அறிவியல்ரீதியாகச் செல்லுபடியாகத் தக்கது என்று ஆதாரங்கள் எதுவுமின்றி ஆயுர்வேதம் தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் கூடாது
ஜம்மி
என் ராவ்
நியூஸ் லாண்டிரி
2006ஆம் ஆண்டு தான் எழுதிய ‘இன் ஸ்பைட் ஆஃப் தி காட்ஸ்’
என்ற புத்தகத்தில், எட்வர்ட் லூஸ் நாக்பூருக்கு வெளியே அமைந்துள்ள விஸ்வ ஹிந்து
பரிஷத்தின் மாடுகளிலிருந்து கிடைக்கின்ற பொருட்கள் குறித்த ஆய்வு மையத்திற்குச் சென்றிருந்தது
குறித்து விவரித்திருந்தார். பால், பசு சிறுநீர், சாணம் போன்ற பசுக்களிலிருந்து கிடைக்கின்ற
பொருட்களில் உள்ள நோய் தீர்க்கும் பண்புகள் குறித்த அந்த மையத்திடம் இருந்த நம்பிக்கை
முழுமையாக உள்ளார்ந்தும், பாடநூல் அடிப்படைவாதத்திற்கான எடுத்துக்காட்டாகவும்
இருப்பதாகவே, அந்த நேரத்தில் பைனான்சியல் டைம்ஸின் இந்திய நிருபராக இருந்த லூஸுக்குத்
தோன்றியது. ‘மிகவும் பழைய காலத்து மக்களால் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்ட
நம்பிக்கைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை உண்மை என்றும், அறிவியல்பூர்வமாக நிரூபிக்கக்கூடியவை
என்றும் அவர்கள் கருதுகிறார்கள்’ என்று அவர் எழுதியிருந்தார். வேதங்களுக்கு வெளியே
இருக்கின்ற எந்த மருந்தும் பயன்படுத்துவதற்கு உகந்தவை அல்ல என்று அந்த மையத்தில்
அவரைக் கவனித்துக் கொண்டவர் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், ஆய்வுகள், இந்திய அரசாங்கத்தின் ஆதரவு
போன்றவற்றைப் பல ஆண்டுகளாகப் பெற்றிருந்தாலும், மாட்டிலிருந்து கிடைக்கின்ற
பொருட்களின் அடிப்படையிலான சிகிச்சை எந்தவொரு குறிப்பிட்ட நோய்க்கும் இதுவரையிலும்
தீர்வைத் தந்திருக்கவில்லை. இந்த மாட்டு சிகிச்சை முறை (கவ்பதி) மீதான
அசைக்கமுடியாத தொடர்ச்சியான நம்பிக்கையுடனான வெறித்தனத்திற்கு எதிராகப் பிரதான அறிவியலாளர்கள்
தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றாலும், ஆயுஷ் என்ற போலி அறிவியலை ஊக்குவிப்பதற்கான
வாய்ப்பாக, இதுவரையிலும் நாட்டில் 1,26,000 மக்களைக் கொன்றிருக்கும் கொரோனா வைரஸ்
தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ஹிந்து
அடிப்படைவாத அரசாங்கத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம்,
யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகியவற்றைக் குறிப்பதாக உள்ளது. 2014ஆம் ஆண்டில்
தொடங்கப்பட்ட ஆயுஷ் அமைச்சகம் ஆய்வுக் குழுக்களை ஏற்படுத்தி, கோவிட் மேலாண்மை
குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவது குறித்த செய்திகளை
சமூக ஊடகங்களின் மூலமாக வெளியிட்டது. வெளிநாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளுடன்
ஒத்துழைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
மிகத் தீவிரமான ஆய்வுகளின் அடிப்படையிலான
அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இருப்பதாக கூறிக் கொண்டு வரும் ஆயுர்வேதத்தின் தவறான, ஆதாரமற்ற
கூற்றுக்களைப் பற்றி விவாதிக்கின்ற வகையில் ஏற்கனவே கட்டுரை ஒன்றை (https://www.newslaundry.com/2020/10/14/between-trumps-idea-of-modern-medicine-and-indias-traditional-medicine-science-is-covids-latest-casualty) நான் எழுதியுள்ளேன். அதுபோன்று கூறுவதற்கான ஆதாரங்கள் எதுவும்
ஆயுர்வேதத்தில் இப்போதைக்கு இருக்கவில்லை. அது மிகவும் பழமையானது; வேதங்களில்
உள்ளது; இந்தியத் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனாலும் நவீன அறிவியலை நாம்
புரிந்துகொள்ளும் பொருளில் இவை எதுவுமே ஆயுர்வேதத்தை அறிவியலாக்கி விடாது.
கருத்துக்கள், சோதிக்கப்பட்ட, சோதனைக்குட்படுகின்ற கருதுகோள்கள்
மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கின்ற முடிவுகளின் தொகுப்பாக அறிவியல் இருக்கிறது. ஆய்வுகள்
மூலமாகச் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைப் பொறுத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அல்லது
நிராகரிக்கப்படுவதாகவும், மீண்டும் நிகழ்த்திக் காட்டக் கூடிய வகையில் சில தரங்களைக்
கொண்டதாகவும் அது இருக்கிறது.
இந்த நவீன உலகில் ஆயுர்வேதம், பிற பண்டைய மருத்துவ முறைகளுக்கான
பங்கை நிறுவுவதற்கான ஆய்வுகளில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் அமெரிக்காவுடன்
ஆயுஷ் அமைச்சகம் உடன்படிக்கைகளைச் செய்துள்ளதால், அது இப்போது மாறக்கூடும்.
அண்மையில் இந்தியப் பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பு
செயலாளர்கள் ஏற்படுத்திக் கொண்ட, மிகக்குறைவாகவே அறியப்பட்டிருக்கும்
உடன்படிக்கைகளில் ஒன்றாக, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் அமெரிக்காவின் புற்றுநோய் ஈடுசெய்
மற்றும் மாற்று மருத்துவ அலுவலகம் (ஓசிசிஏஎம்) ஆகியவற்றிற்கிடையே ஏற்படுத்திக்
கொள்ளப்பட்ட உடன்படிக்கையும் இருக்கின்றது.
பாரம்பரிய மருத்துவ முறைகள் என்று அமெரிக்கர்களால் குறிப்பிடப்படுவது
குறித்து, இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையில்
கையெழுத்திட்டிருப்பது இது முதல் முறை அல்ல. 2015 ஜனவரியில் அமெரிக்க அதிபர் பாரக்
ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்த போது வெளியிடப்பட கூட்டு அறிக்கையிலேயே, ‘திறனை வளர்ப்பது... ஈடுசெய்
மற்றும் பாரம்பரிய மருத்துவம்’ என்றும், இரு நாடுகளின் சுகாதாரத்
துறைகளுக்கிடையில் பாரம்பரிய மருத்துவம் குறித்த உரையாடலை ஊக்குவிக்கும் ‘விருப்பம்
குறித்தும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆயுர்வேதத்திற்கான உறுதியான ஆய்வு சார்ந்த ஆதாரத்தைக்
கொண்ட அறிவியலை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ள ஆயுர்வேத அறிவியலுக்கான மத்திய
ஆய்வு கவுன்சில் (சிசிஆர்ஏஎஸ்) மூலமாக, இந்த 2020 உடன்படிக்கை இந்தியத் தரப்பில் இருந்து
2030க்குள் நிறைவேற்றப்படும். ஆதாரங்கள் இல்லை என்ற போதிலும், ரத்த சோகை, ஆஸ்துமா,
மூலம், இதய நோய், கால்-கை வலிப்பு, கொழுப்பு கோளாறுகள், முடக்கு நோய், இடுப்புப்
பிடிப்பு, சிறுநீரகக் கற்கள், பக்கவாதம் ஆகியவற்றிற்கான சிகிச்சைகளைப்
பரிந்துரைத்த ‘ஆதாரங்களின் அடிப்படையிலான ஆயுர்வேத சிகிச்சை’ என்ற தலைப்பில் 104
பக்க அறிக்கையை சிசிஆர்ஏஎஸ் வெளியிடுவதில்
தடை எதுவும் இருக்கவில்லை. பழைய அறிக்கைகளை மேற்கோளிட்டு வெளியான அந்த அறிக்கையில்,
வரம்புகளற்ற கட்டுப்பாட்டு சோதனை குறித்த எந்தவொரு குறிப்பும் இருக்கவில்லை.
ஆயினும் 2020 உடன்படிக்கையை வரவேற்கலாம். ஆயுர்வேதத்தின்
மீது சர்வதேச ஆய்வுகளின் கவனத்தை
ஈர்ப்பதற்கான சிறந்த வழியாக அது இருக்கும். அத்தகைய முயற்சிகள் எவ்வளவு சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றன,
அந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு இருதரப்பினரும் காட்டுகின்ற வெளிப்படைத் தன்மையையும்
பொறுத்ததாகவே அது இருக்கும்.
ஆதாரவளங்களும், அறிவியல்
அணுகுமுறையும்
2020-21ஆம் ஆண்டிற்கு ரூ.2,122 கோடி பட்ஜெட்டை ஆயுஷ்
அமைச்சகம் கொண்டுள்ளது. அதிலிருந்து சிசிஆர்ஏஎஸ்-க்கு ரூ.297 கோடி கிடைக்கிறது.
அமெரிக்காவில் தேசிய புற்றுநோய் நிறுவனம், 1998இல் அமைக்கப்பட்டது
என்று ஓசிசிஏஎம் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 42 பில்லியன்
டாலராக இருக்கின்ற 2020 பட்ஜெட்டில், 6.44 பில்லியன் டாலர் அளவிற்கு மிகப்பெரிய
நிதியுதவி பெறுகின்ற மிகப்பெரிய தேசிய சுகாதார நிறுவனத்தின் (என்ஐஎச்) துணைப்பிரிவுகளில் ஒன்றாக அது உள்ளது. தேசிய
சுகாதார நிறுவனம் தனது பட்ஜெட்டில் 10 சதவீதத்தை தன்னுடைய 6,000 ஆய்வாளர்களுக்கும்,
மீதமுள்ளதை நாடு முழுவதும் உள்ள 2,500 கல்வி மற்றும் மருத்துவ மையங்களில் இருக்கின்ற
3,00,000 ஆய்வாளர்களுக்கும் வழங்கி வருகிறது.
முதல் பார்வையிலேயே, நிதி மற்றும் பிற வளங்கள்
கிடைப்பதைப் பொறுத்தவரை, இந்த உடன்படிக்கை சிறுமீனும், மிகப்பெரிய யானையும் ஒன்று
சேருவதைப் போன்றதாகத் தெரிகின்றது. ஓசிசிஏஎம் புற்றுநோயில் கவனம் செலுத்தி வருகிறது.
அது நோயைக் ‘குணப்படுத்துதலைக்’ கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு நவீன
மருத்துவத்துடன் போட்டியிடுவதற்கு மாறாக அதை ஈடுசெய்ய முயல்கிறது. நோயாளிகளின் அனுபவத்தின் மீது கவனம் செலுத்துவதன் மூலம், பெரும்பாலும்
கதிர்வீச்சு, அறுவை சிகிச்சை, கீமோதெரபி ஆகிய சிகிச்சை முறை மூலமாக நோயாளிகளின் சிகிச்சையை
எளிதாக்கலாம் என்று அது நம்புகிறது.
ஆனால் ஆயுர்வேதம் மனிதர்களைப் பாதிக்கக்கூடிய
கிட்டத்தட்ட அனைத்து நோய்க் குழுக்களுக்கான சிகிச்சைகள் கொண்ட விரிவான மருத்துவ
அணுகுமுறை என்று தன்னைக் கூறிக் கொள்கிறது. ஆய்வுகள் தேவைப்படுகின்ற, புரிந்து
கொள்ளப்பட வேண்டிய புதிய நோய் என்று கோவிட்டை நவீன மருத்துவர்கள் சொல்லிக் கொண்டிருந்த
அதே நேரத்தில், கோவிட் குறித்த மருத்துவ சிகிச்சைகளுக்கான ஆதாரங்களே இல்லாத வழிகாட்டுதல்களை ஆயுஷ் வெளியிட்டது ஆயுர்வேதத்தின்
அவதூறான பரப்புரையாகவே இருந்தது.
உடன்படிக்கையின் வடிவம்
ஓசிசிஏஎம் மற்றும் சிசிஆர்ஏஎஸ் ஆகியவற்றின் வெவ்வேறு
அளவுகள், வரிசைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அவற்றிற்கு
இடையிலான உடன்படிக்கை எவ்வாறு இருக்கப் போகிறது? தேசிய புற்றுநோய் நிறுவனம்
மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவியலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்காக 2016 மார்ச்
மாதம் புதுதில்லியில் நடைபெற்ற கூட்டுப் பட்டறையிலிருந்து இதற்கான துவக்க துப்பு கிடைக்கிறது.
அந்தக் கூட்டத்தில் இருந்து கிடைத்த உடன்படிக்கை குறித்த யோசனைகளும், திட்டங்களும்
2017ஆம் ஆண்டில் இணையதளத்திலும், அடுத்த ஆண்டு ஜர்னல் ஆஃப் குளோபல் ஆன்காலஜியின்
அச்சுப் பதிப்பிலும் வெளியிடப்பட்டன.
முக்கிய பரிந்துரைகள்:
·
மருந்து
தயாரிப்பிற்கு அறிவார்ந்த, அறிவியல் அணுகுமுறைகளைப் பயன்படுத்துதல்.
·
நம்பகத்தன்மை,
மீண்டும் உருவாக்குவது ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் பாரம்பரிய மருந்து
தயாரிப்புகள், நடைமுறைகளைத் தரப்படுத்துதல்.
·
இந்திய
பாரம்பரிய மருத்துவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அமெரிக்க ஆய்வாளர்களுக்கு இடையிலான
ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
·
இந்தியாவில்
உள்ள பிரதான மருத்துவ நடைமுறைகளுடன், ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய
மருத்துவ நடைமுறைகளை ஒருங்கிணைத்தல்.
·
இரண்டு
அமைப்புகளுக்கும் இடையிலான பயிற்சிகளுக்கு வசதியாக ஆயுஷ் மற்றும் என்சிஐ இடையே
பயிற்சித் திட்டங்களை உருவாக்குதல்.
ஆயுஷ் அமைச்சகம் தயாராக இருந்ததை விட, என்சிஐ நிறுவனம் அறிவியல்
மற்றும் நவீன மருத்துவத்தை மிகவும் தீவிரமாகப் பின்பற்றுகிறது என்பது அதிலிருந்து தெளிவாகிறது.
ஆயுஷ் மூலிகைத் தயாரிப்புகளை ஆய்வு செய்வதற்காக, தேசிய
புற்றுநோய் நிறுவனம் நிதியளித்து வருகின்ற ஆய்வுத் திட்டங்களைப் பற்றி அந்த
கட்டுரை எடுத்துக்காட்டியது. 2014ஆம் ஆண்டில், 37க்கும் குறைவில்லாத அமெரிக்காவின்
பல்வேறு கல்வித் துறைகளுக்கு இதுபோன்ற மானியங்கள் வழங்கப்பட்டன.
ஆயுஷ் தயாரிப்புகள் குறித்து இந்தியாவில் நடைபெற்று வருகின்ற
ஆய்வுத் திட்டங்களின் செயல்திறன் மிகமோசமாகவே உள்ளது. நாட்டில் உள்ள முதன்மையான
ஆய்வு நிதி அமைப்புகள், பத்திரிகைகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வகையிலான
அறிக்கைகளுக்கன அளவுகோல்களை நிறைவேற்றுகின்ற வகையில் ஒரு மருத்துவ சோதனை கூட இதுவரையிலும்
நடத்தப்படவில்லை. தங்களுடைய செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்குப் போதுமான மேற்கோள்களாக
வேத நூல்களை மட்டுமே பெரும்பாலான ஆவணங்கள் காட்டி தொடங்குகின்றன. செல் மாதிரிகளில்
பயனுள்ள விளைவுகளைக் கண்டிருப்பதாகக் கூறுகின்ற செயற்கைமுறை ஆய்வக ஆய்வுகளை சில கட்டுரைகள்
மேற்கோள் காட்டுகின்றன. குறிப்பிட்ட மூலிகை அல்லது தாவரத்திலிருந்து செயல்திறன்மிக்க
மூலப்பொருளைப் பிரித்தெடுப்பது, முதலில் செல் மாதிரிகள், பின்னர் விலங்கு மாதிரிகள்,
இறுதியாக மனிதர்களிடம் நடத்தப்படுகின்ற சோதனைகள் என்று அதன் பண்புகளை ஆய்வு செய்து
பதிவு செய்து கொள்வதற்கான விரிவான
செயல்முறை இதுவரையிலும் மேற்கொள்ளப்படவில்லை.
இங்கே வருகின்ற முரண்பாடு என்னவென்றால், அறிவியல்ரீதியான
செயல்முறை மிகவும் வெற்றிகரமாகப் பின்பற்றப்படும் போது, அந்த ஆய்வில் கிடைக்கின்ற தீர்வு
ஆயுர்வேதத் தயாரிப்பாக நிச்சயம் இருக்காது. அது புதியதொரு வேதிப்பொருளாகவே இருக்கும்.
அந்த நேரத்தில், அது பாரம்பரிய மருத்துவம் என்ற நிலையிலிருந்து பிரதான மருத்துவம்
என்ற நிலைக்கு மாறியிருக்கும்.
பாரம்பரிய மருத்துவமும் வேண்டும்
அறிவியல்ரீதியாக இல்லாத போதிலும், இந்தியா மற்றும் உலகெங்கிலும்
பாரம்பரிய மருந்துகளுக்கென்று எப்போதும் ஒரு இடம் இருந்தே வருகிறது. பாரம்பரிய சீன
மருத்துவம் பெரிய வணிகமாக இருக்கிறது. அரசின் ஆதரவையும் அது பெற்று வருகிறது. கோடிக்கணக்கான
டாலர்கள் மதிப்புள்ள ஈடுசெய்யும் மற்றும் மாற்று மருத்துவத்திற்கான செழிப்பான
சந்தை மேற்குலக நாடுகளிலும் இருந்து வருகிறது.
உறுதியான ஆயுஷ் நம்பிக்கையாளர்களின் பார்வையில் மட்டுமே,
நவீன மருத்துவம் பாரம்பரிய மருத்துவத்துடன் முரண்பட்டதாக இருக்கிறது. ஒருபுறம் அறிவியல்
தன்மை கொண்ட சந்தேகம் மற்றும் மறுபுறத்தில் அறிவியல் சாராத நம்பிக்கை மற்றும்
நடைமுறைகளுக்கும் இடையிலேயே விவாதம் என்பது இருந்து வருகிறது.
ஓசிசிஏஎம் உடனான உடன்படிக்கை பலனளிப்பதாக இருக்கலாம்
அல்லது இல்லாமலும் போகலாம். ஆனால் அதுவரையிலும் இந்திய ஆயுர்வேத மையங்களால்
தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆய்வுகளின் தரம் என்பது, சுகாதாரம் குறித்து
எழுதி வருகின்ற பத்திரிகையாளர் அனு பூயான் சொல்வதைப் போல குறைந்த தாக்கம் கொண்ட
பத்திரிகைகளைத் திருப்திப்படுத்துகின்ற ஆய்வுகளைத் தவிர வேறு எதையும் நமக்கு வழங்குவதற்கான
வாய்ப்பு இருக்கவில்லை.
இப்போதைக்கு விசுவாசம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே
தன்னை ஆயுஷ் சந்தைப்படுத்திக் கொள்கிறது என்றே நாம் நம்ப வேண்டியுள்ளது. இதுபோன்ற ஆதாரமற்ற
கூற்றுக்களைத் தொடர்ந்து நவீன அறிவியலைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்ற அமைப்புகள்
அம்பலப்படுத்த வேண்டும். மோசமான அறிவியலையும், மோசமான நடைமுறைகளையும் வேரறுக்கின்ற
அதே நேரத்தில், தங்கள் சொந்த வீட்டை ஒழுங்காகப் பேணுவதிலும் அவை உரிய கவனம்
செலுத்த வேண்டும்.
https://www.newslaundry.com/2020/11/11/ayurveda-should-sell-its-cures-on-faith-not-false-claims-of-scientific-validity









Comments