முகுந்த் தட்டை
இந்தியன் எக்ஸ்பிரஸ்
2018 ஜனவரி 23
மனித
வள மேம்பாட்டு இணை அமைச்சர் சத்யபால்சிங் பரிணாம வளர்ச்சி பற்றிய பாடங்களை பள்ளிப்
பாடத்திட்டங்களில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று கூறியதாக செய்தி ஒன்றை வாசித்தபோது
அதிர்ச்சியில் உறைந்து போனேன். அதைக் கேட்டவுடன் அவர் தெரிவித்திருந்த கருத்துகளை நான்
எவ்வாறாக உணர்ந்தேன் என்பதைக் கூறுவது மிகவும் கடினம். அவருடைய கருத்துக்கள்
என்னைக் கோபப்படுத்தியதாகவோ அல்லது அவமானப்படுத்தியதாகவோ நான் உணரவில்லை. ஆனாலும்
எனக்குள்ளே அச்ச உணர்வும், ஆற்றாமையும் எழுந்ததை உணர்ந்தேன். அமைச்சருக்குப் பதிலளிக்க
வேண்டுமா? அப்படியானால், எந்த வகையான
பதிலை அளிப்பது? தனிநபர் என்ற முறையிலா அல்லது பொதுமக்களில் ஒருவன் என்ற முறையிலா?
அல்லது அறிவியல் சமூகத்தின் ஓர் அங்கமாக இருக்கும் பரிணாம வளர்ச்சி உயிரியலாளர் என்ற
முறையிலா? இருந்தாலும் எனக்குள்ளேயே ‘அமைச்சரின் கருத்தைப் புறக்கணித்துவிட்டு உன்னுடைய
வேலையைப் பார்’ என்பதாக ஒரு கருத்தும் இருந்தது. அதாவது யாருடைய தூண்டுதலுக்கும் உள்ளாகக்
கூடாது, குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்ட கருத்துக்களுக்கு தேவையற்ற கவனத்தை
அளித்து விடக் கூடாது, வாதங்களை வைக்கும் போது கட்டுப்பாட்டை ஒருபோதும் இழந்து
விடக் கூடாது என்ற எண்னமும் எழுந்தது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சிகள் பல்கலைக்கழகங்களுக்கு,
ஆய்வகங்களுக்குச் சென்று நல்லதொரு அறிவியல் ஆய்வை மேற்கொண்டால் போதும் என்றே நம்மைத்
தயார்படுத்தியிருக்கின்றன என்பது போன்ற கருத்தே என்னிடம் இருந்தது.
இதுபோன்ற
கருத்துக்களை தொடர்ந்து அவர்கள் கூறிக் கொண்டே இருந்தால் நாம் என்ன செய்வது என்ற
கேள்வியும் என்னுள்ளே எழுந்தது. அமெரிக்க வலதுசாரிக் குழுக்கள் மேற்கொண்டிருக்கும்
படைத்தல் இயக்கத்தின் முக்கியமான கருத்துக்களைப் பிரதிபலிப்பதாகவே, அமைச்சரின்
அந்தப் பேச்சும் அதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட விளக்கமும் இருந்தன. அமைச்சருக்கு
தங்களுடைய ஆதரவை அளிக்க முயன்ற பலரும், படைத்தல் கோட்பாடு குறித்து வலைத்தளங்களிலிருக்கும்,
வழக்கொழிந்து போன மிகப் பழைய கருத்துக்களையே சமூக ஊடகங்களின் மூலமாகப் பகிர்ந்து கொண்டனர்.
இவையனைத்துமே புதிதாக நடந்தவை இல்லை என்பதால், அமைச்சரின் கருத்துகளுக்கு இப்போது
உடனடியாக பதிலளிப்பதற்கான அவசியம் எதுவும் இருக்கவில்லை.
பன்முகத்தன்மை
வாய்ந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதையும், இங்கே அறிவியலாளர்களுக்கும் சமுதாயத்திற்கும்
இடையில் அதிகப்படியான இடைவெளி இருப்பதையும் முதலில் நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்
என்று உறுதியாக சிலர் கருதுகின்றனர். அறிவியலுக்கு எதிராக இவ்வாறான கருத்துக்கள்
ஏன் வெளிப்படையாகச் சொல்லப்படுகின்றன
என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வாறு புரிந்து கொண்டாலே
அதற்கான சரியான பதிலை நம்மால் அளிக்க முடியும். இதற்கான பதிலை அளிப்பது உடனடியாக
எடுக்கப்படக்கூடிய முயற்சி என்பதாக இல்லாமல் நீண்ட காலச் செயல்முறையாக இருக்க
வேண்டும். எவ்வாறாயினும் இப்போது உடனடியாகப் பதிலளிக்காதே என்பதே திரும்பவும் பரிந்துரைக்கப்படுவதாக
இருக்கிறது.
ஆனாலும்
நிச்சயமாக இதற்குப் பதிலளித்துத்தான் ஆக வேண்டும். பொதுமக்கள் எப்போதும் அறிவியலாளர்களிடம்
இருக்கும் மௌனத்தை சம்மதம் என்றே புரிந்து கொள்வார்கள். மேலும் அமைச்சரின் பேச்சை தனிநபர்
ஒருவர் தன்னுடைய பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்
என்பதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. மத்திய அமைச்சர் ஒருவர் இதைப் போன்று
அதிகாரப்பூர்வமாகப் பேசுகின்ற விஷயம் சில வாரங்களுக்குள் கொள்கைகளாக மாறக் கூடிய
வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அமைச்சரின்
பேச்சிற்கு உடனடியாக பல்வேறு எதிர்வினைகள் வந்திருந்தன. அமைச்சர் தெரிவித்த
கருத்துக்கு எதிராக பல கட்டுரைகள் இணையப் பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தன. அறிவியலாளர்களும்,
அறிவியல் பரப்புவோர்களும் இணைந்த குழுவொன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழு
தயாரித்த கடிதத்தில், மிக விரைவிலேயே ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
இதுவரையில் கண்டிராத வகையில் இந்தியாவின் மிக முக்கியமான மூன்று அறிவியல் கூடங்கள்
இணைந்து அமைச்சரின் பேச்சைக் கண்டித்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அந்த
அறிக்கை டார்வினின் பரிணாமக் கோட்பாடு அனைத்து வகைகளிலும் மிகச் சிறந்த கோட்பாடாக
எவ்வாறு விளங்குகிறது என்பதை வாசகர்களுக்கு விளக்குகின்ற வகையிலும், அமைச்சரின்
பேச்சைக் கண்டிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து
பதிலளிப்பதற்கான வாய்ப்பை தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்று அமைச்சருக்கு
வழங்கியது. ‘நான் அறிவியலை நம்புகிறவன்’ என்று அந்தத் தொலைக்காட்சியில் நேரலையில்
பேசிய அமைச்சர், தான் அவ்வாறு கூறியது எந்த அளவிற்குச் சரியானது என்பதை
நிலைநிறுத்துவதற்கு முயற்சித்தார். அப்போது சரியாக அனைவராலும் கவனிக்கப்படாத மிக முக்கியமானதொரு
நிகழ்வு நடந்தது. அப்போது அந்த நேர்காணலை நடத்தியவர் அமைச்சரிடம் ‘டார்வின் பற்றி சர்ச்சைக்குரிய
விஷயங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதால் பரிணாமக்
கோட்பாட்டைப் பொறுத்தவரையிலும்கூட விவாதம் என்பது அவசியமானதாகவே இருக்கிறது’ என்று
குறிப்பிட்டுக் கூறினார். நான் உண்மையில் அமைச்சர் தெரிவித்த கருத்து மீது
அல்லாமல், அந்த நிகழ்ச்சியின் நெறியாளரின் கருத்து குறித்தே பேச விரும்புகிறேன்.
சமீப
காலமாக இந்தியாவில் மனம் திறந்த சிந்தனை, பேச்சு ஆகியவற்றிற்கான இடம் சுருங்கிக்
கொண்டே வருகிறது. வரலாறு, அறிவியல் போன்றவை அரசியல் காரணங்களுக்காக அவரவர்
விருப்பத்திற்கு வளைக்கப்பட்டு விட்டன. கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள்
ஆகியோரின் குரல்கள் நெறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தாங்களாகவே சுயதணிக்கை செய்து
கொண்டு, அனாதரவாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மதவெறியும், குறுகிய நாட்டுப் பற்றும் மிகவும் இயல்பானவையாக அறிவியல் சமுதாயத்திற்குள்ளேயேயும்
பல்வேறு வகைகளில் நுழைந்துள்ளன.
சான்றுகள்,
ஆதாரங்கள் போன்றவை தங்களுடைய முக்கியத்துவத்தை இழந்ததாலேயே இவ்வாறான நிகழ்வுகள்
நடைபெறுகின்றன. டார்வினின் கருத்துக்களை நிராகரிக்கின்ற பல புத்தகங்கள் உள்ளன என்ற
கருத்தையே தன்னுடைய நிலைப்பாட்டிற்கு ஆதாரமாகக் கொண்ட அமைச்சர், தான் கூறிய
கருத்துக்களை மறுபரிசீலனை செய்வதற்கு மறுத்தார். அவர் கூறுவதை எடுத்துக் கொண்டால்,
டார்வினின் கருத்துக்களை ஆதரிக்கும் வகையில் இருக்கும் பிற புத்தகங்களைப் பற்றி என்ன
சொல்வது? இது எழுதப்பட்டுள்ளது... இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது... நம்முடைய முன்னோர்கள்
எழுதியிருக்கிறார்கள்… என்று சொல்லி இறுதியாக அதிகாரத்திடம் முறையிட்டே அனைத்து வாதங்களுக்குமான
தீர்வைக் காண வேண்டும் என்பதே அமைச்சரின் நிலைப்பாடாக இருக்கிறது.
என்னைப்
பொறுத்தவரையில் புத்தகங்கள் என்பவை வாதங்களை முன்வைப்பவையாக மட்டுமே இருக்கின்றன.
அவற்றில் உள்ள எந்த வாதத்தை நம்புவது என்பதை தீர்மானிப்பதற்குத் தேவையான நுட்பமான
திறமையை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அமைச்சர் பரிணாமக் கோட்பாட்டை மறுக்கிறார்
என்பது இங்கே முக்கியமல்ல. பரிணாமக் கோட்பாட்டின் எதிர்பார்ப்புகளுக்குப் புறம்பாக
பரிணாமக் கோட்பாட்டை நம்ப மறுப்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைக்
காண்பதற்காக நேருக்கு நேர் அவர்களுடன் அமர்ந்து விவாதிக்க விரும்புகிறேன். இதைச்
செய்வதற்கு முன்னராக ஒரு கருத்தை உறுதிப்படுத்துவதற்கு அல்லது நிராகரிப்பதற்குத்
தேவைப்படுகின்ற ஆதாரங்கள் எவை என்பதைக் கண்டு கொள்ள நாம் முதலில் ஒப்புக்கொள்ள வேண்டும்.
கோட்பாட்டை
நம்ப மறுப்பவர்களைச் சமாதானப்படுத்துவதற்குத் தேவையான நன்னம்பிக்கை கொண்ட
முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அறிவியலாளர்கள் தங்களுடைய வாதங்களை மிகக் கவனமாக
முன்வைக்க வேண்டும். நாமே மிகப்பெரிய அளவில் அவ்வாறான நம்பிக்கை அற்றவர்களாகவே
அறிவியல் சமுதாயத்திற்குள்ளே இருக்கிறோம் என்பதும் உண்மையாகவே இருக்கிறது. பொதுமக்களிடம்
பேசும்போது குறுக்குவழிகளைப் பயன்படுத்தி, உண்மைகளை மட்டுமே வெறுமனே வலியுறுத்துபவர்களாக
நாம் இருக்கிறோம். அது தவறானதாகும்.
அமைச்சர்
பரிணாமக் கொள்கையை மறுத்தார் என்பதாலேயே அவர் கூறிய கருத்துகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த
உடனடி எதிர்விளைவுகள் வந்து விடவில்லை. மாறாக அவர் நீண்டகாலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள
சான்றுகள், ஆதாரங்கள் அனைத்தையும் மறைமுகமாக நிராகரித்ததாலேயே அந்த எதிர்வினைகள்
உடனடியாகத் தோன்றின. இத்தகைய பொறிக்குள் அறிவியலாளர்களும் விழுந்து விடக்கூடாது. இந்தப்
போராட்டம் என்பது பரிணாமக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்களுக்கு
இடையிலானது அல்ல. இது மற்றவர்கள் மீது தங்களின் கருத்துக்களைத் திணிப்பவர்களுக்கும்,
தங்களின் சொந்த முடிவுகளை எடுப்பதற்காக ஒவ்வொரு நபருக்கும் இருக்கின்ற உரிமையை
மதிப்பவர்களுக்கும் இடையே நடக்கின்ற போராட்டம் ஆகும். நம்முடைய சொந்தக் கருத்துக்களை
வெறுமனே திணிக்கின்ற அறிவியலாளர்களாக மட்டுமே இருந்தால் வஞ்சனை செய்பவர்களாகவே நாம்
இருப்போம்.
இதனைச்
சொல்வது எளிது என்றாலும் நிறைவேற்றுவது மிகக் கடினமானது. ஒவ்வொரு திறந்த மனதும் ஒரு
போர்க்களத்தைப் போன்றே இருக்கும். பிற்போக்கு சக்திகள் தகவல்களைக்
கட்டுப்படுத்துவதையும், மேலிருந்து கீழ்நோக்கி சிந்தனைகளை ஆற்றுப்படுத்துவதையும்,
அதிகாரத்திடம் முறையிடுவதையும் முயற்சிப்பவையாகவே இருக்கின்றன. முற்போக்கு சக்திகளோ
தன்னைத்தானே சார்ந்திருக்கும் வகையிலான சிந்தனைகளைக் கற்பிப்பவையாகவும், பின்னர்
அவற்றை நம்பவைக்க முயற்சிப்பவையாகவும் இருக்கின்றன. இவை இரண்டுக்குமிடையே இருப்பது
ஒரு சமச்சீரற்ற போராகும். பிற்போக்கு சக்திகள் எப்போதுமே என்னை நீங்கள் நம்புங்கள்
என்று கூறியே தங்கள் பேச்சைத் தொடங்குகின்ற வேளையில், முற்போக்கு சக்திகளோ என்னை
நீங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லை என்று சொல்லியே பேச்சைத் தொடங்குகின்றன.
அப்படியென்றால், இவர்களில் யாரை நீங்கள் நம்பப் போகிறீர்கள்?
கலாச்சாரப்
போர்களில் வெறுமனே பணயக்கைதிகளாக இருக்கின்ற நமது குழந்தைகளுக்கு இது குறித்து
கற்றுத் தருவது எளிதாக இருப்பதில்லை. குழந்தைகளுக்கு அறிவியல்பூர்வமான, பாரம்பரியமான,
தெளிவற்ற, துல்லியமான பலவகைத் தகவல்களை அளித்து, தங்களுடைய சொந்த கருத்தை அவர்கள்
உருவாக்கிக் கொள்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். இது மிகவும் முற்போக்கான
நடைமுறையாகும். ஆனால் உண்மை என்னவென்றால், குழந்தைகள் பெரும்பாலும் நம்பகமான ஆதாரங்களைக்
கண்டறிவதற்கான நுண்ணறிவைக் கொண்டவர்களாக இருப்பதில்லை. உலகில் உள்ள எந்தவொரு சமுதாயமும்
தங்களுடைய குழந்தைகளுக்கு வெறுமனே தகவல்களை மட்டுமே தருவதில்லை. நம்பகமான தகவல்களைத்
தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே பெரியவர்களின் வேலையாக இருக்கிறது. இந்த நம்பகமான
தகவல்கள் எதுவென்பது பற்றிய விவாதம் எல்லாக் காலங்களிலும் ஒவ்வொரு சமுதாயத்திலும்
தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதை வரலாற்றில் நம்மால் காண முடியும். ஏதாவதொரு
கட்டத்தில் அவற்றில் இருந்து தேர்ந்தெடுத்தே நாம் முன்னோக்கி நகர்கிறோம்.
இதனால்தான்
நேரலை ஒளிபரப்பின் போது அந்த நெறியாளர் கூறியது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது. அமைச்சரை
நல்லவிதமாக விமர்சிக்கின்ற முயற்சியில் அனைத்திற்கும் இரு பக்கங்களும் உள்ளன என்று
அவர் குறிப்பிடுகிறார். நான் ஒரு எடுத்துக்காட்டாகவே அந்த நெறியாளரைப் பற்றி இங்கே
குறிப்பிடுகிறேன். இவ்வாறான தவறான கருத்தே அனைத்து பகுதிகளிலும் நிலவி வருவதை பரிணாம
வளர்ச்சி குறித்து தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கருத்தாய்வுகள் சுட்டிக்
காட்டுகின்றன. ஆமாம், உண்மைதான். எந்த விவாதத்தின் தொடக்கத்திலும் அதற்கென்று இரண்டு
பக்கங்கள் இருந்தாலும், விவாதங்களின் முடிவில் சான்றுகள், ஆதாரங்களின்
அடிப்படையில் அவற்றில் ஒரு பக்கமே ஆதரிக்கப்படும். சூரியன் கிழக்கில் உதிப்பது அல்லது
எலக்ட்ரான்களுக்கு இருக்கும் துகள் இயல்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்கான தேவை
இப்போது நம்மிடம் இருக்கவில்லை. அதேபோன்றுதான் டார்வின் குறித்து விவாதிப்பதுவும்
இருக்க முடியும்.
சரியான
வாதங்களை முன்னிறுத்தாவிட்டால், தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விடக்
கூடிய ஆபத்தான கண்டுபிடிப்பை தான் செய்து விடக் கூடும் என்பதை டார்வின் நன்கு அறிந்திருந்தார்.
அதனால் தான் ‘இனங்களின் தோற்றம்’ என்ற தன்னுடைய புத்தகத்தை வெளியிடுவதற்கு அவர்
நீண்டகாலம் காத்திருந்தார். அவருடைய அந்தப் புத்தகம் பாடநூலாக இல்லாமல்,
வாசகர்களிடம் அவர் வைக்கின்ற உளப்பூர்வமான வேண்டுகோளாகவே இருந்தது. அவருடைய
புத்தகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும் புவியியல், தேன்கூடுகள், கண்கள் செயல்படும்
தன்மை என்று பல்வேறு சிந்தனைகளைச் செதுக்கி வடித்தவையாகவே இருந்தன. தாவரங்கள், புறாக்கள்
மீது நடத்தப்பட்ட நேரடிச் சோதனைகள், காடுகள், உள்ளூர் அமெரிக்க புதைக்கும் இடங்கள்
குறித்த கண்டறிதல்கள், தாவரவியலாளர்கள், இயற்கைவாதிகள் பலரும் செய்த வேலைகளின்
மீதான ஆய்வுகளே டார்வினின் கருத்துக்களுக்கான ஆதரவை வழங்கின. தன்மீது நம்பிக்கை
இல்லாதவர்களுக்காக, அவர்களிடமிருந்து எழப்போகும் சாத்தியமான ஒவ்வொரு எதிர்வாதத்தையும்
எதிர்பார்த்திருந்த டார்வின், அந்த எதிர்வாதங்களை நிராகரிப்பதற்கான தரவுகள்
அனைத்தையும் வழங்கியே தனது புத்தகத்தை எழுதி இருந்தார்.
டார்வினின்
புத்தகம் பரிணாம வளர்ச்சி பற்றிய உண்மையை விளக்குவதல்ல. பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக
உள்ள தரவுகளைப் பற்றியதாகவும் அது இல்லை என்பதையும் உங்களால் கண்டு கொள்ள
முடியும். இவற்றிற்கு மாறாக, அறிவியலை மற்றவர்களுக்கு எவ்வாறு தெரியப்படுத்த
வேண்டும், வாதங்களை எவ்வாறு கட்டமைக்க வேண்டும் என்பதை அழகாக எடுத்துக் காட்டும்
வகையிலேயே அவருடைய புத்தகம் இருக்கிறது. வாசகரை நம்ப வைக்க முடியவில்லையெனில், எழுத்தாளர்
தோல்வியடைந்ததாகவே கருதப்படுவார் என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், அந்தப்
புத்தகம் ஆச்சரியப்பட வைப்பதாகவே இருக்கிறது. அதனால்தான் அவரது புத்தகம் மிகச்
சிறந்த புத்தகமாக இருக்கிறதே தவிர, வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அல்ல.
பரிணாம
வளர்ச்சி குறித்து பள்ளியில் படித்தது என்னுடைய நினைவில் இல்லை என்பதை நான்
ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் ஒருவரைப் புண்படுத்துவதாகத் தோன்றுகின்ற
வகையில் வடிவமைக்கப்பட்ட ‘மனிதக் குரங்குகளிலிருந்து தோன்றியவன்’ என்ற கேலிச்சித்திரம்
அனைவருக்கும் நிச்சயம் நினைவில் இருக்கும்.
பரிணாமக்
கோட்பாடு புத்திசாலித்தனமான ஊடாடுகின்ற கருத்துகள் மற்றும் குறிப்புகள், கணிதம் மற்றும்
தரவுகள், பொதுக் கோட்பாடுகள் மற்றும் விரிவான வடிவங்கள் ஆகியவற்றின் தொகுப்பாகவே உள்ளது.
எனவே அதைப் புரிந்து கொள்வதற்கு, முதிர்ச்சி மற்றும் அந்தக் கருத்துக்களை ஒத்துக்
கொள்வதற்கான முயற்சிகள் தேவைப்படுகின்றன. வியக்கத்தக்க, எதிர்பாராத முடிவுகளை
இறுதியாக எட்டுவதற்கு, தன்னுடைய தொடர் கல்வியின் மூலமாக அவற்றைத் திரும்பத்
திரும்ப ஒருவர் வாசிக்க வேண்டியது அவசியம். மனிதர்கள், திமிங்கலங்கள், பாக்டீரியா,
வைரஸ் என்று அனைத்தின் மீதும் பரிணாம வளர்ச்சிக்கான காரணிகள் இன்றளவிலும்
தங்களுடைய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதை அறிந்து கொள்வதன் மூலமாக,
அனைத்து சோதனைகளையும் கடந்து பரிணாமக் கோட்பாடு வந்து விட்டதைப் புரிந்து கொள்ள
முடியும். பரிணாமம் பற்றி அவசியம் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்கின்ற
போது, மேற்குறிப்பிட்ட அனைத்தும் பள்ளிகளிலே கற்றுத் தரப்பட வேண்டும். பரிணாம
வளர்ச்சி என்பது இந்த நோக்கில் பள்ளிகளில் கற்றுத் தரப்படவில்லை என்று சொல்வதில்
உண்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இது
நிஜ உலகில் பல கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள்,
அறிவியலாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள்
என்று அனைவரிடமும் இருக்கும் பரிணாமம் குறித்த புரிதலின்மை, மனிதர்கள் மற்றும்
இந்த உலகின் நலன் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
அமைச்சர்
அச்சுறுத்தியவாறு ஒருவேளை பரிணாமம் குறித்த பாடங்களை வகுப்பறைகளில் நடத்துவதற்கான தடை
கொண்டு வரப்பட்டால், நிச்சயமாக அது எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
ஏனெனில், இப்போதும்கூட பரிணாமம் பற்றிய டார்வினின் உண்மையான கருத்துக்கள் கற்றுத்
தரப்படவில்லை என்பதே உண்மை. இதுவரையிலும் நாம் நம்முடைய பிள்ளைகளை ஏமாற்றியே
இருக்கிறோம். நாம் அவர்களுக்கு பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு மிகவும் எளிமையானது என்பதைக்
கற்றுத் தரவே இல்லை. அறிவியல்ரீதியான விவாதங்களுக்கான டார்வினின்
எடுத்துக்காட்டுகளை நாம் அவர்களுக்கு கற்றுத் தரவில்லை. அவர்களுடைய சொந்தக்
கருத்துகளை எவ்வாறு அவர்கள் உருவாக்கிக் கொள்வது என்பது குறித்து நாம் அவர்களுக்குக்
கற்றுத் தரவில்லை. மதவாதம் கொண்ட அமைச்சர், எதையும் சாராது விலகி நிற்கின்ற,
அறிவார்ந்த செய்தித் தொகுப்பாளர் ஆகிய இருவரும் நன்கு கற்றறிந்தவர்களாக
இருந்தாலும், அவர்களிருவரும் வெறுமனே உண்மைகளைக் கடத்திச் செல்லும் இந்த கல்வி அமைப்பு
ஏற்படுத்தியிருக்கின்ற விளைவுகளையே தங்களுடைய செயல்களின் மூலம் வெளிப்படுத்தி
இருக்கின்றனர். அவ்வாறு பேசியதற்கு உண்மையில் அவர்கள் காரணம் அல்ல. மாறாக இந்தக்
கல்வி அமைப்பின் தோல்வியே அவர்களை இவ்வாறு தங்களை வெளிப்படுத்த வைத்துள்ளது.
ஆக
நாம் இங்கிருந்து எங்கே செல்ல வேண்டும்? எண்ணற்ற தகவல்களும், போலியான செய்திகளும்
நிரம்பி வழிகின்ற இந்த முரண்பாடான காலத்தில், உண்மை மற்றும் சான்றுகளைப் பகிர்வது
என்பதே போராட்டமாக மாறியிருக்கிறது. இது குறித்து விஞ்ஞானிகள் முன்னின்று
வழிகாட்டலாம். ஆனால் அனைவரையும் கவர வேண்டுமென்றால், அனைவரையும் உள்ளடக்கியதாக அறிவியல்
இருக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கியதாக அறிவியலை எவ்வாறு மாற்றுவது?
அறிவியலாளர்கள் இந்தப் பிரச்சினையுடன் தனித்துப் போராட வேண்டிய அவசியம் இல்லை.
அவர்கள் தனிமையில் வேலை செய்வதற்கு முயற்சிக்காமல், பன்முகத்துவ சமுதாயத்திடமிருந்து
தங்களை துண்டித்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.
அமைச்சரின்
இந்தப் பேச்சு நாம் விழித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை நமக்கு காட்டுகின்ற
வகையிலேயே அமைந்திருக்கிறது. நம்மை மறுஆய்வு செய்து கொள்வதற்கு இதைப் போன்றதொரு
வாய்ப்பு இனிமேல் நமக்கு கிட்டப் போவதில்லை. நம்முடைய எதிர்ப்பை இப்போது
தெரிவித்திருக்கிறோம். அனைவரையும் உள்ளடக்கிய முழுமையான, நம்பத்தகுந்த செய்திகளுடன்
இந்த எதிர்ப்பை நாம் தொடர வேண்டும்.
http://indianexpress.com/article/opinion/by-not-teaching-them-darwin-we-have-failed-our-children-5035897/
Comments