பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளில் அந்த இடத்தில் என்ன நடந்தது?

 தி வயர் இணைய இதழ்


இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வேளையில் அங்கேயே இருந்து செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் சிலர் 2017 டிசம்பர் 6 அன்று தி வயர் இணைய இதழ் நடத்திய கலந்துரையாடலில் தங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்தனர். அந்த நிகழ்ச்சியில் பேசியவர்களில் பெரும்பாலானோர், மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக, அதாவது 1992ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்றே மசூதியை இடிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்தது குறித்து  தங்களுக்குத் தெளிவாகத் தெரிய வந்தது என்று தெரிவித்தனர். அயோத்தியில் அன்றைய தினம் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கும் திட்டத்துடனே  சங்பரிவாரத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததாக அந்தப் பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.  

பத்திரிகையாளர் கூட்டம்

பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின் நேரடி சாட்சியங்களாக இருந்த அவர்கள் அனைவருடைய  பேச்சிலும் சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்ற சங்பரிவாரின் கருத்துகளுக்கு வலுசேர்க்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தின் உண்மையான நோக்கம் மசூதியை இடிப்பதாகவே இருந்தது என்று குறிப்பிடப்பட்டது. மசூதியை இடிப்பு முன்பே திட்டமிடப்பட்ட சதியாக இருந்ததா என்பது தற்போது நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகிறது. அந்த வழக்கில் மூத்த பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட பலர் மீதும்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட நாளில் நடைபெற்ற  பெருமளவிலான வன்முறைகளுக்கு மத்தியில் இருந்து செய்திகளைச் சேகரித்த வேளையில்  தாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த பெரும் ஆபத்துகளைப் பற்றி சீமா சிஸ்தி (துணை ஆசிரியர், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்) மார்க் டல்லி (பிபிசி முன்னாள் தலைமை ஆசிரியர்), பிரவீன் ஜெயின் (இணை ஆசிரியர் (புகைப்படம்) தி இந்தியன் எக்ஸ்பிரஸ்), ருசிரா குப்தா, சயீத் நக்வி (தனிப்பட்ட பத்திரிகையாளர்கள்) உள்ளிட்ட பலரும் அந்தக் கூட்டத்தில் பேசினர். 


அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள்  

மசூதியை இடிக்கும் புகைப்படங்கள் பகிரங்கமாக வெளியாகி விடாமல் இருப்பதற்காக  அங்கே இருந்த நிருபர்கள் மற்றும் புகைப்பட பத்திரிகையாளர்களை  சங்பரிவாரத்தைச் சேர்ந்த கரசேவகர்கள் திட்டமிட்டுத் தாக்கியது பற்றி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் பேசினர். மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாகவே அங்கே இருந்த பத்திரிகையாளர்கள், பெண்கள் மீது வன்முறைகள் நடத்தப்பட்டதாகவும், அது குறித்து அத்வானி, ஜோஷி உள்ளிட்ட பாஜக தலைவர்களிடம் தொடர்ச்சியாக தாங்கள் எச்சரித்து வந்ததாகவும், ஆனால் அந்த தலைவர்கள் அனைவரும் தங்கள் எச்சரிக்கையை அலட்சியம் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

"... கரசேவகர்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அந்தப் பகுதிக்குள் நுழைந்து பத்திரிகையாளர்ளைத் தாக்கி, அவர்களிடமிருந்த கேமராக்களை உடைத்தனர்... திடீரென்று மிகப் பெரிய கும்பல் ஒன்று மசூதியை நோக்கி  நகர ஆரம்பித்ததைக் கண்டேன். காவல்துறை தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை... காவல்துறையினர் அங்கிருந்து கிளம்பிச் செல்வதை நான் பார்த்தேன். அயோத்திக்குச் செல்லும் பிரதான சாலை எரிந்து கொண்டிருக்கும் கார்களைக் கொண்டு   அடைத்து வைக்கப்பட்டிருந்தது....  மசூதிக்குள் நுழைந்த என்னை ​​கரசேவகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களில் சிலர் என்னைத் தாக்க முயன்றனர். ‘பிபிசி உலகப் புகழ் பெற்ற தொலைக்காட்சி, அதனைத் தாக்குவது நமக்கு நல்லதல்ல’ என்று அவ்வாறு தாக்க முயன்றவர்களிடம் அங்கிருந்த சிலர் வாதிட்டனர் என்று கூறிய டல்லி - அதற்குப் பிறகு  இந்தியப் பத்திரிகையாளர்கள் சிலரோடு சேர்த்து என்னையும் அங்கே இருந்த தர்மசாலாவிற்குள்  அவர்கள் பூட்டி வைத்து விட்டனர் என்றார். அருகே இருந்த கோவிலின் மடத் தலைவர் இருவரே  இறுதியில் தன்னை அங்கிருந்து விடுவித்ததாக அவர் கூறினார். அன்றைய அரசாங்கம் தன்னுடைய அதிகாரத்தை முழுமையாக இழந்து நின்றது அவமானகரமாக இருந்தது. உண்மையில் அன்றைய தினம் அரசாங்கம் என்ற ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை என்று கூறிய டல்லி அங்கே பெரும் எண்ணிக்கையில் இருந்த மத்திய படை வீரர்கள் அந்தக் கும்பலுக்கு எதிராக சிறிதளவில்கூடச் செயல்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

மார்க் டல்லி

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று ராமர் கோவில் குறித்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் முஸ்லீம்களுக்கு எதிரான அநாகரிகமான முழக்கங்கள் மட்டுமே எழுப்பப்பட்டன. அன்றைய தினம் அயோத்தியில் நடந்தவை, அவை இந்திய அரசியலில்  ஏற்படுத்தியிருக்கும் தொடர் தாக்கம் ஆகியவை எவ்வாறாக இருந்த போதிலும்,  இந்திய ஆன்மாவுடன் முழுமையாகப் பின்னிப்பிணைந்து இணைந்திருக்கும் மதச்சார்பின்மையின் மீது தான் இன்னும்  முழுமையான நம்பிக்கையுடன் இருப்பதாக டல்லி கூறினார்.

ராமர் கோவில் பிரச்சனைக்கு எந்தவொரு முக்கியத்துவமும் அன்றைய தினத்தில் அளிக்கப்படவில்லை என்று வேர்ல்டு ரிப்போர்ட் என்ற பத்திரிகைக்காக 1992ஆம் ஆண்டு செய்தி சேகரித்த நக்வி ‘வட்டமாக அங்கே அமர்ந்திருந்த இளம் பெண்கள் இது பாகிஸ்தானில் ஏற்றப்பட்டிருக்கும் கொடியை  இல்லாமல் செய்து விடும் என்று  பாடிக் கொண்டிருந்ததைப்  பார்த்தேன். பாகிஸ்தான் மீது குண்டு விழப் போகிறது, நாம் இனிமேல் ராவல்பிண்டிக்குச் செல்ல வேண்டும்,  லாகூருக்குச் செல்ல வேண்டும் என்று சில இளைஞர்கள் உரக்கக் கத்திக் கொண்டிருந்தனர். அங்கேயிருந்த  யாரும் ராமர் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை, அவர்கள் கூறியவை  அனைத்தும் பாகிஸ்தானைப் பர்ரியே இருந்தன.  மொகலாயர்களைத் தோற்கடித்து விட்டதைப் போன்ற, நரேந்திர மோடி சொல்வதைப் போல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த வெளிநாட்டவர்களின் ஆட்சியைத் தோற்கடித்து விட்டதைப் போன்ற உணர்வுகள் மட்டுமே ளே அங்கிருந்தவர்களிடம் காணப்பட்டன. உண்மையில் அது ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது’ என்று கூறினார்.

வேர்ல்டு ரிப்போர்ட் நக்வி

நேரடியான காரணமாக இல்லை என்றாலும் காங்கிரஸும்  மசூதி இடிக்கப்பட எவ்வாறெல்லாம் உதவியது என்பது குறித்தும் நக்வி அப்போது பேசினார். மசூதி இடிக்கப்படக்கூடும் என்று  தன்னிடம் 1992 டிசம்பர் 4 அன்று காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் சிங் கூறியதாக நக்வி தெரிவித்தார். மேலும்  தீவிரமான உள்கட்சி சண்டையின் காரணமாக, கட்சிக்குள் இருந்த இருவேறு குழுக்களுக்கிடையே மசூதி இடிக்கப்படுவதற்கான சாத்தியம் பற்றி கருத்து வேறுபாடுகள் இருந்ததாலேயே காங்கிரஸ் கட்சியால் மசூதி இடிக்கப்படுவதற்கு எதிராகச் செயல்பட முடியவில்லை என்றும்  தன்னிடம் அவர் கூறியதாக நக்வி தெரிவித்தார்.

மசூதி இடிக்கப்பட்ட செயல் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளுக்கான காரணமாக மாறிப் போனது என்ற கருத்து சிஸ்தியின் பேச்சில் இருந்தது. அவர் மேலும் கூறும் போது, அன்று அங்கே நடந்த நிகழ்வுகளில் மிகத் தெளிவான வழிமுறை காணப்பட்டது. நிருபர்களுடன் சண்டையிட்டு  அந்த நிகழ்வு குறித்த செய்திகளைச் சேகரித்து வெளியிடுவதை எப்படியாவது தடுத்து நிறுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்வதே அங்கிருந்தவர்களின் முக்கிய எண்ணமாக இருந்தது. அதுதான்  அப்போதிருந்த நிலைமைக்கும், இப்போதுள்ள நிலைமைக்குமிடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக  இருக்கிறது. இப்போது 2017ஆம் ஆண்டில்  மசூதியை இடிக்க வேண்டுமென்றால், அவ்வாறு நிருபர்களைத் தாக்குவதற்கான தேவை அவர்களுக்கு இருக்கப் போவதில்லை. அந்தச் சமயத்தில் செய்திகள் எதுவும் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்காக  அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என்றார். 

சிஸ்தி

அயோத்தி இந்தியாவின் மிக அழகிய நகரங்களில் ஒன்றாகும்.  சீதாவைப் பற்றியோ அல்லது அயோத்தி பிரதிபலிக்கின்ற பல்வேறு தொன்மங்களின் சங்கமத்தைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட பேசாமல் - கோவிலைக் கட்டுவோம் என்ற அவர்களுடைய முழக்கம் ராமரைப் பற்றி மட்டுமே  பேசியது.   மிகச்சிறப்பாக அதை அவர்கள் செய்து முடித்தார்கள்.   கோவில் கட்டுமானத்தைப் பற்றியே நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம்.  மசூதி இடிக்கப்படுவதைப் பற்றி நாங்கள் அப்போது  நினைத்துக்கூடப் பார்க்கவில்லை... என்னைப் பொருத்தவரை, மசூதியை இடித்துத் தள்ளிய செயல் மக்களின் குடியுரிமை குறித்த வரையறைகளைச் சீர்குலைப்பதாகவே இருந்தது என்றும் சிஸ்தி கூறினார்.  

பிரவின் ஜெயின்

மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தான்  மட்டுமே  கலந்து கொண்டதாக அந்த ஒத்திகை நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை வெளியிட்ட புகைப்பட பத்திரிகையாளர் பிரவின் ஜெயின் தெரிவித்தார். ‘பி.எல்.சர்மா பிரேம் என்ற விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் உதவியுடன்  அந்த ஒத்திகை நிகழ்வில் என்னால் கலந்து கொள்ள முடிந்தது. விஎச்பி அடையாள அட்டை எனக்கு வழங்கப்பட்டது. பல்வேறு இயந்திரங்கள், ஆயுதங்களைக் கொண்டு அங்கே கூடியிருந்தவர்களுக்கு மசூதியை இடிப்பதற்கான முழுமையான பயிற்சி  அளிக்கப்பட்டது.  அங்கிருந்த குவிமாட வடிவ அமைப்பு கொண்ட பகுதியின் மீது பல்வேறு ஆயுதங்களுடன் கயிற்றின் உதவியுடன்  ஏறுவதற்கான பயிற்சி  அளிக்கப்பட்டது. இந்த முறையைத்தான் நாங்கள் மசூதியை இடித்து வீழ்த்துவதற்காகப் பயன்படுத்த இருக்கிறோம் என்று என்னிடம் பிரேம் கூறினார், அவர் கூறியதை நான் பின்னர் ஊடகங்களில் இருந்தவர்களிடம் தெரிவித்த போது  அதை யாரும் நம்பவில்லை’ என்று ஜெயின் கூறினார்.

ஹிந்துத்துவத் தீவிரவாதிகள் புகைப்படப் பத்திரிக்கையாளர்களையே பெரும்பாலும் குறிவைத்தனர். எங்களிடமிருந்த கேமராக்களைப் பறித்த அவர்கள்  கட்டிடங்களின் உச்சியில் இருந்து அவற்றை கீழே தூக்கி எறிந்தனர். நானும் அவர்களால் தாக்கப்பட்டேன். அந்த இடத்தில் இருந்த அத்வானியைச் சந்தித்து ​​என்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டேன்.  அவர் அதற்கு மறுத்து விட்டார்.  அங்கே இருந்த தலைவர்கள் அனைவரும்  மசூதி இடிக்கப்படுவதையே கவனித்துக் கொண்டிருந்தனர்.  உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியுமாறு அங்கிருந்த மக்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் அவர்களுடைய அந்த வார்த்தைகள் அங்கிருந்த கும்பலிடம் சிரிப்பையே  வரவழைத்தன’ என்று ஜெயின்  கூறினார்.

ருசிரா குப்தா 

அங்கே கூடியிருந்த கும்பலால் தான் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக ருசிரா குப்தா (https://youtu.be/s4iPxB-vprk) கூறினார். ‘வன்முறையைத் தூண்டக்கூடிய விஷம் தோய்ந்த முழக்கங்கள் அங்கே எழுப்பப்பட்டுக் கொண்டே இருந்தன. சாத்வி ரிதம்பரா, உமாபாரதி ஆகியோர் பல நேரங்களில் அங்கிருந்த ஆண்களைப் பார்த்து, நீங்கள் எல்லாம் வளையல்களையா அணிந்து இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர்.  

மசூதிக்குள் செல்வது என்று முடிவு செய்தேன். அந்த மசூதி முழுக்க ஹிந்துத்துவத் தீவிரவாதிகள் நிரம்பியிருந்தனர். அவர்களை முந்திக் கொண்டு செல்ல முயன்ற என்னைப் பார்த்த  ஒருவர் முசல்மான் என்று  உரக்கக் கத்தினார். உடனடியாக சில கைகள் என்னுடைய கழுத்தை  நெருக்கின. சில விநாடி நேரத்தில் இறந்து விடப்போவதாகவே உணர்ந்தேன்.  என் உடலின் மீது அவர்களுடைய கைகள்  ஊர்வதை உணர்ந்தேன்.  என்னுடைய மார்பகங்களைக் கசக்க  அவர்கள் முயன்றனர். என்னுடைய இடுப்பை  பலவந்தமாகப் பிடித்து இழுத்தனர்.  நிலைமை  மிகவும் மோசமாக இருந்தது.  நான் ஒரு ஹிந்து என்று இடைவிடாமல்  கூச்சலிட்டுக் கொண்டே இருந்தேன்’ என்று தனக்கு நேர்ந்த துயர அனுபவங்களை குப்தா விளக்கினார். 

உமா பாரதி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி 

அதற்கு முந்தைய நாள் நான் நேர்காணல் செய்திருந்த ஒருவரே என்னை அங்கிருந்து காப்பாற்றி,  அத்வானி இருந்த இடத்திற்குச் சென்றடைய  உதவினார்.  அங்கே சென்று சேர்ந்த போது, தன்னிடமிருந்த பைனாகுலர் மூலமாக ஏதோவொன்றை அத்வானி பார்த்துக் கொண்டிருந்தார். தலைவிரி கோலமாக அங்கே சென்ற நான் பத்திரிகையாளர்கள், பெண்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை நிறுத்துமாறு அங்கிருப்பவர்களிடம் கேட்டுக் கொள்ளுமாறு அவரிடம் வேண்டினேன். அதற்கு அத்வானி  ‘உங்களுக்கு நடந்தவற்றை மறந்து விடுங்கள். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள் என்பதை மட்டும் பாருங்கள். இந்த இனிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். தான் வைத்திருந்த இனிப்பை அவருடைய பாதுகாவலர்களில் ஒருவர் எனக்கு வழங்கினார். அந்தப் பைனாகுலரை  என்னிடம் அத்வானி கொடுத்தார். நான் இப்போது எதையும் பார்க்க விரும்பவில்லை என்று அவரிடம் சொன்ன போது, இழப்பீடு பெறுவதற்காக தங்கள் சொந்த வீடுகளுக்கே முஸ்லீம்கள் தீ வைத்திருப்பதைப் பாருங்கள் என்றார். மசூதி இடிக்கப்பட்ட போது அதற்கு முற்றிலும் உடந்தையாக, பாஜகவின் உயர்மட்டத் தலைவர் ஒருவர் அங்கே இருந்ததையும் குப்தா சுட்டிக் காட்டினார். 


 

https://thewire.in/202549/babri-masjid-demolition-happened-reporters-look-back/

2017ஆம் ஆண்டு வெளியான கட்டுரை

 

Comments