியம் குறித்த ‘உறங்கும் அழகு’ என்ற கருத்தாக்கம்

தேசியவாதத்தின் வரலாற்றில் ஒருவகையில் இங்கே காலனித்துவத்திற்கு எதிரான தேசியவாதத்தின் வடிவத்தை மறுகாலனியாக்கம் எடுக்கத் தேவைப்படும் காலனித்துவத்துடன் சேர்ந்து உருவாகின்ற நவீன தேசிய அரசின் எழுச்சியில் மதரீதியான இணை இருப்பதாகவே தோன்றுகிறது. ஏகத்துவ மதங்களால் பல வழிகளில் மத அடையாளம் வடிவமைக்கப்பட்டுள்ள உலகில் தான் ஒருபோதும் இருந்திராத வகையில் ஒத்திசைவான ஒற்றை மதமாக மாற வேண்டிய நிலை ஹிந்து மதத்திற்கு ஏற்பட்டதாகவே தோன்றுகிறது.          

இங்கே முக்கியமான கேள்விகள் தேசியவாதம் மற்றும் தேசம் என்ற கருத்தாக்கத்தைச் சுற்றியே எழுகின்றன. தேசத்தைப் போன்று தேசியவாதமும் கட்டமைக்கப்பட்டது என்றே கூறலாம். தேசமும், தேசியவாதமும் நவீன கட்டுமானம் என்று வாதிடுகின்ற சிறுபான்மையினரும் இருக்கின்றனர்.  

வெகுஜன அரசியல் சகாப்தத்தைச் சார்ந்ததாக, நவீனமானதாக இருப்பதால் ஒருபுறத்தில் அது வெளிப்படையான உண்மையாகவே இருக்கிறது. அரசின் ஒரு வடிவமாக உள்ள தேசிய-அரசு நவீனமானதாக இருந்தாலும், அறிஞர்களுக்கிடையே தேசம் என்பது பழையதா அல்லது புதியதா என்ற சர்ச்சை நிலவி வருகிறது. தேசம் என்பது கலாச்சாரம் மற்றும் அரசியலாக இருப்பதாக நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் தேசத்தின் கலாச்சார பரிமாணத்தைக் காட்டிலும் அரசியல் பரிமாணமே முக்கியமானது என்று வலியுறுத்துகின்ற மாறுபட்ட கருத்து நவீனத்துவவாதிகளுக்கு இடையே இருந்து வருகிறது.        

தேசியத்தைக் காட்டிலும் கலாச்சார பரிமாணத்தை வலியுறுத்தி வருபவர்களுக்கு மாறாக தேசியவாதம் குறித்து இனம் அல்லது குடிமை என்று வகைப்படுத்தப்படுகின்ற வகையிலே பல்வேறு விளக்கங்கள் இருக்கின்றன. இருப்பினும் நான் அதை இன்னும் வித்தியாசமாகப் பார்க்கவே விரும்புகிறேன். தங்களுடைய கடந்த காலம் குறித்த கதைகளை அனைத்து நாடுகளுமே உருவாக்குகின்றன. அடிப்படைவாத தேசியவாதத்துடன் ஒப்பிடும்போது குடிமை தேசியவாதம் அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதாக, சகிப்புத்தன்மையுடன் இருக்கிறது.

தேசியவாதம் குறித்து அடிப்படையில் இரண்டு கண்ணோட்டங்கள் இருக்கின்றன. ரத்தம், மதம், இனம், மொழி அல்லது பழக்கவழக்கங்கள் தொடர்பில் உண்மையான பாரம்பரியத்தை உள்ளடக்கி, உண்மையான வாரிசு யார் என்பதில் சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் வரலாற்றுப் பாரம்பரியம் என்று தேசியவாதத்தைப் பார்க்கின்ற ஒரு கண்ணோட்டம் இருக்கிறது. தேசியவாதத்தைச் சமகால சமூகத்தால் வடிவமைக்கப்பட்ட நிகழ்கால மற்றும் எதிர்கால நிகழ்வு என்ற மாற்றுக் கண்ணோட்டமும் இருக்கிறது. அந்த மாற்றுப் பார்வையில் தேசியவாதம் என்பது கூட்டாக நாம் உருவாக்குவதாக உள்ளது. அத்தகைய முன்னோக்கு பன்முக கலாச்சாரம் மற்றும் பல்வேறு வழிகளில் அமெரிக்கர் அல்லது ஆஸ்திரேலியர் என அடையாளம் காணும் வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் காணப்படுவதைப் போன்ற தேசிய அடையாளத்திற்கான பல்வேறு விளக்கங்களை அனுமதிக்கிறது.    

அடிப்படைவாதக் கருத்தாக்கம் இருக்கும் போது ‘உங்களை இந்தியராக உணர்வதற்கு இதுதான் உண்மையான ஒரே வழி, இந்த அம்சம் மிகமிக முக்கியமானது. இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், இதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நீங்கள் நம்மைப் பலவீனப்படுத்துகின்ற ஆபத்தையே உருவாக்குகிறீர்கள். எங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்றே நீங்கள் கூறுவீர்கள்.   

அதுபோன்று சொல்வது வங்கதேசம் போன்ற இஸ்லாமிய அரசு தன்னுடைய ஹிந்து சிறுபான்மையினர் மீது  அல்லது முஸ்லீம் அல்லாதவர்களாகக் கருதப்படும் அகமதியா சமூகத்தின் மீது பாகிஸ்தான் எடுக்கும் நிலைபாட்டையே பிரதிபலிக்கும். அதுபோன்ற கருத்துகளையே இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்கள் முஸ்லீம் சிறுபான்மையினர் மீது தங்கள் உணர்வுகளாக எதிரொலிக்கின்றன. 

இதுபோன்ற மனநிலையே ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டு சில குழுக்களின் ஜெர்மானியத்தன்மையை ஜெர்மனியர்கள் கேள்விக்குள்ளாக்குவது அல்லது இங்கிலாந்தின் கலாச்சாரம் ஆசியர்களால் சீரழிக்கடிக்கப்பட்டதைப் பற்றிய கவலைகளை மார்கரெட் தாட்சர் வெளிப்படுத்துவது போன்ற சூழல்களில் தெளிவாக வெளிப்படுகிறது. அது மெக்சிகன் குடியேறிகள் அல்லது கறுப்பின அமெரிக்கர்கள் உண்மையான வெள்ளையர்கள் அல்ல எனக் காண்கின்ற அமெரிக்க வெள்ளை தேசியவாதிகள் சிலரின் - அமெரிக்காவில் குறைந்து கொண்டே வருகின்ற சக்தியாக அவர்கள் இருந்தாலும் – முன்னோக்கை பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன். ஆனாலும் ஹிந்து தேசியவாதம் இந்தியச் சூழலில் நிச்சயம் அதிகரித்தே வருகிறது என்பதை உறுதியாகக் கூற முடிகிறது.       

இங்கே தேசியம் குறித்த ‘உறங்கும் அழகு’ என்ற கருத்தாக்கமே நடைபெறுகிறது. இந்தியச் சூழலில் உறங்கும் அழகு என்ற இந்தக் கருத்து நன்கு அறியப்பட்ட கதை ஒன்றுடன் இணைந்துள்ளது. நெடுங்காலம் செயலற்ற நிலையில் இருந்து வந்துள்ள ஹிந்து மதத்தையே அந்தக் கதையில் வரும் ‘உறங்கும் அழகு’ குறிக்கிறது. அந்த விசித்திரக் கதையில் இளவரசர் சார்மிங் ஒரு முத்தத்தின் மூலம் உறங்கும் அழகை எழுப்புவார். அதைப் போல ஹிந்துத்துவ சக்திகள் அரசியல் நடவடிக்கை மற்றும் ஆதரவை அளிப்பதன் மூலம் ஹிந்து மதத்தை தூக்கத்திலிருந்து எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ஹிந்து மதத்தின் தூக்கத்திற்கு துருக்கியர்கள், ஆப்கானியர்கள், பாரசீகர்கள், முகலாயர்கள் போன்ற முஸ்லீம் ஆட்சியாளர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுக் காரணிகள் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.      

முஸ்லீம்களை ஹிந்து மதத்தைத் தூங்க வைத்த தீய சூனியக்காரிகள் என்று சித்தரிப்பதன் மூலம் அந்த சித்தாந்தம் முஸ்லீம்களுக்கு எதிரான உணர்வைத் திரட்ட முயல்கிறது. இயல்பான தேசியவாதத்தின் ஒரு வடிவத்தை அது முன்வைக்கிறது. புத்துயிர் பெறக்கூடியதாக உள்ள நிலையான கலாச்சாரப் பண்புகளில் வேரூன்றிய, காலமற்ற ஹிந்து அடையாளத்தின் இருப்பை அது உறுதிப்படுத்துகிறது. நீங்கள் முன்பு குறிப்பிட்டதைப் போல இந்த இயல்பான  தேசியவாதம் உண்மையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மன் காதல் பாரம்பரியத்தில் இருந்தே வந்தது - அது இந்தியாவில் இறக்குமதி செய்து கொள்ளப்பட்டது. ஆர்எஸ்எஸ் மற்றும் ஹிந்து தேசியவாதத்தை ஆதரிப்பவர்களின் கருத்துகள் இந்தியாவில் தோன்றியவையாக அல்லாமல் மேற்குலகிடமிருந்து தழுவி ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக இருப்பது முற்றிலும் முரண்பாடாகவே தோன்றுகிறது!      

இந்திய வரலாற்றை அதற்காக மிகப் பெரிய அளவில் மாற்றி எழுத வேண்டியிருக்கும். இப்போது பாஜக அவ்வாறு வரலாற்றை மாற்றி எழுதவே முயன்று வருகிறது.   

ஆம். ஆயிரம் ஆண்டுகால அந்நிய ஆட்சியைப் பற்றி பேசியதுதான் 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றவுடன் மோடி பேசிய முதல் பேச்சாகும். அதையே வேறு விதமாகச் சொல்வதென்றால் அவரைப் பொருத்தவரை பிரிட்டிஷார் மீது எந்தவித ஆர்வமும் காட்டவில்லை; பதினாறாம் நூற்றாண்டு வரை அவர்கள் இங்கே வரவில்லை.   

 

ஆம். கிழக்கிந்திய கம்பெனி பதினாறாம் நூற்றாண்டில் வந்தது என்றாலும் அந்நியர்கள் வந்தனர் என்று குறிப்பிடும் போது மோடி சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்று கூறுகிறார். அனைவரையும் விடுத்து கடந்த காலத்தில் படையெடுத்த குறிப்பிட்ட வெளிநாட்டினர் மீது மட்டுமே அவர் குற்றம் சாட்ட விரும்புகிறார். இந்தியா ஒருபோதும் ஒன்றுபட்ட நாடாக இருந்திருக்கவில்லை - பலரும் இணைந்த கூட்டமைப்பாகவே அது இருந்துள்ளது. இந்தியா என்ற பெயர் பல்வேறு அரசுகளுடன் உலகில் இருந்த ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட பெயராகும். ஆக இப்போது நடப்பவற்றை நம்மால் வரலாறு மீண்டும் எழுதப்படுவதாக மட்டுமே காண முடிகிறது.   

இந்தியா மீது வெளியிலிருந்து தொடுக்கப்பட்ட படையெடுப்பு முகலாயர்களுக்கு முன்பே  இருந்தது என்று பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் கருதுகிறார்களா?  

முகலாயர்கள் பின்னர்தான் வருகிறார்கள். அவர்களுக்கு முன்பாகவே ஆப்கானியர்கள், துருக்கியர்கள்,  பாரசீகர்கள் இருந்துள்ளனர். வெவ்வேறு பகுதிகளில் இருந்து இந்தியாவிற்குள் பல்வேறு ஆட்சியாளர்கள் நுழைந்துள்ளனர்.

பிரிவினைக்கான பாரம்பரியம்

சுதந்திரமான பூர்வீக இந்தியா எங்கே இருந்தது? அது எப்போது இருந்தது?

முஸ்லீம்கள் வருவதற்கு முன்பாகவே மன்னர்களின் ஆட்சியின் கீழ் வராத சில பகுதிகள் இந்தியாவில் இருந்தன.  வணிகம் காரணமாக இங்கே வந்தவர்களே அந்த இடங்களில் ஆட்சியில் இருந்தனர். அரேபியா, இந்திய மேற்குக் கடற்கரைக்கு இடையிலான வர்த்தகத்தின் விளைவாக ஆரம்பகால முஸ்லீம்கள் சிலர் கேரளா போன்ற இடங்களுக்கு வந்து சேர்ந்தனர். கிறிஸ்தவர்களும் அதேபோல கி.பி மூன்றாம் அல்லது நான்காம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவை அடைவதற்கு முன்பே இந்தியாவிற்கு வந்துள்ளனர்.        

பௌத்தம் போன்ற இந்தியப் பூர்வீக மதங்கள் ஹிந்து மதத்துடன் தொடர்புடையவை என்ற வாதத்தை ஹிந்துத்துவா முன்வைக்கிறது. அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையாகக் கருதப்படுகின்றன. தாய்நாடு இந்தியாவாக இருந்து, அவர்களுடைய மதம் இந்தியாவைச் சேர்ந்ததாக இல்லாதவர்கள் உண்மையான இந்தியர்கள் என்று  கருதப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக ஜைனர்கள் சீக்கியர்கள் மற்றும் பிறரைப் போல பழங்குடியினராக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பௌத்தர்கள் பிரச்சனைகளை  எதிர்கொள்வதில்லை.

அவர்களுக்கு முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுடன் பிரச்சனைகள் உள்ள போதிலும் கிறிஸ்தவ மக்கள்தொகை இரண்டரை சதவிகிதம் மட்டுமே இருப்பதால் கிறிஸ்துவர்களிடம் குறைந்த அளவிற்கே பிரச்சனை  இருக்கிறது.. பிரிவினைக்கு முன்பாக மூன்றில் ஒரு பங்காக இருந்த முஸ்லீம் மக்கள்தொகை தற்போது பதினான்கு சதவிகிதமாக உள்ளது. அயல்நாட்டு மதத்தைக் கொண்டவர்களாகக் கருதப்படும் கம்யூனிஸ்டுகளுடனும் பாஜகவிற்கு பிரச்சனைகள் உள்ளன. கம்யூனிஸ்டுகளிடமுள்ள சர்வதேசியத்தின் காரணமாக அவர்களை இந்திய தேசத்தின் மீது விசுவாசத்துடன் இல்லாதவர்களாகவே பாஜகவினர் கருதுகின்றனர்.    

பிரிவினையைப் பற்றி பேசுகையில் 1947ஆம் ஆண்டு பிரிவினை பிரிட்டிஷ் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வந்து இந்தியாவையும் பாகிஸ்தானையும் உருவாக்கியது. அதுவே காலனித்துவத்திலிருந்து பின்காலனித்துவ சகாப்தத்திற்கு மாறுவதற்கான அடித்தளமான தருணமாக இருந்தது என்று கூறலாமா? பத்து முதல் இருபது லட்சம் மக்களைக் கொன்ற, பல லட்சக்கணக்கானோர் இடம்பெயரக் காரணமாக இருந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறித்த அந்த நிகழ்வு வகுப்புவாத வன்முறைச் செயல்கள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்பட்ட பின்காலனித்துவ இந்தியாவிற்கான களத்தை அமைத்துக் கொடுத்தது.

உண்மையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அது இருந்த போதிலும், அதன் விளைவு தவிர்க்க முடியாததாக இருக்கவில்லை. இந்தியாவில் கூறப்பட்டு வரும் வழக்கமான கதைகளுக்கு மாறாக காங்கிரஸ் கட்சியே அந்தப் பிரிவினைக்கான முதன்மைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் தலைவர் முகமது அலி ஜின்னா கருத்தில் கொள்ளத் தயாராக இருந்த தளர்வானதொரு கூட்டமைப்பை ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் அப்போது தயாராக இருக்கவில்லை.

மாறாக மேலாதிக்கத்துடனான, மையப்படுத்தப்பட்ட, ஒன்றுபட்ட இந்தியாவையே காங்கிரஸ் தன்னுடைய இலக்காகக் கொண்டிருந்தது. பிரிவினைக்கான பழி நிச்சயமாகப் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியதாக இருந்த போதிலும், காங்கிரஸ் கட்சியே அந்தப் பழியை முக்கியமாகச் சுமக்க வேண்டும் என்பதே எனது பார்வையாகும். தனது பேரம் பேசும் சக்தியை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஜின்னா பின்னர் பயன்படுத்திக் கொண்ட வகுப்புவாத கோரிக்கைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்பது அதன் பொருள் கிடையாது. பிரிவினையை ஒருபோதும் அத்தகைய நடவடிக்கைகள் நியாயப்படுத்தாது.    

வெளிப்படையாக கூட்டமைப்பு என்ற சிந்தனையுடன் இருந்த ஜின்னா ஹிந்துக்கள் பெரும்பான்மையுடன்  உள்ளதொரு நாட்டில் முஸ்லீம்களின் நிலைமை குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டவராகவும் இருந்தார். அவரிடமிருந்த அந்த அக்கறையே இறுதியில் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமல்லாது தாராளவாதிகள் என்று தங்களை அழைத்துக் கொள்பவர்களாலும் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தும் வகையில் பிரிவினை என்ற சோகத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தது. அந்தக் குற்றச்சாட்டு நியாயமற்றது என்றாலும், முஸ்லீம்கள் மீதான கோபத்திற்கு அதுவே குறிப்பிடத்தக்க ஆதாரமாக மாறியது.     

பிரிவினை சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவை வரையறுக்கும் அம்சமாக இருந்தது. அப்போதைய  நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சி, மகாத்மா காந்தியின் படுகொலை காரணமாக நிகழ்ந்த வகுப்புவாத வன்முறைகள் ஆரம்பத்தில் உடனடியாக நிகழவில்லை - உண்மையில் அது நடப்பதற்கு சிறிது காலம் ஆனது. இந்தியாவை ஒருங்கிணைக்கும் பிரச்சனையில் ஹைதராபாத் மாகாணத்தில் 1948ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவிலே படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன. 1948க்குப் பிறகு குறிப்பாக 1960களின் முற்பகுதியிலே வகுப்புவாதக் கலவரங்கள் அதிக முக்கியத்துவம் பெற்றன.     

சுதந்திர இந்தியாவில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளின் பங்கேற்பு கவலையளிப்பதாக இருந்தது. எண்பதுகளின் பிற்பகுதி வரையிலான வன்முறைகள் குறித்து அதிகாரபூர்வ இந்திய ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களை பால் ப்ராஸ் என்ற அமெரிக்க அறிஞர் தொகுத்துக் கொடுத்துள்ளார். அந்த தரவுகள் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் பதின்மூன்று முதல் பதினான்கு சதவிகிதம் என்ற அளவில் மட்டுமே இருக்கின்ற முஸ்லீம்கள் வகுப்புவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்திற்கும் அதிகமானவர்களாக இருப்பதை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.      

அதற்குப் பிறகு வகுப்புவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களின் மதரீதியான புள்ளிவிவரங்களைப் பெறுவது மிகவும் கடினமாகிப் போனது என்றாலும், வகுப்புவாத வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள் என்பதை உறுதியுடன் சொல்ல முடியும். கணிசமான எண்ணிக்கையிலான ஹிந்துக்கள் இறந்து போன வகுப்புவாதச் சம்பவங்களை அல்லது முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களால் அத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிகழ்வுகளை மறுப்பதற்கில்லை.    

ஹிந்து வலதுசாரிகளைப் பொருத்தவரை வகுப்புவாத வன்முறையின் அரசியல் செயல்பாடு எவ்வாறாக இருக்கிறது? மிகப் பெரிய அளவில் நடைபெறுகின்ற கலவரங்களைப் பற்றி சிந்திக்கும்போது அவை ஒரு வகையான அரசியல் செயல்பாட்டுடன் இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.  தன்னிச்சையாக,  ஏறக்குறைய அரசியல் சார்பு அல்லது கூடுதல் அரசியல் தன்மையுடனே அந்த வன்முறைகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் வகுப்புவாத வன்முறைகள் அதுபோன்று இருப்பதில்லை என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.     

இல்லவே இல்லை. வகுப்புவாத வன்முறைகளுக்கு தயாரிப்பு வேலைகள் எப்போதும் தேவைப்படும். அவற்றிற்கு ஒரு தூண்டுதல், பின்தொடர்வு நிச்சயம் தேவைப்படும். அதற்காக வேண்டுமென்று திட்டமிட்டே பதற்றம், பயம் நிறைந்த சூழல் உருவாக்கப்படும். தூண்டுதல்கள் உருவாக்கப்படலாம் அல்லது அவை சிறிய சம்பவங்களிலிருந்து தோன்றலாம். அந்த தூண்டுதல்கள் தீப்பொறிகளாகச் செயல்படும். அதனைத் தொடர்ந்து சில குழுக்களால் அணிதிரட்டல் மேற்கொள்ளப்படும். வன்முறைகள் தன்னிச்சையாக நிகழ்கின்றன அல்லது திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன என்பது போன்ற கருத்துகள் நம்மைத் தவறாகவே வழிநடத்துகின்றன. ஏனெனில் வெளித்தோற்றத்தில் தன்னிச்சையாக நிகழ்வதாகத் தோன்றுகின்ற நிகழ்வுகள்கூட ஓரளவிற்கு கட்டமைக்கப்பட்டே இருக்கும். பெரிய அளவில் நிகழ்த்தப்படும் வகுப்புவாதக் கலவரங்கள் தன்னிச்சையாக ஒருபோதும் நிகழ்வதில்லை. ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற அரசியல் அமைப்புகளால் பெரும்பாலும் அவை அரசியல் ஆதாயத்திற்காக திட்டமிடப்பட்டே மேற்கொள்ளப்படுகின்றன.   

ஆக வன்முறைகளுக்குப் பின்னால் ஓர் அரசியல் செயல்திட்டம் இருக்கிறது. முஸ்லீம்களைக் குறிவைக்கும் பெரும்பாலான வகுப்புவாதக் கலவரங்கள் மிகச் சிறிய அளவில் அல்லது மிகப் பெரிய அளவில் இல்லாமல் மிதமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களிலேயே நிகழ்வதாக ஸ்டீபன் வில்கின்சன் போன்ற ஆய்வாளர்களின் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.   

வகுப்புவாதக் கலவரங்கள் பெரும்பாலும் சமீபத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல்களுடன் மிக  நெருக்கமாகப் பிணைக்கப்பட்டே நிகழ்த்தப்படுகின்றன. பொதுவாக இந்தக் கலவரங்கள் சிறிய நகரங்களிலேயே நிகழ்கின்றன. அவை போட்டியாளர்களை அகற்றுவது, தனிப்பட்ட லாபத்திற்காக வன்முறையின் மூலம் சொத்துக்களைக் கைப்பற்றுவது போன்றவற்றிற்கான வாய்ப்புகளாகவே வர்த்தகர்களுக்குப் பயன்படுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வெற்றி பெறும் தரப்பில் உள்ளவர்களுக்கு வகுப்புவாதக் கலவரங்கள் மூலம் பலன்கள் கிடைக்கின்றன.   

பழைய காலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக நரேந்திர மோடி 2002ஆம் ஆண்டில் வகுப்புவாதப் பதற்றங்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டதாகத் தோன்றிய சம்பவத்தை விசாரணை செய்த உண்மை கண்டறியும் குழுவில் நானும் இருந்தேன். ஹிந்துக்களை ஏற்றிச் சென்ற ரயில் பெட்டி எரிக்கப்பட்டது. மோசமான ஆத்திரமூட்டலை அதுவே ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடந்த வன்முறையை நியாயப்படுத்தும் வகையிலான அறிக்கைகளை மோடி வெளியிட்டார். ‘மக்களின் கோபத்தைத் தூண்டி விடுவதற்காக வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் வேண்டுமென்றே குஜராத்தின் தலைநகருக்குக் கொண்டு வரப்பட்டன. தங்கள் கோபத்தை ஹிந்துக்கள் வெளிப்படுத்துவதை மோடி ஊக்குவித்தார்’ என்று அப்போது துன்புறுத்தலுக்கு ஆளானவர்கள் நாங்கள் மேற்கொண்ட உண்மை கண்டறியும் பணியின் போது எங்களிடம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் எங்கள் அறிக்கையில் அந்தக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

நடந்த படுகொலைகளுக்கு ஒரு வகையில் நியாயம் கற்பிக்கும் வகையில் ‘ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை இருக்கிறது’ என்பது போன்ற அறிக்கைகளை மோடி வெளியிட்டார். ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்த எரிவாயு சிலிண்டர்களைப் பயன்படுத்தி அந்த வன்முறையில் பல இடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.

கும்பல் வன்முறைத் தாக்குதல்கள் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான முஸ்லீம்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து வெளியேறி மிகுந்த அவநம்பிக்கையுடன் முகாம்களில் வாழ்ந்து வந்த நிலையில், அந்த முகாம்களுக்குச் சென்ற மோடி மிகவும் இழிவான கருத்துகளை வெளியிட்டார். அதிகமாகக் கருவுறுதல், பல மனைவிகளை வைத்திருப்பது போன்ற காரணங்களால் முஸ்லீம்கள் பல குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று முஸ்லீம்களைத் தாக்கிய அவர் அந்த முகாம்களை ‘குழந்தைகளை உற்பத்தி செய்யும் மையங்கள்’ என்று குறிப்பிட்டார். அவையனைத்தும் முட்டாள்தனமான பேச்சுக்களாகவே இருந்தன. ஆனாலும் எவ்விதப் பாதிப்புமின்றி அவரால் எல்லாவற்றிலிருந்தும் விடைபெற்றுக் கொள்ள முடிந்தது.  

தங்கள் வணிகத்திற்கு இடையூறுகளை விரும்பாத மூலதனத்தின் நலனைக் கருத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை என்பதால் இந்தக் காலகட்டத்தில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரிய வகுப்புவாத கலவரங்கள் எதுவும் தேவைப்படவில்லை. ஆனாலும் முஸ்லீம்கள் மீது நிகழ்த்தப்படும் நுண்ணிய தாக்குதல்களை இயல்பாக்குவது, சாதாரணமாக்குவது போன்ற மாற்றங்கள் நடந்தேறின. இங்கு, அங்கு என்று எங்கும் முஸ்லீம்கள் மீது தாக்குதல்கள் நடக்கின்றன. எதிரிகளாகக் கருதப்படும் மற்றவர்கள் - எடுத்துக்காட்டாக பகுத்தறிவுவாதிகள் – மீது பெருமளவில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஆனாலும் தாக்குதலை நடத்துபவர்களால் வழக்கிலிருந்து எளிதில் தப்பித்துக் கொள்ள முடிகிறது. காவல்துறை, உள்ளூர் நீதித்துறை மற்றும் பிற அதிகாரிகளின் ஒத்துழைப்பு என்பது இந்த வழக்குகளில் பொதுவானதாக இருக்கிறது.  

2002ஆம் ஆண்டு பாஜக மற்றும் மோடி அடைந்த வெற்றிக்குப் பிறகும் அவரை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். சர்வதேச உறவுகளின் நடைமுறைத் தன்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தங்களுடைய ஜனநாயக நிலையைப் பொருட்படுத்தாமல், தங்கள் நலன்களுக்கே நாடுகள் முன்னுரிமை அளிப்பதால் அதுவொன்றும் ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை. அதைப் பற்றி நான் அதிகம் ஆராயப் போவதில்லை. ஆனாலும் அதிகரித்து வரும் பாஜகவின் பிரபலத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ள மூன்று முக்கியமான நிகழ்வுகளை இங்கே  முன்னிலைப்படுத்துகிறேன்.

இந்த மூன்று முக்கிய நிகழ்வுகளும் பல்வேறு வழிகளில் அரசியல் வன்முறைக்கான அடையாளமாக இருப்பதை நினைவில் கொள்ளவும். அவை பாஜக மற்றும் சங்பரிவாரைப் பாரம்பரியமாகப் பின்பற்றுபவர்களுக்கு அப்பாற்பட்டு அவர்களுடைய ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவதில் முக்கிய பங்குடன் இருக்கின்றன.

முதல் நிகழ்வு - 1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு. இரண்டாவது 1998ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுத சோதனை வெடிப்புகள் மூலம் இந்தியாவை அணு ஆயுத நாடாக அறிவித்தது. மூன்றாவதாக குஜராத் மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவர்களிடம் மோடி மீதான புகழை அதிகமாகத் தூண்டிய 2002ஆம் ஆண்டு குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம், அதுவே இறுதியில் சங் பரிவாருக்குள் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக மோடி வருவதற்கு வழிவகுத்தது. ஆர்எஸ்எஸ்சின் ஹிந்துத்துவா அகராதியில் உள்ள இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் அதற்கு அப்பால் - அதிக வலிமையை நோக்கிய பாதையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன. அது மிகவும் அசாதாரண நிலையாகும்.  

அணிசேராது இருப்பது போன்ற தோற்றம்

இந்தியாவை வல்லரசாக மாற்றுவதுதான் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு உள்ள முக்கிய நோக்கமாகும். 1962ஆம் ஆண்டில் சீனாவுக்கு எதிராக தோல்வியுற்ற போர், பாகிஸ்தானுடனான தொடர்ச்சியான மோதல்கள், காஷ்மீரில் நிலவி வரும் பதற்றங்கள், கிழக்குப் பிராந்தியங்களில் நக்சலைட் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், அணுசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் வெற்றிகரமான வளர்ச்சி, தெற்காசியாவில் அணு ஆயுதங்களைக் களைவதற்கான பாகிஸ்தானின் முன்மொழிவுகளுக்கு எதிர்ப்பு மற்றும் விண்வெளி ஆய்வில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களில் அந்த நோக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது.  

காந்தியாலும், அவரது அகிம்சை போராட்ட தத்துவத்தாலும் அடையாளப்படுத்தப்பட்ட - குறிப்பாக மேற்குலகால் உணரப்பட்ட இந்தியாவிற்கான பிம்பத்திற்கு மாறாக இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு ஒரு வலுவான,  ஆண்மை தேசமாக இருக்க வேண்டியதன் பின்னணி என்ன?

முதலாவதாக நேருவை, அவரது வாரிசுகளை வழிநடத்திச் சென்ற நோக்கம் காந்தியிடமிருந்து வேறுபட்டது என நீங்கள் சொல்வது சரிதான். காந்தி தன்னை ஒரு முன்மாதிரியாகக் கருதுவதைத் தவிர சர்வதேச விவகாரங்கள் அல்லது வெளியுறவுக் கொள்கை பற்றி அதிகம் சிந்தித்தவரில்லை. கலப்பு தேசியவாதத்தை வளர்ப்பதற்கான காந்தியின் அணுகுமுறை ஒட்டோமான் பேரரசு தூக்கியெறியப்பட்ட பின்னர் துருக்கியில் கலீஃபாவை மீட்டெடுக்க முயன்ற கிலாபத் இயக்கத்தின் போது இந்தியாவில் சில முஸ்லீம் பிரிவுகளுக்கு ஆதரவளித்ததைப் போன்று ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக வாதிடுவதை உள்ளடக்கியே இருந்தது.     

இப்போது அது நிச்சயம் ஒரு வித்தியாசமான அறிக்கையாகவே இருக்கும். மத அடையாளங்களின் அடிப்படையில் மதச்சார்பற்று இருக்காமல் தற்போதுள்ள மத அடையாளங்களின் அடிப்படையில் இந்திய ஒற்றுமையை உருவாக்குவதே காந்தியைப் பொருத்தவரை முக்கியமானதாக இருந்ததையே அது சுட்டிக்காட்டுகிறது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற இந்தியா போராடிக் கொண்டிருந்தாலும் அரபு நாடுகளில் இருந்த பல நாடுகள்  ஒட்டோமான் பேரரசின் நுகத்திடமிருந்து விடுபட விரும்பியதைப் பற்றி காந்தி நிச்சயமாகக் கவலைப்படவில்லை. அவர் கலீஃபாவை நிறுவுவதையே ஆதரித்தார்.     

சர்வதேச விவகாரங்களில் அவரது பார்வை மட்டுப்படுத்தப்பட்டதாக, பாரபட்சமாகவே இருந்தது. ஆனாலும் அவர் பிற்காலத்தில் தோன்றிய தீவிரமான, அதிக அளவில் ராணுவமயமாக்கப்பட்ட இந்திய தேசியவாதத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. மறுபுறத்தில் அணிசேரா இயக்கத்தின் ஆதரவாளராக, முதன்மைப் பேச்சாளர்களில் ஒருவராக நேரு திகழ்ந்தார்.

மூன்றாம் உலகத்து அணிசேரா இயக்கத்தில் உண்மையில் மூன்றாம் உலகம் என்று ஒன்றே கிடையாது என்பதே அந்த இயக்கம் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும். ஏனென்றால் மூன்றாம் உலக அணிசேரா இயக்கத்தில் உறுப்பினர்களாக கணிசமான அளவில் முன்னேறிய, உண்மையில் ‘மூன்றாம் உலகம்’ என்று அழைக்கப்பட முடியாத பல நாடுகளும் இருந்தன.

உண்மையில் ‘அணிசேரா’ என்று எதுவும் கிடையாது. அவ்வாறான இயக்கம் எதுவும் உண்மையில் இருக்கவில்லை. அணிசேராமை என்ற கருத்து அடிப்படையிலேயே மிகவும் பாசாங்குத்தனம் கொண்டதாகும். அணிசேரா இயக்கத்தை தங்களுக்கான இடத்தை அதிகரித்துக் கொள்வதற்காகவே ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் பிற இடங்களில் இருந்த புதிதாகச் சுதந்திரம் பெற்ற நாடுகளின் - அந்த நாடுகளில் பெரும்பாலானவை மேற்கு அல்லது கிழக்கு நாடுகளுடன் இணைந்திருந்தாலும்கூட - தேசிய முதலாளித்துவவாதிகள் ஏற்றுக் கொண்டனர். அந்த அணிசேர்க்கையில் இந்தியா முழுமையாக இடம் பெறவில்லை – அதன் காரணமாக தன்னை அணிசேரா நாடுகளுக்குள் அதிகம் அணிசேராத நாடு போல் இந்தியாவால் காட்டிக் கொள்ள முடிந்தது!   

அணிசேரா சகாப்தத்தில் குறிப்பாக காஷ்மீர் அல்லது பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஐ.நா மற்றும் பிற இடங்களில் விமர்சனங்களை எதிர்கொண்ட இந்தியா பெரும்பாலும் சோவியத் யூனியனையே அதிகம் நம்பியிருந்தது. இருப்பினும் அந்த நேரத்தில் அடுத்தடுத்து வந்த  தலைமைகளின் கீழ் ஒன்றுபட்டிருப்பதை இந்தியா உறுதி செய்து கொண்டது. பிரிட்டிஷ் இந்தியாவால் நிறுவப்பட்ட பிரதேசங்களில் இருந்து  நாகாலாந்து, காஷ்மீர் போன்றவை சுதந்திர இந்தியாவில் பிரிந்து செல்வதைத் தடுக்க வன்முறை, அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அவ்வாறு செய்வதற்கு இந்தியா தயாராகவே இருந்தது. 

ஓர் அண்டை நாட்டை முழுவதுமாக விழுங்கி, மற்றொரு நாட்டைப் பிரித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள். காப்பாட்சியுடன் தனி நாடாக இருந்த சிக்கிமை இந்தியா 1975ஆம் ஆண்டு முழுமையாக விழுங்கிக் கொண்டது.  

வங்கதேச தேசிய விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் பங்கு பாகிஸ்தானைப் பலவீனப்படுத்துகின்ற உத்திகளுடானான உந்துதலுடனே இருந்தது. வங்கதேசத்தால் ஓராண்டிற்குள் தானாக விடுதலை பெற்று விட முடியும் என்று நம்பிய வங்கதேசத் தலைவர்கள் இந்திய ஆதரவு குறித்து திருப்தியுடன் இல்லை என்றாலும் அந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டது. அந்த விவகாரம் குறித்து எழுதப்பட்ட சிறந்த புத்தகங்களில் ஒன்றாக லாரி லிஃப்சுல்ட்ஸ் எழுதிய ‘வங்கதேசம்: முடிவடையாத புரட்சி’  என்ற புத்தகம் இருக்கிறது.   

இந்திய அரசு அப்போதிருந்து - குறிப்பாக நேருவுக்குப் பிந்தைய காலத்தில் - அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் தலையிட்டது. 1988ஆம் ஆண்டு மாலத்தீவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, தனது தலையீடு தேவைப்படாத நிலைமையிலும் இந்தியா தனது படைகளை அங்கே அனுப்பி வைத்தது.  

ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம் மாறியதைத் தொடர்ந்து மலைத்தொடர் அரசுகளிடம் இந்தியா தந்தைவழி அணுகுமுறையுடன் நடந்து கொண்டது. அதன் விளைவாக சிக்கிம் விழுங்கப்பட்டது. பூட்டான், நேபாளம் மோசமாக நடத்தப்பட்டன. இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட காலனித்துவ கால சிந்தனை, கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருந்தால் சீன எல்லைப் பிரச்சினையில் கூட தீர்வு சாத்தியமாகியிருக்கலாம். பிராந்திய எல்லைகள் மீதான இத்தகைய முன்னோக்கு இந்திய நிலைபாட்டின் மீது குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியது.    

திபெத்தில் சீனர்கள் நடந்து கொண்ட விதத்தை விமர்சித்ததைப் போல இந்தியா நாகாலாந்தின் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததையும் நான் கடுமையாக விமர்சிக்கிறேன். நாகாலாந்து தலைவர் சுதந்திரத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியபோது காந்தி ஆரம்பத்தில் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகப் போராடி சுயநிர்ணயத்தைப்  பெறுவதை முன்னிறுத்தியே எதிர்வினையாற்றினார். ஆனால் இந்திய நிர்வாக அமைப்புகள் தொடர்ந்து அந்த உணர்வைக் கொண்டிருக்கவில்லை.       

காந்தியே அந்த விஷயத்தில் முரண்பட்டவராக இருந்தார். அகிம்சையின் ஆதரவாளராக அறியப்பட்ட அவர் 1948ஆம் ஆண்டு காஷ்மீரில் படையைப் பயன்படுத்துவதை ஆதரித்தார். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை, சாத்தியமான சுதந்திரத்திற்கான ஆர்வங்களை முற்றிலுமாகப் புறக்கணித்து இந்தியாவும், பாகிஸ்தானும் அதனை இருதரப்பு விஷயம் என்று கருதியதாலேயே காஷ்மீர் பிரச்சனை மிக நீண்ட காலச் சிக்கலுக்குள்ளானது.  

அணுசக்தி குறித்த பதற்றம்

காஷ்மீருக்கும் பாலஸ்தீனத்துக்கும் உள்ள பல ஒற்றுமைகளில் இதுவும் ஒன்று. பாலஸ்தீனம் நீண்ட காலமாக இஸ்ரேல், அரபு நாடுகளுக்கு இடையிலான மோதலாகக் கருதப்பட்டது.  போட்டி நாடுகளுக்கு இடையே பேசுவதற்கான ராஜதந்திர பேரம் அல்ல என்பதை வலியுறுத்துவதுடன் பாலஸ்தீனியர்கள் அது பாலஸ்தீனியர்களுக்கான தேசிய விடுதலை இயக்கம் என்று உறுதிப்படுத்த முன்வர வேண்டும்.

பாலஸ்தீனியர்களைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க வேறுபாடு இருந்த காரணத்தால் என்னால் உங்களுடன் உடன்பட முடியவில்லை. முதலாம் உலகப் போருக்குப் பிறகு பன்னாட்டுக் கழகம் (லீக் ஆஃப் நேஷன்ஸ்) மத்திய கிழக்கு என்றழைக்கப்படும் பிரதேசங்களில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுக்கு 1922ஆம் ஆண்டு கட்டளையொன்றை வழங்கியது. அந்தக் கட்டளை பாலஸ்தீனம் உள்ளிட்ட பிரதேசங்களுக்கு சுதந்திரம் என்ற இறுதி வாக்குறுதியைக் கொண்ட மறைமுக ஆணை வடிவிலே இருந்தது. லெபனான், சிரியா, ஜோர்டான் போன்ற பிற நாடுகள் சுதந்திரம் பெற்ற போதிலும் பாலஸ்தீனியர்களுக்கு அது மறுக்கப்பட்டது.   

யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு இடம்பெயர்வதற்கு, அதற்குப் பிறகு அவர்கள் ஆற்றிய பங்கை எளிதாக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் வலுவான ஒத்துழைப்பு இருந்தது. எனவே அவற்றிற்கிடையே ஒற்றுமை அதிகம் இல்லை. ஆனாலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் அவை என்பதை நீங்கள் வலியுறுத்த முயல்கிறீர்கள் என்றால், ஆம் - அவை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள்தான். பாலஸ்தீனத்தின் தனித்துவமான வரலாற்றின் காரணமாக அது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம்தான் என்பதை ஏற்றுக் கொள்பவர்களை மேற்குலகு மற்றும் பிற இடங்களில் உங்களால் அதிகமாகக் காண முடியும்.    

பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசம் என்று பரவலாக அங்கீகரிப்பதைப் போல மற்ற  நாடுகள் இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என்று காஷ்மீரை முறைசாராமல் அங்கீகரிப்பதை நம்மால் காண முடிவதில்லை. அது மிகவும் முக்கியமான வேறுபாடாக இருக்கிறது. அடக்குமுறைகள், காட்டுமிராண்டித்தனத்தைப் பொருத்தவரை பொதுமக்களுடன் ஒப்பிடும் போது ஆயுதம் ஏந்தியவர்களின் விகிதம் பாலஸ்தீனிய ஆக்கிரமிப்புப் பகுதிகள் அல்லது உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைக் காட்டிலும் இந்தியாவை மோசமாகப் பிரதிபலிக்கின்ற வகையிலே காஷ்மீரில் மிக அதிகமாக இருப்பது பாலஸ்தீனத்திற்கும், காஷ்மீருக்கும் இடையிலான  வித்தியாசமாகும்.         

பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் அணுசக்தி முதல் தாக்குதல் கொள்கைகளைப் பின்பற்றுகின்றன. மரபுவழியான மோதலின் ஆபத்து அணுசக்தி யுத்தமாக விரிவடையும் அபாயம் இந்த நாடுகளிடையே இருந்து வருகிறது.  இந்த இரண்டு நாடுகளும் அமெரிக்க நட்பு நாடுகளாக இருப்பது எவ்வாறு? அது நிலையான நிலைமையா?  

இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ள போதிலும் அந்த நாட்டை நிலையான கூட்டாளி என்று பார்ப்பதில் அமெரிக்கர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை. அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக  தன்னுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு மிக அருகே குறிப்பாக 1973ஆம் ஆண்டு மோதலின் போது இஸ்ரேல் நெருங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.  

அதேபோல் பிரிட்டனும் நட்பு நாடாக அதன் ஸ்திரத்தன்மையைப் பற்றி கவலைப்படாமல் தனக்கான அணுசக்தியைக் கொண்டுள்ளது. புவிசார் அரசியல் நலன்கள், கூட்டணிகளின் அடிப்படையில் ‘நல்ல’, ‘கெட்ட’ அணுசக்தி நாடுகள் என்ற வேறுபாடு அமெரிக்கர்களின் பார்வையில் இருப்பதாகவே  தோன்றுகிறது. 

அறிவியல் மற்றும் போர் யுக்தி கொண்ட பணியாளர்கள் இந்த உலகில் எந்த இஸ்லாமிய நாட்டில் இருக்கிறார்கள்? எந்த இஸ்லாமிய நாடு தொழில்முறையிலான ஆயுதப்படைகளைக் கொண்டிருக்கிறது? எந்த இஸ்லாமிய நாடு அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடாக இருந்து வருகிறது? அது நிச்சயம் எகிப்து அல்ல; சவூதி அரேபியா இல்லை. பாகிஸ்தான் மட்டுமே அவ்வாறாக இருக்கிறது. புவிசார் அரசியல் இயங்கியல் மற்றும் பெரும்பாலும் இரட்டைத் தரங்களை உள்ளடக்கிய அமெரிக்காவின் அணுகுமுறையின் சிக்கல்களைக் கருத்தில் கொள்ளும்போது பாகிஸ்தானின் இந்த மூலோபாய இருப்புகளை முன்னிலைப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையில் ஏற்படக்கூடிய அணுசக்தி மோதலைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள். இந்த இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களுடன் இருந்தாலும் அவர்களின் முதல் தாக்குதல் தொடர்பான கொள்கைகள் வேறுபடுவதைத் தெளிவுபடுத்திக் கொள்வது முக்கியம். இந்தியா ‘முதலில் பயன்படுத்தக்கூடாது’ என்ற கோட்பாட்டை அதிகாரப்பூர்வமாகக்  கடைபிடிக்கிறது என்றாலும் சீனாவின் சமமான கொள்கையைக் காட்டிலும் குறைவான கண்டிப்புடன் உள்ள சில தகுதிகள், விளக்கங்களுக்கு உட்பட்டே அந்த நிலைப்பாடு இருக்கிறது.      

சீனா தான் மோசமானது, இந்தியா அல்ல என்று கருதுகின்ற இந்திய வல்லுநர்கள் இதை ஒருபோதும் சுட்டிக்காட்ட மாட்டார்கள். ஆனால் இவர்கள் இருவருமே மோசமானவர்கள்தான்.  

அச்சுறுத்தல் உணர்வு

இந்தியாவின் மிகப் பெரிய மரபுவழிப் படைகளுக்கு எதிராக தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதே பாகிஸ்தானின் கொள்கை என்று நம்புகிறேன்.

சரிதான். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை மையமாகக் கொண்டே அணு ஆயுதங்களை முதன்மையாக வாங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.   

அவ்வாறு வாங்குவதற்கான தர்க்கம் மிக எளிமையானது - ‘அவை இந்தியாவிடம் இருக்கும் என்றால் பாகிஸ்தானிடமும் இருக்க வேண்டும்’. பொதுவெளியில் இந்தக் கணிப்பை நான் வெளியிட்டிருக்கிறேன். அந்த நேரத்தில் நான் செய்த சில கணிப்புகளில் இதுவும் ஒன்றாக இருந்தது.  

பாஜக ஆட்சிக்கு வந்தால் அணு ஆயுதங்களைத் தேடி அலைவார்கள் என்று அப்போது நான் கூறியிருந்தேன். அவ்வாறு சொன்னதற்கு சீனா,  பாகிஸ்தான் ஆகியவற்றிற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை. அனைத்து வகையிலும் அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடனே தொடர்புடையதாக இருந்தது. வலிமையான, ஆண்மைமிக்க  இந்தியாவே அவர்களுடைய கற்பனையில் உறைந்திருந்தது. அணு ஆயுதங்கள் அவர்களிடமிருந்த அந்தப் பார்வையுடன் நன்கு பொருந்திப் போயின.    

அவர்களுடைய அந்த தேர்வு ஒன்றும் புதியதல்ல; ஐம்பதுகளின் பிற்பகுதியில் ஜனதா கட்சியின் முந்தைய அவதாரமாக இருந்த போதும் தங்களுடைய வழிகாட்டியாக இருந்த வீர் சாவர்க்கரின் சித்தாந்தத்தின் தாக்கத்தால் அந்தக் கட்சி இந்தியா அணுஆயுதங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றே வாதிட்டது. 1974ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் அணு ஆயுத சோதனையை நடத்தி, தன்னை அணுசக்தி கொண்ட நாடாக நிலைநிறுத்திக் கொண்டபோது அது இந்தியா அணுஆயுத தேர்வை வெளிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடனான சமிக்ஞையையே வெளிப்படுத்தியது.        

இந்தியா அணு ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளாமல், அதனை வைத்திருப்பதற்கு மட்டுமே பிரதான இடதுசாரிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன. பாஜக மட்டுமே இந்தியா அணு ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய ஒரே கட்சியாக இருந்தது.    

நாடுகள் தங்கள் சுய-உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக அல்லது தாங்கள் உணர்ந்து கொண்ட அச்சுறுத்தல்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாகவே அணு ஆயுதங்களை உருவாக்குகின்றன. அமெரிக்கா அணு ஆயுதங்களை முதன்முதலில் உருவாக்கியது உடனடி அச்சுறுத்தல் குறித்து எழுந்த கவலைகளால் அல்ல. மாறாக தன்னுடைய ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநிறுத்திக் கொள்வதற்காகவே அது அவ்வாறு செய்தது. ஜெர்மனி 1944ஆம் ஆண்டுக்குப் பிறகு அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதைத் தொடரவில்லை என்பதை அறிந்திருந்தும் அமெரிக்கா அவற்றை உருவாக்கிக் கொண்டது. தன்னை ஒரு வல்லரசாக நிலைநிறுத்தவும், சோவியத் யூனியனுக்கும் மற்ற கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் ஒரு செய்தியை அனுப்பவுமே அமெரிக்கா அதைச் செய்தது.   

பிரிட்டனும், பிரான்சும் அச்சுறுத்தல் உணர்வின் காரணமாக அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கவில்லை. வீழ்ச்சியடைந்து வரும் காலனித்துவ சக்திகளாக இருந்த காரணத்தால் உலக வல்லரசுகளின் உயர் மட்டத்தில் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் அதைச் செய்தனர்.

‘அவர்களிடம் இருந்தால் நம்மிடமும் இருக்க வேண்டும்’ என்ற மனநிலையில் அச்சுறுத்தல் உணர்வுகளின் காரணமாகவே சீனாவும், சோவியத் யூனியனும் அணு ஆயுதங்களைத் தயாரித்தன. அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நாடுகளுடனான உறவுகளில் குறிப்பாக 1964ஆம் ஆண்டில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சீனா அணுசக்தியைப் பயன்படுத்திக் கொண்டது.    

சீனாவுடனான உறவுகளை மேம்படுத்திக் கொண்ட இந்தியா 1998ஆம் ஆண்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸைப் போல மாறி வருகின்ற சுயஉணர்வுகளின் பிரதிபலிப்பாகவே அணுசக்தி சோதனைகளை நடத்தியது. அதற்கு மாறாக பாகிஸ்தானின் அணுசக்தித் திட்டம் குறிப்பாக இந்தியா மீதான அச்சுறுத்தல் உணர்வுகளாலே மேற்கொள்ளப்பட்டது. 1974ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் அணுகுண்டு சோதனைக்கு இணையான சோதனையை 1987 மற்றும் 1998ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பாகிஸ்தான் மேற்கொள்ளவே இல்லை.    

சீனா குறித்த தன்னுடைய கவலைகளை மேற்கோள்காட்டி இந்தியா அளித்த மறுப்புகளை மட்டுமே இந்தியாவிடம் தொடர்ந்து அணு ஆயுத நீக்கலை முன்மொழிந்து வந்த பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனாலும் இந்தியாவின் பாரம்பரிய ராணுவ மேன்மை குறித்து அதிக அளவில் அச்சமடைந்திருந்த பாகிஸ்தான் அதற்குப் பிறகே அணுசக்தி சோதனைகளை மேற்கொண்டது.     

பாரம்பரிய ஆயுதங்களில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் குறிப்பாக தன்னுடைய எல்லையில் உள்ள இந்திய வீரர்களைக் குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நோக்கத்தை பாகிஸ்தான் வெளிப்படுத்தியது என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் முழு அளவிலான அணுகுண்டு வீச்சு பதிலடியாகத் தரப்படும் என இந்தியா அதையொட்டி எச்சரித்தது. 

இறுதியில் இந்த இரண்டு நாடுகளுமே வஞ்சகர்களாக, வெட்கக்கேடானவர்களாக இருந்தன. ‘பொறுப்பு மிக்க அணுசக்தி’ என்பதாக ஒன்று இருப்பதான சிந்தனை உண்மையில் கேலிக்குரியதாகும். ஆபத்து அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளில்தான் உண்மையான ஆபத்து இருக்கிறதே தவிர, முதல் தாக்குதலைத் தொடங்குவது குறித்து இரு தரப்பிலும் எடுக்கப்பட்ட முடிவில் அல்ல. அந்த ஆபத்தை இன்னும் கூடுதலாக அதிகரிப்பு இயங்கியல் அதிகரிக்கச் செய்யும்.  

சுதந்திரம் பெற்றதில் இருந்து உலகின் இந்தப் பகுதி தொடர்ந்து பதற்றமான நிலையிலேயே உள்ளது. அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு இடையிலான பனிப்போர் காலத்தில் அமைதியான காலகட்டங்களைக் கண்டதைப் போலல்லாமல் இங்கே நிலைமை ஆபத்து நிறைந்ததாகவே உள்ளது. மோதல் வரலாற்றுடன் உள்ள அண்டை நாடுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் இதுவரையிலும் நான்கு கடுமையான போர்களில் ஈடுபட்டுள்ளன. 

ஆபத்து மிகவும் தெளிவாக உள்ளது: வழக்கமான சாதாரண மோதல் மிகவும் பேரழிவுகரமான ஒன்றாக எளிதில் மாறி விடக்கூடும். அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைப் பற்றி ஆரம்பத்தில் இரு தரப்பினரும் சிந்திக்க மாட்டார்கள். ஆனால் மறுபுறத்தில் அவ்வாறு செய்வது குறித்த பயம் பதற்றங்களை, அணுஆயுதப் போர் குறித்த  அச்சுறுத்தலை உடனடியாக அதிகரிக்கவே செய்யும்.     

1999ஆம் ஆண்டு கார்கில் போரின் போது இரு தரப்பினரும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குத் தயாராகினர். எனவே அப்போது உண்மையாகவே ஆபத்து அதிகரிக்கும் அபாயம் இருந்தது. இந்தியாவில் உள்ள ஆர்எஸ்எஸ் போன்ற குழுக்களின் அதீத ஆணவத்தாலேயே அந்த ஆபத்து அதிகரிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு ஒப்பீட்டையும் நிராகரிக்கின்ற ஆழ்ந்த கோபத்தால் உந்தப்பட்டு ‘இந்தியா பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்’ என்ற கருத்து நிலவுகிறது. 

‘நாம் ஒரு மிகப் பெரிய உலக வல்லரசு என்பதைக் காட்ட வேண்டும். ஆனால் மிகப் பெரிய உலக வல்லரசு என்று காட்டுவதற்கு முதலில் நாம் மிகப் பெரிய பிராந்திய சக்தியாக இருக்க வேண்டும். பாகிஸ்தானியர்கள் நமக்கு பெரும் பிரச்சனையாக உள்ளனர்’ என்ற உணர்வு ஆர்எஸ்எஸ்சிடம் மட்டும் இல்லாமல் இந்தியாவில் உள்ள தாராளவாத வட்டங்களிலும் பரவியிருக்கிறது. அது இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான எந்தவொரு தொடர்பு குறித்தும் வெறுப்பையே தூண்டுகிறது. 

அதனால் என்ன நடக்கும்? 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மோடியின் மறுதேர்தல் முயற்சிக்கு சற்று முன்பாக குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பாலக்கோட்டைக் குறிவைத்து பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா மிகப் பெரிய வான்வழித் தாக்குதலை நிகழ்த்தியது. 1945க்குப் பிறகு ஓர் அணுசக்தி நாடு மற்றோர் அணுசக்தி நாட்டின் மீது இந்த அளவிற்கான தாக்குதலை மேற்கொண்டது அதுவே முதல் முறையாகும்.

அந்தத் தாக்குதல் காஷ்மீரில் இந்தியப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே நிகழ்த்தப்பட்டது.

காஷ்மீரில் - ஆமாம். ஆனால் அது ஒரு உள்ளூர் காஷ்மீரி இளைஞரால் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல். மனித வெடிகுண்டு தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது குழுவுடன் இணைந்த உள்ளூர் காஷ்மீரி இளைஞராலேயே காஷ்மீரில் முதல் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தாக்கியவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருந்த நிலையில், காஷ்மீரிகளின் விரக்தி இருந்த போதிலும் அரசியல்ரீதியான எச்சரிக்கையை பாகிஸ்தானுக்கு விடுக்க அதனை இந்தியா ஒரு வாய்ப்பாகவே கருதியது. பாலக்கோட்டில் ஊடுருவி வான்வழித் தாக்குதலை நிகழ்த்த அதுவே வழிவகுத்துக் கொடுத்தது.

இந்தியாவில் இயங்கியலை வடிவமைக்கும் செல்வாக்குமிக்க சக்திகள் பலதரப்பட்டவையாக இருக்கின்றன. ராணுவம் கணிசமான அதிகாரத்துடன் இருக்கும் அதே வேளையில் மத தீவிரவாதம் அரசின் சித்தாந்தத்திற்குள், வெளிநாட்டு சக்திகள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கைச் செலுத்தி வருகிறது.

வழக்கமான அந்த மோதல் மிகவும் தீவிரமான மோதலாக - அணுசக்தி பரிமாற்றத்திற்கான சாத்தியக்கூறுகளுடன் - விரிவடையக் கூடும் என்ற கவலையை எழுப்புகிறது. அது தவிர்க்க முடிவதாக இருந்தாலும், அதிகரிக்கும் அபாயங்கள் அத்தகைய பேரழிவு விளைவுகளைத் தடுப்பதற்கு பின்வாங்குதல், ராஜதந்திரம் போன்றவை நமக்குத் தேவை என்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள்

போர்கள், அணு ஆயுதங்கள், காஷ்மீர் மற்றும் நக்சலைட்டுகளுக்கு எதிரான அடக்குமுறை ஆகியவற்றின் நீண்ட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது - காங்கிரஸின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளில் இருந்த ஹிந்து தேசியவாதமே பாஜகவின் எழுச்சிக்கு உறுதுணையாக இருந்ததா? காங்கிரஸ் தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாகக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அதன் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஹிந்துத்துவக் கொள்கையாக இருந்ததா?

காங்கிரஸின் வெளியுறவுக் கொள்கைகள் இந்தியா வலிமையான நாடாக மாற வேண்டும் என்பது குறித்த நிதர்சனமான, உண்மையான அரசியல் சிந்தனைகளின் திசையிலேயே அதிக அளவிற்கு நகர்ந்தன என்றே கூறுவேன். அதன் விளைவாக அமெரிக்காவுடனான தனது கூட்டாண்மையை உறுதிப்படுத்துவது, இஸ்ரேலுடன் மூலோபாய உறவை உறுதிப்படுத்துவதற்குமாக அது நகர்ந்தது.

பாஜகவும் அந்தப் போக்கையே பயன்படுத்திக் கொண்டாலும், அது ஹிந்துத்துவா சித்தாந்தத்தால் மட்டும் இயக்கப்படுவதாக இருக்கவில்லை. மாறாக வெளியுறவுக் கொள்கை வட்டாரங்களில் பாஜகவை  ஏற்றுக் கொள்வதற்கான வழியை உள்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஹிந்துத்துவ சார்பு கொள்கைகள்தான் வகுத்துக் கொடுத்தன. தன்னுடைய சித்தாந்தத்தின் அடிப்படையாக முஸ்லீம்-விரோத நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பாஜகவைப் போல, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் முஸ்லீம்களுக்கு எதிரானவையாக இருக்கவில்லை. இருப்பினும் அவர்களுடைய உள்நாட்டு திட்டங்களில் அதுபோன்ற உணர்வுகள் அவ்வப்போது தாக்கத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தன.    

அதன் வெளியுறவுக் கொள்கையைப் பொருத்தவரை இஸ்ரேலுடனான இந்தியாவின் தொடர்பு அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. மூலோபாய ரீதியாக அது அர்த்தமுள்ளதாகவே இருந்தது. ஆயினும் அந்த உறவில் முஸ்லீம்களுக்கு எதிரான திருப்பத்தை பாஜக சேர்க்கிறது. ஆர்எஸ்எஸ் எழுதியுள்ளவற்றை ஆராய்ந்து பார்த்தால், இஸ்ரேலின் உருவாக்கம் குறித்து ஒரு வலுவான போற்றுதல் அவற்றில் இருப்பதைக் காண முடியும்.  

இனவெறியானது மேற்கு ஐரோப்பாவில் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் இப்போது கலாச்சார ரீதியாக அது இஸ்லாமிய வெறுப்பாக வெளிப்படுவது கவனிக்கத்தக்கது. அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய அரசுகளைப் பொருத்தவரை ‘நல்ல’ மற்றும் ‘கெட்ட’ முஸ்லீம்களுக்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. சவூதி அரேபியா தன்னுடைய தீவிரமான, பிற்போக்குத்தனமான இஸ்லாம் வடிவத்தை மீறி பெரும்பாலும் ‘நல்ல’ என்ற வகைக்குள்ளேயே இருக்கிறது. இருப்பினும் ஐரோப்பாவில் இல்லாத வகையில் ஹிந்துத்துவா சித்தாந்தத்தின் அடித்தளம் முஸ்லீம் எதிர்ப்பு உணர்வாகவே உள்ளது. 

காங்கிரஸைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. அது மென்மையான ஹிந்துத்துவ அரசியலில் ஈடுபடுகிறது. இந்தியாவில் ஒரேயொரு அரசியல் சக்தி மட்டுமே ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவுவதில் உறுதியாக உள்ளது -  அது பாஜக தான். சங்பரிவாரும், பாஜகவும் தங்களுடைய நோக்கத்தில் மற்றவர்களிடமிருந்து தனித்து நிற்கின்றன.   

எப்போதாவது பாஜகவுடன் கூட்டணி வைக்கின்ற அல்லது மென்மையான ஹிந்துத்துவா அரசியலில் ஈடுபடுகின்ற இந்தியாவில் உள்ள மற்ற கட்சிகள்கூட, பாஜகவைப் போன்ற இடைவிடாத உந்துதலுடன் இருக்கவில்லை. முக்கிய இடதுசாரிகளுக்கு இது நிச்சயமாகப் பொருந்தாது. தீவிர இடதுசாரி சக்திகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.  

‘தன்னுடைய முரண்பாடான நலன்களை மறைத்துக் கொள்ளும் அதே வேளையில் பெரும்பான்மையினருக்குச் சொந்தமானது என்ற ஒருங்கிணைந்த உணர்வை வெற்றிகரமான மேலாதிக்கச் சித்தாந்தம் வழங்குகிறது’ என்று எழுதியிருக்கிறீர்கள். மேலும் லும்பன் ஆசை, ஓபிசி, சமூக அடித்தளம் - ஓபிசி என்பது இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் - ஆகியவற்றை பாஜக தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதாகவும்  எழுதியிருக்கிறீர்கள்… அவர்கள் அனைவராலும் நன்கு அறியப்பட்ட தலித் தலைவரான அம்பேத்கரையும் கையகப்படுத்தியுள்ளனர். ஹிந்து மதத்தில்  தலித்துகளுக்கு சுதந்திரம் கிடைக்க வழி இல்லை என்று நம்பிய அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்ற உண்மை சற்று வினோதமானது.   

இந்த சாதியக் கூட்டணியை பாஜக எப்படி உருவாக்கியது? அந்தக் கூட்டணி பாஜக மீது இடதுசாரிகளின் எதிர்ப்பு பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலான முரண்பாடுகளைக் கொண்டிருக்கிறதா?   

இங்கே கருத்தில் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில் தலித்துகளின் தலைசிறந்த தலைவரான அம்பேத்கர் பௌத்த மதத்திற்கு திரும்பிய நிலையில் அவரைக் கையகப்படுத்திக் கொள்ளும் சாதனையை பாஜகவால் எவ்வாறு சாதிக்க முடிந்தது? சாதி எதிர்ப்பு இயக்கங்கள் ஏற்படுத்துகின்ற பின்னடைவுகளைப் பற்றி என்ன சொல்வது? நீங்கள் சொல்வதை என்னால் இப்படித்தான் விளக்க முடியும்.

அதைவிட ஆச்சரியம் என்ன தெரியுமா? பாஜக தனது ஹீரோக்களில் ஒருவராக பகத்சிங்கையும் அரவணைத்துக் கொண்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கொண்டிருந்த எதிர்ப்பிற்காக பிரபலமாக அறியப்பட்டவராகவே பகத்சிங் இருந்தார். ஆனால் அவர் காந்தியைப் போல அகிம்சையைப் போதிக்கவில்லை. சட்டப் பேரவையில் அவர் வெடிகுண்டு வீசினார். ஆனால் அது யாரையும் கொல்லவில்லை. 

தான் வெளிப்படுத்திய எதிர்ப்பினால் சிறந்த நபராக அவர் கருதப்படுகிறார். இளம் எதிர்ப்பாளராக, புரட்சியாளராக அவரது புகழ் ஓங்கியிருக்கிறது. இந்தியாவில் இன்னும் பலருக்கு மிக முக்கியமான நபராக இருந்து வருகின்ற காரணத்தாலேயே நாத்திகராக, மார்க்சிஸ்ட்டாகத் தன்னைக் கண்டு கொண்ட பகத்சிங்கை பாஜக அபகரித்துக் கொண்டது. எதிர்ப்பாளர், துடிப்பான புரட்சிகர நபருக்கான முன்மாதிரியாக தனது வாழ்க்கையை காலனித்துவத்திற்கு எதிரான போராட்டத்திற்காக அர்ப்பணித்த அவர் திகழ்ந்தார்.    

சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பாஜகவிற்கு எந்தவொரு பங்கும் இருக்கவில்லை. உறுதியான தேசியவாத சக்தியாக தனது பிம்பத்தை உயர்த்திக் கொள்வதற்காகவே அது தேசியவாதக் குறியீடுகளை ஏற்றுக் கொண்டது அம்பேத்கர் மற்றும் ஹிந்து மதம் பற்றி சொல்லும்போது -  ஹிந்து மதத்திலிருந்து முற்றிலுமாகப் பிரிந்து பௌத்தத்தைத் தழுவுவதே அடக்குமுறை சாதி அமைப்பைத் தகர்ப்பதற்கான  ஒரே வழியாகும் என்று பிராமண ஹிந்து மதத்தின் மீது முற்றிலுமாக ஏமாற்றமடைந்த அம்பேத்கர் நம்பியதையே குறிப்பிட முடியும்.  

இந்தியாவின் பூர்வீக மதமாகப் பௌத்தம் கருதப்படுவதால் ஹிந்துத்துவா சித்தாந்தம் பௌத்தத்தை எதிர்க்கவில்லை. அவர்களுக்கு பௌத்தத்தின் மீது எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை. எனவே சாதி அமைப்பை எதிர்த்து பௌத்த மதத்திற்கு மாறுவது என்ற வாதத்தின் மூலம் அம்பேத்கரால் பரவலான வெற்றியைக் காண முடியவில்லை.  

அம்பேத்கர் மதம் மாறிய காலம் முதல் இன்று வரையிலும் இந்தியாவில் பௌத்தர்களின்  எண்னிக்கை விகிதம் தோராயமாக ஒரே மாதிரியாக எந்தவித மாற்றமுமின்றியே இருந்து வருகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் பெரும்பாலும் ஹிந்து மதத்தின் கட்டமைப்பிற்குள்ளேயே வெளிப்பட்டது. கீழ்சாதி நபர்கள் பலரும் தங்களுக்கான கண்ணியம்,  அடையாள உணர்வை ஹிந்து மதத்திற்குள் கண்டறிந்துள்ளதன் காரணமாக அவர்களிடம் ஹிந்துத்துவா குறித்த செய்திகளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

ஹிந்துத்துவாவால் ஒருங்கிணைக்கப்பட்ட ஹிந்து சமூகத்தின் மரியாதைக்குரிய உறுப்பினர்களாக அம்பேத்கரை மட்டுமல்லாது பல்வேறு உள்ளூர், பிராந்திய அளவில் உள்ள தாழ்த்தப்பட்டவர்களையும் மிகத் திறமையாகச் சித்தரிக்க முடிந்துள்ளது. அந்த விவரிப்பே சொந்தமான, ஒற்றுமை உணர்வை பல்வேறு சாதி குழுக்களிடையே வளர்த்து அவர்கள் அனைவரையும் ஹிந்துத்துவா சித்தாந்தத்துடன் இணைத்து வைக்கிறது.  

இணைந்த போராட்டம்

எண்பதுகள் மற்றும் தொன்னூறுகளில் காங்கிரஸின் செல்வாக்கு சரிந்ததால் உருவான பிராந்திய, தாழ்த்தப்பட்ட சாதி அரசியலின் எழுச்சியை பாஜக பயன்படுத்திக் கொண்டது. அந்த எழுச்சி புதிய அரசியல் புவியீர்ப்பு மையத்தை  உருவாக்கியிருக்கும் என்று ஒருவர் கருதலாம். ஆனால் உண்மையில் பாஜகவே அந்தப் புதிய அரசியல் சக்திகளைக் கையகப்படுத்திக் கொண்டது.   

பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தங்களுடைய கண்ணோட்டத்தில் என்ன செய்து வருகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டினேன். இப்போது நாம் தாழ்த்தப்பட்ட சாதி இயக்கங்கள் அவர்கள் தரப்பில் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

அந்த இயக்கங்களின் உறுதிப்பாடு மூன்று விஷயங்களைச் செய்து கொடுத்துள்ளது:  

ஒன்று அது அவர்களுக்கு அதிக கண்ணியம், சுயமரியாதை உணர்வை வழங்கியுள்ளது. சிறப்பு.

அது செய்திருக்கும் இரண்டாவது விஷயம் - அரசு கல்வி மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு என்ற கொள்கையின் மூலம் அவர்கள் பொருள்ரீதியான கூடுதல் பலன்களைப் பெற்றுக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்தது. சிறப்பு.

மூன்றாவது விஷயம் - மாநில அளவில் மற்றும் தங்களால் முடிந்த அளவிற்கு மத்திய அளவில் என்று  அனைத்து மட்டங்களிலும் அதிகாரத்தின் நெம்புகோல்களில் தங்களுடைய பங்கு இருக்க வேண்டுமென்று தாழ்த்தப்பட்ட சாதியினர் விரும்புகின்றனர். அதற்காக சாதிகளுக்கு அப்பாற்பட்டு உயர் சாதிகள் உள்ளிட்டு சாதியக் கூட்டணிகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் சாதி அமைப்பை - அல்லது சாதி அமைப்பின் கட்டமைப்புகளை -  ஒழிக்க முற்படுவதைக் காட்டிலும் தாழ்த்தப்பட்ட சாதிகள் என்ற நிலையை வர்க்கம் மற்றும் அதிகார ஏணியில் மேலேறிச் செல்வதற்குப் பயன்படுத்த முற்பட்டது மட்டுமே நடந்தேறியுள்ளது.   

அமெரிக்காவில் கறுப்பின அரசியலுக்கு நடந்ததற்கு இணையான விஷயங்களே இங்கேயும் நடந்திருப்பதாகச் சொல்வேன். கிளின்டன் ஜனநாயகக் கட்சி இயந்திரத்தின் பிரதான பகுதிக்குள் இருக்கும் ஒரு வகையான கறுப்பு அரசியலுக்கே பெருமை, சுயமரியாதை, இனவெறி அமைப்புகளுக்கு எதிரான விரோதம் என்ற கறுப்பின தேசியவாதத்தின் முந்தைய வடிவங்கள் இறுதியில் சென்று முடிந்தன. அது பெரும்பாலும் கறுப்பின மக்கள் வர்க்க ஏணியில் ஏறிச் செல்லும் வகையிலேயே இருந்தது. ஒரே மாதிரியான தொழில்களில் ஈடுபட்டுள்ள வெள்ளையர்களுக்கு இணையான ஊதியத்தில் அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு சதவிகித வேறுபாட்டுடன் இடம் பெற்றுள்ள கறுப்பர்களின் எண்ணிக்கை அமெரிக்க நடுத்தர வர்க்கத்தில் நான்கு அல்லது ஐந்து மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது.      

அதிபர் பாரக் ஒபாமாவின் வெளியுறவுக் கொள்கையும், அவரது பெரும்பாலான உள்நாட்டுக் கொள்கைகளும் முந்தைய அமெரிக்க அதிபர்களிடமிருந்த கொள்கைகளைப் போல மோசமாகவே இருந்தன. ஆயினும்  அமெரிக்க சமுதாயத்தில் கல்வி அமைப்பில், சிறைச்சாலைகளில் உள்ளவர்கள் மட்டுமல்லாது இனவெறி அதற்கு அப்பாலும் உள்ளார்ந்து, அடிப்படையாக இருந்த நிலையில், தன்னை இனத்திற்கு அப்பாற்பட்ட வேட்பாளராகப் பார்க்கும் அசட்டுத் தைரியம் அவருக்கு இருந்தது.

இனவெறிக்கு எதிரான போராட்டத்தை நவதாராளவாத முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்திடமிருந்து பிரிக்க முடியாது. அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் கறுப்பின மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி போராட்டங்களைப் பொருத்தவரை ஓர் இணைவான தேர்வு உள்ளது. ஹிந்து ஒற்றுமையை வளர்த்தெடுப்பதற்காக பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் தலித்துகள் மற்றும் பிறருக்கு சலுகைகளை வழங்கினாலும், அவர்கள் செல்ல முடியும் தூரத்திற்கான வரம்புகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட சாதியினரின் போராட்டங்களுடன் இணைந்து கொள்ள முடிகின்ற பாஜக அதற்காக தீவிரமான விட்டுக்கொடுப்புகளை மேற்கொள்ளலாம் என்றாலும், அதனால் உயர்சாதி பிராமணியக் கொள்கைகளைக் கைவிட வேண்டிய நிலை வரைக்கும் செல்ல முடியாது. அதனாலேயே அந்தப் பதற்றம் நீடிக்கிறது.

அந்த நிலைமையை பாஜக எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது முற்றிலும் வேறு கேள்வியாகவே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பற்றி வெறுமனே கவலைப்படாமல் பரந்த வர்க்க அடிப்படையிலான பிரச்சனைகளின் அடிப்படையில் மற்றவர்களுடைய  போராட்டங்களுடன் தங்களுடைய போராட்டங்களை இணைத்துக் கொள்வதற்கு தாழ்த்தப்பட்ட சாதியினரின் தலைமை தேவைப்படுகிறது.  

வித்தியாசமான தலைமைத்துவம் இருக்க வேண்டும் என்ற நிலைமையே அமெரிக்காவிலும் உண்மையாக இருக்கிறது என்றே நான் கூறுவேன். அந்தத் தலைமை இனம் மற்றும் வர்க்கப் பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு அமெரிக்க அரசியல், முதலாளித்துவ அமைப்புமுறையின் தன்மை மற்றும் அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் முன்னோக்குடன் தீவிரமாக இணைக்கப்பட வேண்டும்.  

இந்திய இடதுசாரிகள்

இந்தியாவில் அதுபோன்ற போராட்டத்திற்கு என்ன மாதிரியான வாய்ப்பு இருக்கிறது? இடதுசாரிகளைப் பற்றி நாம் அதிகம் பேசவில்லை. ஆனால் 1960களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிளவுபட்டு உருவான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) ஆகியவை காங்கிரஸ் கட்சியைப் போல தங்களுடைய முந்தைய சுயத்தின் நிழல்களாக மட்டுமே இருந்தன. ஆனால் அவை ஒரு காலத்தில் மிகவும் ஆற்றல்மிக்க சக்திகளாக இருந்தன.  

உண்மைதான். ஒரு காலத்தில் வலுவாக இருந்த ​​அவர்கள் தங்கள் அடித்தளத்தை இழந்திருக்கின்றனர். பிரதான இடதுசாரிகள் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி காங்கிரஸ் கட்சி எதிர்கொள்வதைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கலாம். கருத்தியல் ரீதியான ஒழுக்கத்துடன், மனவுறுதி கொண்ட, பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வெகுஜன அணிதிரட்டல், போராட்டங்களை உருவாக்குவதற்குத் தேவையான அர்ப்பணிப்புடன் உள்ள தொண்டர்கள் இல்லாமல் அவை முதன்மையாக தேர்தல் சக்திகளாக மாறி விட்டதே மிக அழுத்தமான பிரச்சனையாக உள்ளது.    

ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்ற தீவிர வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகளுக்கு - தீவிர இடதுசாரிகள் மட்டுமல்லாது பொதுவாக அனைத்து இடதுசாரிகளுக்கு  - இடையில் பொதுவானதாக தேர்தல் களத்திற்கு வெளியே ஈடுபடுவதைச் சார்ந்தே அவர்களுடைய வெற்றி இருக்கிறது. தேர்தல்களுக்கு அப்பாற்பட்டு அணிதிரட்டுவதில் பெறும் வெற்றியே அவர்களுடைய வலுவான தேர்தல் பிரசன்னத்திற்குக் காரணமாக மாறுகிறது.   

இந்த இயங்கியல் இந்திய அரசியலின் இரு முனைகளுக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. ஆனாலும் தீவிர வலதுசாரிகள் தங்களுக்கென்று கணிசமான தேர்தல் தளத்தை நிறுவியவுடன் ஆளும் வர்க்கங்களால் மிகவும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாகி விடுகின்றனர். அரசிடமிருந்து பெறுகின்ற வளங்கள், அதிகாரத்தை பாராளுமன்ற நடவடிக்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு அவர்களால் தேர்தல் ஏணியில் எளிதாக ஏறிச்செல்ல முடிகிறது. அதேசமயத்தில் தேர்தல் களத்திற்கு வெளியே நடக்கும் போராட்டத்திற்கே இடதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் தொடர்ந்து முன்னுரிமை அளிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. ஆளும் வர்க்கம் தீவிர வலதுசாரிகளை வெறுப்பதைக் காட்டிலும் கூடுதலாகவே இடதுசாரிகளை, தீவிர இடதுசாரிகளை வெறுக்கிறது.      

தன்னுடைய வலிமையைப் பொறுத்து ஆளும் வர்க்கம் சில சந்தர்ப்பங்களில் தீவிர வலதுசாரிகளைக் கோபப்படுத்தலாம். ஆயினும் அது இடதுசாரிகளை முற்றிலுமாக ஒழித்திடவே விரும்புகிறது. அதிகாரம் மிக்க சக்திகள் இடதுசாரிகள், தீவிர இடதுசாரிகளைக் காட்டிலும் வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகளுடனே பெரும்பாலும் இனைந்துள்ளன.   

தேர்தல் களத்திற்கு அப்பால் அணிதிரட்டுவதில் வெற்றி பெறுவதற்கு தங்கள் நோக்கம் குறித்த முழுமையான நம்பிக்கையுடன் ஆழ்ந்த அர்ப்பணிப்பும், மனவுறுதியும் கொண்ட  தொண்டர் படை இயக்கத்திற்குத் தேவைப்படும். போருக்கு இடையிலான பாசிச சகாப்தம் மற்றும் இன்றைய காலகட்டத்திற்கு  இடையிலான முக்கிய வேறுபாடாக நம்பிக்கையின் அளவே இருக்கிறது. நிலைமை இருண்டு கிடந்த அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களும்,  தலைவர்களும்  ‘ எதிர்காலம் நமதே’ என்ற பெருத்த நம்பிக்கையுடன் இருந்தனர்.  

ஆனால் இன்றைக்கு இடதுசாரிகளைப் பொருத்தவரை அதுபோன்றதொரு எதிர்காலத்தை வலியுறுத்துவது உண்மையில் மிகவும் சவாலாகவே இருக்கும். சிபிஎம், சிபிஐ இன்னும் நக்சலைட்டுகளைப் பொருத்தவரையிலும் ஸ்டாலினிசம், மாவோயிசம் போன்றவையே அவர்களுடைய முக்கிய கருத்தியல் தாக்கங்களாக இருக்கின்றன. மார்க்சியம் மற்றும் சோசலிசத்தின் விளக்கங்கள் மூலமாகப் பகுத்தறிந்து கொண்ட ஜனநாயகம் இல்லாததாலேயே ரஷ்யா, சீனாவால் மற்றவர்களை ஈர்க்கக்கூடிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் ஒருபோதும் வெற்றி காண  முடியவில்லை.    

அவர்களுடைய நிலைப்பாடு ஸ்டாலினிசம், மாவோயிசத்திற்கு அப்பால் ஜனநாயகத்தை அதிகம் வலியுறுத்துகின்ற ஜனநாயக சோசலிசம் போன்ற மற்ற கருத்தாங்கங்களுக்கு முற்றிலும் முரணாகவே இருக்கிறது. தங்களுடைய அரசியலை, சித்தாந்தத்தை  மறுபரிசீலனை செய்யாவிட்டால் தங்கள் கட்டுக்குள் மற்றவர்களை இழுக்கத் தேவையான கருத்தியல் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், உற்சாகம் மற்றும் ஈர்ப்பை வளர்த்தெடுப்பது சிபிஎம், சிபிஐ மற்றும் நக்சலைட்டுகள் போன்ற கட்சிகளுக்கு மிகவும் சவாலாகவே இருக்கும்.     

உங்களிடம் இங்கிலாந்து அல்லது அமெரிக்காவில் இடதுசாரி அரசு ஆட்சிக்கு வருவது இந்திய அரசியலின் போக்கை மாற்றியமைக்கக் கூடிய சாத்தியத்துடன் இருக்கும் என்ற பார்வை இருக்கிறது. நீங்கள் ஏன் அந்த நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்?    

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் தீவிர இடதுசாரி இளைஞர்களின் செல்வாக்கு இந்தியா உட்பட உலக அளவில் ஓர் அலைச்சலை ஏற்படுத்தும். அதிகரித்து வரும் இந்தச் சக்திகள் மனித உரிமைகள், ஜனநாயகத்திற்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய வாய்ப்புடன் உள்ளன. அதன் காரணமாக மற்ற இடங்களில் உள்ள அரசியல் சக்திகள் மீது கூடுதல் ஆய்வு, விமர்சனத்திற்கான வழிகள் பிறக்கும். குறிப்பாக அணிசேரா தாராளவாதிகள் மத்தியில் மோடி போன்ற வலதுசாரி தலைவர்களுக்குள்ள ஆதரவின் மீது மாறிவரும் இந்தச் சர்வதேச சூழல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.   

https://jacobin.com/2024/03/bjp-far-right-modi-india

 

Comments