டாக்டர் பி.கே.ராஜகோபாலன்
முன்னாள் இயக்குநர்
வெக்டார் கட்டுப்பாடு
ஆய்வு மையம்
புதுச்சேரி
அறிவியல் கருத்துக்கள்
பரிமாற்றம் செய்யப்பட்டு புதிய சிந்தனைகள் ஊக்குவிக்கப்படும் இடங்களாக
செயல்படுவதற்குப் பதிலாக அறிவியல் மாநாடுகள் இப்போது வெறுமனே மக்கள் தொடர்பிற்கான
இடங்களாக மாறியுள்ளன.
இளைஞனாக
எனது வாழ்க்கைக்கான வேலையை நான் தேர்வு செய்ய வேண்டியிருந்தபோது, எனக்கு
விரும்பத்தக்க பாடமாக அறிவியலே இருந்தது. அப்போது அதிக ஊதியம் வழங்குகின்ற
வேலைக்கு உறுதியளிப்பதாக அறிவியல் இருக்கவில்லை. பொதுவாக அறிவியலாளர் என்பவர் புத்திசாலி,
கடின உழைப்பாளி, குடும்பத்திற்கான நேரம் ஒதுக்காதவர், தனக்கு கிடைக்கின்ற
பெரும்பாலான நேரங்களை வயல்களிலோ அல்லது அழுக்கடைந்து போன ஆய்வகத்திலோ கழிப்பவர்
என்றே அப்போது கருதப்பட்டதால், நிச்சயமாக அவர் மணமகனுக்கான சிறந்த தேர்வாக
இருந்ததில்லை. இந்த 80 ஆண்டுகளில், இப்போது அது நிச்சயமாக மாறியிருக்கின்றது.
அறிவியலாளர் ஒருவர் இப்போது கார்ப்பரேட் மனிதராக இருக்கிறார். குறிப்பாக அவர் அறிவியல்
நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்தால், பகட்டான அலுவலகம், மடிக்கணினி, கூட்டங்களை
நடத்தி தனது நேரத்தை செலவிடுவதற்கான அதிநவீன போர்டு ரூம், தனது பெட்டியைச் சுமந்து
வருவதற்கு இன்னொருவர் என்று வசதியாக இருக்கிறார். அறிவியல் எனப்படும் நாடகத்தில் அவர்
கதாநாயகனாக இருக்கிறார்.
இன்றைய
அறிவியலாளர் மிகவும் ஈர்க்கக்கூடிய ஆளுமையாக, மரியாதையைக் கோருபவராக இருக்கிறார். எப்போதும் பிஸியான மனிதராக இருக்கின்ற
அவருக்கென்று நேரம் என்பது கிடைப்பதே இல்லை. குளிரூட்டப்பட்ட தன்னுடைய அலுவலகத்தில் உள்ள கணினியின் உதவி கொண்டு (உலக
சுகாதார நிறுவனத்தின் வெட்டி-நகல் எடுத்து-ஒட்டுகின்ற கலாச்சாரத்தை நினைவில்
கொள்ளுங்கள்) பெறப்படுகின்ற தரவு மற்றும் தகவல்களைக் கொண்டு தனது ’ஆய்வுக்
கட்டுரைகளை’ கடைந்தெடுத்துத் தருபவராக அவர் இருக்கிறார். பெரும்பாலும் இந்த
கட்டுரைகள் அதிக அறிவியல் ஆதாரங்கள் இல்லாதவையாக, அறிவியல் அரங்கில் நுழைந்துள்ள
பிறருக்காக எழுதுகின்ற இளம் எழுத்தாளர்களின் முயற்சிகளால், பெரும்பாலும் அவர்களின்
விருப்பத்தை விட சந்தர்ப்பத்தால் எழுதப்படுபவையாகவே இருக்கின்றன. பெரும்பாலும்
மற்றவர்களால் வெளியிடப்பட்ட கட்டுரைகள் குறித்த மதிப்புரைகளாகவே அவை இருக்கின்றன.
ஏராளமான விருதுகளும், வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் அவரைப் பின்தொடர்கின்றன.
அவரைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றுகின்றது. இன்றைய ஐன்ஸ்டீன் அல்லது நியூட்டன் என்று எல்லோரும்
அவரைப் பற்றி ஆச்சரியப்படுகின்றனர்! தங்களுடன் ஒப்பிடப்படுவதைக் கேட்கிற அவர்கள்
இருவரும் நிச்சயம் தங்கள் கல்லறைகளுக்குள் பொறுமையிழந்து திரும்பி படுத்துக் கொள்வார்கள்.
இன்றைய அறிவியலாளருக்கு பத்திரிக்கைகளையோ அல்லது ஆய்விதழ்களையோ படிப்பதற்கு அல்லது
ஆய்வின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வதற்கு நேரமிருப்பதில்லை.
எங்கிருந்தோ மீண்டும் தேடி எடுக்கப்பட்டவையாக இருக்கின்ற அவரது ’தரவுகள்’
அனைத்தும், மற்றவர்களுக்கு மீண்டும் வழங்கப்படுகின்றன. தனது பணியில் இருந்து
முறையாக ஓய்வு பெற்ற பிறகும், வேலை செய்வதைத் தவிர்க்கவே முடியாமல், ஏதாவதொரு ஆலோசகராக
அவர் களம் இறங்குகிறார்! இவர்கள் அனைவரும் இந்த 21ஆம் நூற்றாண்டில், நீங்கள் என்
முதுகைச் சொறியுங்கள், நான் உங்களுடைய முதுகைச் சொறிகிறேன்; வாழு, வாழ விடு என்பதே
கொள்கையாக, ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளும் அறிவியலாளர் (Mutual Admiration Scientist - MAS) என்ற அமைப்பில்
வலுக்கட்டாயமாக உறுப்பினர்களாகி விடுகிறார்கள்.
இன்றைய
காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்ற மாநாடுகள் மற்றும் கூட்டங்கள் பொதுவாக
பெரிய அளவிலேயே இருக்கின்றன. அவை உலகத் தலைவர்கள் கலந்து கொள்கின்ற அரசியல்
கூட்டங்களுக்கு இணையாக இருக்கின்றன. தொழில்நுட்பம் அங்கே முழுமையான பயன்பாட்டில்
இருக்கிறது. வெளிநாட்டு அமைப்புகளின் உதவியுடன் இவ்வாறான பெரிய கூட்டங்களை
நடத்துவதற்கான ஆர்வமுள்ளவர்கள், சில சர்வதேச அமைப்புகளுக்கான இந்திய குழுக்களை
உருவாக்குகிறார்கள். அந்த சந்திப்புக்கள் பெரிய எல்சிடி திரைகளுடன்
நடத்தப்படுகின்றன. அவர்களுடைய அறிவியலைப் போலவே, அங்கே காட்டப்படும் பவர்பாயிண்ட்
விளக்கக்காட்சிகளும் குழப்பத்துடன், புதிரானவையாக இருக்கின்றன. அந்த கூட்டத்தின் முக்கிய
விருந்தினர் எப்போதுமே நம்முடைய கதாநாயகனை விட அதிமுக்கியத்துவம் வாய்ந்த மனிதராக,
ஒரே நாளில் அடுத்தடுத்து வரிசையாக பல கூட்டங்களில் கலந்துகொள்ளும் அரசியல்வாதி
அல்லது அதிகார வர்க்கம் சார்ந்தவராக இருப்பார். தனது ஊழியர்கள், செயலாளர்கள்
மற்றும் தொண்டர்கள் புடைசூழ திடீரென்று உள்ளே நுழைந்து, உடனடியாக வெளியேறுபவராக அந்த
முக்கிய விருந்தினர் இருப்பார். இப்போதெல்லாம் ஒருவரின் பரிவாரங்களின் அளவைக்
கொண்டே, அவருக்கான முக்கியத்துவம் அளவிடப்படுகிறது. மிகவும் குறுகிய, கடுமையான
உரையை அவர் நிகழ்த்துவார். அவரது உரை அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலுடன்
எந்தவிதத்திலும் தொடர்பில்லாமல் இருக்கும். தங்களுடைய விலையுயர்ந்த
ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் அல்லது ஃபேஸ்புக்கில் நுழைந்து பிஸியாக இருக்கிற
பார்வையாளர்களும், மிக அருமையாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள். தேவைப்படும்போது
ரோபோக்களைப் போல, அந்தப் பார்வையாளர்கள் எழுந்து நிற்பார்கள் அல்லது கைதட்டுவார்கள்.
சில நேரங்களில், அந்த விஐபி, அந்த துறையில் இருக்கின்ற மூத்த உறுப்பினருக்கு (அவரைப்
பொறுத்த வரை மிகவும் ஆடம்பரமான) ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்து
’வாழ்நாள் சாதனையாளர்’ விருதை வழங்குவார். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
புகைப்படங்களும், பதாகைகளும் அதையே சொல்லும். நினைவு மலர் ஒன்றும் அங்கே வெளியிடப்படும். இவ்வளவு
உற்சாகங்களுக்கிடையே, அங்கே அறிவியலுக்கான நேரம் எங்கே இருக்கப் போகிறது?
இந்த
அறிவியல் சந்திப்புகள் மற்றும் மாநாடுகளுக்கான இடமும், ஏற்பாடுகளும் ஏழு நட்சத்திர
திரைப்பட விருந்துகளைப் போலத் தோற்றமளிக்கின்றன. மது மற்றும் உணவு
வழங்கப்படுகிறது. அதற்கான செலவுத்தொகை அதிகப்படியான பதிவு கட்டணத்தின் மூலமாகவும்,
தங்களுடைய பொருட்களை விற்க எண்ணுகின்ற ஸ்பான்சர்களிடமிருந்தும் மீட்கப்படுகிறது.
பங்கேற்பாளர்களில் பெரும்பாலோருக்கு, அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளே பணம்
செலுத்துகின்றன. இங்கே கூட, உண்மையான
அறிவியலாளராக இருக்கின்ற ஒருவர் மாநாட்டில் கலந்து கொள்ள முடிவதில்லை. ஒருவர் தன்னுடைய
மேலதிகாரிக்கு எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்பதைக் கொண்டே, மாநாட்டில் கலந்து
கொள்வதற்கான முன்னுரிமைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பது பற்றியும், காகிதங்களைச் சேமிப்பது பற்றியும் தொடர்ந்து பேசிக்
கொண்டிருக்கிறோம் என்றாலும், மிகச் சிறிய அளவில் நடத்தப்படுகின்ற மாநாடுகளில்கூட
எழுதுபொருள்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. காகிதம் ஏராளமாக வீணடிக்கப்படுகிறது.
பதாகைகள், சுவரொட்டிகள், தோல் பைகள், பேனாக்கள், காகிதம் மற்றும் யாரிடமும் எந்த
விளைவையும் ஏற்படுத்தாத அச்சிடப்பட்ட பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.
ஒலி மற்றும் இரைச்சல் நிறைந்ததாக, எதற்கும் உபயோகப்படாத பள்ளி ஆண்டு விழா
கொண்டாட்டம் போன்றதொரு நிகழ்ச்சியாகவே அந்த கூட்டம் இருக்கிறது.
இதுபோன்று
கணினியில் சுட்டியைக் கிளிக் செய்வதன் மூலமாக அறிவியல் கண்டுபிடிப்புகளும்,
படைப்புகளும் எப்போது தோன்ற ஆரம்பித்தன? புவியீர்ப்பு விதிகளை கண்டுபிடிப்பதற்காக,
ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த நியூட்டனை, இதுபோன்ற செயல்கள் முட்டாளாகத்
தோற்றமளிக்க வைக்கின்றன. மிதத்தல் விதியைக் கண்டறிந்த ஆர்க்கிமிடிஸ் நீச்சல்
குளத்திலிருந்து நிர்வாணமாக வெளியேறியதற்காக நிச்சயமாக இப்போது புகலிடத்தில் அடைத்து
வைக்கப்பட்டிருப்பார். கதிரியக்க எச்சங்களிலிருந்து ரேடியத்தை
தனிமைப்படுத்துவதற்காக, தங்களுடைய உடல்நலத்தைச் சற்றும் பொருட்படுத்தாது, மேரி
கியூரியும் அவரது கணவரும் தூக்கமில்லாத இரவுகளைக் கழித்திருந்தனர். இவர்கள்
அனைவரும் அறிவியலையே உண்டு, குடித்து வாழ்ந்த தலைசிறந்த அறிவியலாளர்கள். மனிதகுலத்தின்
நலனுக்காக மிகக் குறைவான வசதிகளுடன் அல்லது வசதிகளே இல்லாமல், எந்தவொரு
ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல் உழைத்தவர்கள். இதேபோன்று சி.வி.ராமன், ராமானுஜம்
மற்றும் ஜே.சி.போஸ் போன்ற சில இந்திய அறிவியலாளர்களும் இருந்தனர்.
வணிகப் பொருள்
மனிதன்
முன்னேறும்போது, அறிவியல் இவ்வாறு பின்வாங்குவது
உண்மையில் சோகம் தருவதாக இருக்கிறது. வணிகப் பொருளாக இப்போது மாறியுள்ள அறிவியல்,
உயிரியல் மற்றும் வேதியியல் போர்கள் மூலமாக மனிதகுலத்தின் அழிவிற்கே அதிகமாகப்
பயன்படுத்தப்படுகிறது. இதில் மனிதகுலத்தின் நலனுக்காக அறிவியலைப் பற்றி என்ன
பேசுவது! கணிதவியலாளர்கள் மற்றும் வேத அறிஞர்களின் நிலமான இந்தியாவில் அறிவியல்
மாநாடுகளும், கூட்டங்களும் பாசாங்குத்தனம் மற்றும் பொய்யின் முடைநாற்றம்
நிரம்பியவையாக மாறியிருக்கின்றன. அனைத்தும் யூகிக்கக்கூடியதாகவே இருக்கின்றது. எவ்வித
வேறுபாடுமின்றி உண்மை அடக்கி ஒடுக்கப்படுகிறது. நேர்மை தண்டனைக்குள்ளாகிறது.
நேர்மையான சக மதிப்பாய்வுகள் அல்லது சோதனைகள் மூலம் கற்றல் என்று எதுவுமே இங்கே இல்லை.
கருத்துத் திருட்டு மிகவும் பரவலாகி இருக்கிறது. பிறப்பதற்கு முன்பாகவே புதிய
சிந்தனைகள் கொல்லப்பட்டு விடுகின்றன. அறிவியல் என்பது தேவையான சலுகைகளுடன் ஒன்பது
மணி முதல் ஐந்து மணி வரையிலுமான வேலையாக மாறியுள்ளது. மாநாடுகள் என்று
அழைக்கப்படுகின்ற கூட்டங்களில் வாசிக்கப்படுகின்ற சில ஆய்வுக்கட்டுரைகள்,
பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் (இம்ஃபாக்ட் ஃபேக்டருடன்?) மேற்கோள்
காட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த
இடத்தில் சற்றே இடைநிறுத்தி, அறிவியல் சமூகம் ஏன் மாறத் தயங்குகிறது என்பதைப்
பற்றி சிந்திக்கலாம். நடக்கின்ற விஷயங்களை அவற்றின் வழியில் இருக்க அனுமதிப்பது
மிகவும் எளிதானது. அந்த வகையில் பார்த்தால், தோல்விகளுக்கு உண்மையான விளைவுகள்
எதுவும் இருக்கப் போவதில்லை. நீங்கள் எதையும் பெறப் போவதுமில்லை, எதையும் இழக்கப்
போவதுமில்லை. நம்முடைய ஆய்வுகளை ஆய்விற்குட்படுத்துகின்ற தைரியம் நம்மிடையே இருக்கவில்லை.
மேம்பட்ட தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அதை நாம் விரும்புகின்ற வழியில்
சரியாகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த முடியும். அறிவியல் மாநாடுகளைப் பற்றிச்
சொல்வதென்றால், மாநாடுகளை நடத்துவதும், அவற்றில் கலந்துகொள்வதும் இப்போது கட்டாயமாகி
விட்டது. அன்றாடம் உங்களுடைய வருகையைக் குறிப்பது போன்று, தன்விவரக் குறிப்பில்
குறிக்கப்படுகின்ற ஒரு விவரமாக மாநாடு ஆகியிருக்கிறது. பயனுள்ளவையாக இனிமேல்
இன்றைய மாநாடுகள் இருக்க முடியாது. ஒப்பீட்டளவில் சமீபத்திய கண்டுபிடிப்புகளாக
இருக்கின்ற சமூக ஊடகங்கள், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் பிற தொடர்புடைய
தொழில்நுட்பங்கள் போன்றவை, பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த மாநாடுகளை தோல்வியுறச்
செய்திருக்கின்றன. அவை அறிவியல் விவாதங்களுக்கான முக்கியத்துவத்தைக் கொண்டவையாக இருக்கவில்லை.
மாநாட்டு அமைப்பாளரைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்தவராக இருக்கின்ற
எவரொருவரும், அவரிடம் அறிவியல் திறமை இருக்கிறதா இல்லையா என்பதைப்
பொருட்படுத்தாமல், மாநாட்டில் பேச்சாளராக அழைக்கப்படுகிறார். அந்த பேச்சாளர் குறித்து
இருக்கின்ற நற்சான்றிதழ்கள் யாருக்கும் தெரியவில்லை அல்லது அவை பொய்யாக
வடிவமைக்கப்படுகின்றன. அறிவியலையும், தங்களை தவறிழைக்காதவர் என்றும் வரையறுத்துக்
கொள்கின்ற இந்த ’அறிஞர்கள்’ என்று அழைக்கப்படுபவர்களால் அறிவியல் மேடை
குப்பைக்காடாகி இருக்கிறது.
கல்வியின்
ஆரம்ப நாட்களிலிருந்தே மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாலும், இன்றைக்கு அவற்றின்
அளவு வியத்தகு முறையில் மாறிவிட்டது. ஒரு குறிப்பிட்ட துறையில் இருந்து சில
கல்வியாளர்கள் நெருக்கத்துடன் கலந்து கொள்ளக்கூடிய கூட்டங்களாக இருந்தவை, இப்போது
மெகா மாநாடுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாநாடுகளில் பெரும்பாலும் 1,000 அல்லது
அதற்கு மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியா முழுவதிலும் இருந்து
அதிகமான பங்கேற்பாளர்களை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு ஜனவரி மாதமும் பிரதமரால்
துவக்கி வைக்கப்படுகின்ற இந்திய அறிவியல் காங்கிரஸ் (ஐ.எஸ்.சி) வளர்ந்து வருகின்ற
அறிஞர்களையும், மாணவர்களையும் ஒன்றிணைக்கிறது. கிட்டத்தட்ட ஆண்டுதோறும்
நடைபெறுகின்ற தமாஷாகவே அது உள்ளது. 24 வயதாக இருந்தபோது, என்னுடைய பணி தொடர்பான வாழ்க்கையின் தொடக்கத்தில், 1954ஆம் ஆண்டில் (?) ஹைதராபாத்தில் நடைபெற்ற அமர்வில் அறிவியலாளர்
என்ற முறையில் நான் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அந்த நேரத்தில் அந்த
மாநாடு எனக்கு பளபளவென்று தோன்றியது. ஆண்டுகள் செல்லச் செல்ல, இந்திய அறிவியல்
காங்கிரஸ் அதன் அனைத்து புகழையும், பெருமையையும் இழந்து நிற்கிறது. சில
ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அதன் அமர்வில் கலந்து கொண்ட நோபல் பரிசு பெற்ற
வெங்கடராமன் ராமகிருஷ்ணன், அது குறித்து ’சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்,
இந்திய அறிவியல் காங்கிரஸ் கூட்டத்தொடரில் நான் கலந்து கொண்டேன். அறிவியல் மிகக்
குறைவாகவே அங்கே விவாதிக்கப்பட்டது... மீண்டுமொரு அறிவியல் மாநாட்டில் என்
வாழ்க்கையில் இனி ஒருபோதும் நான் கலந்து கொள்ள மாட்டேன்’ என்று கூறியிருந்தார்.
மும்பையில்
நடந்த 102ஆவது அறிவியல் காங்கிரஸில் பேசிய ’அறிவியலாளர்’ ஒருவரின் கூற்று, கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு உயிரியலாளராகவும், 2009இல் நோபல் பரிசு
பெற்றவராகவும் இருக்கின்ற ராமகிருஷ்ணனிடம் மிகுந்த கலக்கத்தை உருவாக்கியிருந்தது.
’முதல் விமானத்தை ரைட் சகோதரர்கள் உருவாக்கிய ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே
விமானத் தொழில்நுட்பத்தில் இந்தியர்கள் தேர்ச்சி மிக்கவர்களாக இருந்தனர். ஒரு
திசையில் மட்டுமே பறக்கக்கூடிய நவீன விமானங்கள், ஹெலிகாப்டர்களைப் போலல்லாமல்,
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட விமானம்
பக்கவாட்டாகவும், பின்புறமும் பறக்கக்கூடியதாக இருந்தது’ என்று அந்த அறிவியலாளர்
மாநாட்டில் பேசியிருந்தார்.
’2,000
ஆண்டுகளுக்கு முன்பு இந்தியர்களிடம் விமானங்கள் இருந்தன என்ற கருத்து என்னைப்
பொறுத்தவரை கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
நான் அதை நம்பவில்லை. இருந்தாலும் இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட
முறையில் தயாரிக்கப்பட்ட அந்த தொழில்நுட்பத்தை மீண்டும் யாரேனும் ஒருவரால்
திரும்பச் செய்ய முடியும் என்றால், அது அறிவியலாகிறது’ என்று ராமகிருஷ்ணன் கூறியிருந்தார்.
சமீப
காலங்களில், பல்வேறு ஆய்வுப்பாடங்களில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடைபெற்று
வருகின்றன. முன்னர் பொதுவாக பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்டு வந்த கல்வி
மாநாடுகள், இப்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்படுகின்றன. இந்திய
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), அறிவியல் மற்றும் தொழில்துறை
ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்
(ஐ.சி.ஏ.ஆர்) போன்ற அறிவியல் அமைப்புகள், உலக சுகாதார நிறுவனம் போன்ற சர்வதேச
அமைப்புகள், ஆதரவளிக்கின்ற தொழிலதிபர்கள், மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி
நிறுவனங்கள் மற்றும் அரசாங்க அமைச்சகங்கள் வழங்குகின்ற மானியங்களால் இந்த
மாநாடுகளுக்கான செலவினம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த
மாநாடுகளில் கலந்து கொள்ள விரும்புகின்ற ஆர்வம் கொண்ட இளம் விஞ்ஞானிகள் பலரும்
அதிக அளவிலான பதிவு கட்டணங்களைச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். கல்வி தொடர்பான
இந்த மாநாடுகளில் கலந்து கொள்கின்ற பெரும்பாலானோர் தங்களுடைய பயணங்கள் மற்றும் பிற
செலவுகளுக்காக சொந்தப் பணத்தையே செலவிடுகிறார்கள். தங்கள் ஆய்வு தொடர்பாக வேலை
செய்து கொண்டிருப்பவர்களைக் கண்டுபிடிக்கலாம் அல்லது புதிய ஆய்வு சிந்தனைகளை
உருவாக்கி தங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்று பல இளைஞர்கள்
நம்புகிறார்கள். நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பவர்களை கல்வியாளர்களுடன் இணைத்து வைக்கின்ற
இதுபோன்ற மாநாடுகள், கொள்கைகள் மீதான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற ஆர்வம் கொண்டவையாகவும்
இருக்கின்றன.
ஆயினும்
இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மாநாடுகள் பொதுவாக இருப்பதில்லை. ஒவ்வொரு
ஆண்டும் மேலும் கூடுதலாக சில முகச்சுருக்கங்களுடன், அதே பழைய முகங்களே இந்த
மாநாடுகளுக்கு வருகின்றன. அதே பழைய விஷயங்களை முன்வைக்கின்ற தெளிவற்ற வாசகங்களே
அங்கே பயன்படுத்தப்படுகின்றன. சமீபகாலங்களில் நடைபெறுகின்ற மாநாடுகளில், 1960
அல்லது 1970களில் இருந்து எளிதாக கிடைக்கக்கூடிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெறுவதை
நாம் பார்த்திருக்கிறோம். நமது பிரச்சனைகளைத் தீர்க்கும் என்று நாம் கருதுகின்ற
ஆய்வுகளாக அவை இருக்கவில்லை. இந்த நாட்களில் நம்மவர்கள் நிச்சயமாக மிகவும் புதுமையுடனே
இருக்கிறார்கள். வீடியோ கான்ஃபெரன்ஸ்
மட்டுமல்லாது, வெபினார் என்ற புதிய வடிவமைப்பும் அவர்களிடம் இப்போது இருக்கின்றது. இவையனைத்தையும் மீறி, அறிவியல் நிச்சயமாகப்
பயனடையவில்லை என்பதே உண்மை!
எதிர்காலத்திற்கான மாநாடுகள்
எதிர்காலத்தில்
என்ன நடக்கும்? ’அன்கான்ஃபெரென்ஸ்’ (வெளிநாட்டு விமர்சகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட
சொல்) என்பது சரியான திசையிலான நடவடிக்கையைப் பிரதிபலிக்கின்ற நவீனகால மாநாடுகளில்
ஒன்றாக உள்ளது. இந்த வகையிலான மாநாடுகளின் நிகழ்ச்சிநிரல், மாநாட்டு
அமைப்பாளர்களால் அல்லாமல், பல்வேறு ஆய்வுத் துறை சார்ந்த பிரதிநிதிகளால் அமைத்துக்
கொள்ளப்படுகிறது. மாநாட்டுப் பிரதிநிதிகளே நிகழ்ச்சிநிரலை அமைத்துக் கொள்வதால்,
அனைவரின் கருத்துக்களும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. பவர்பாயிண்ட் விளக்கக்
காட்சிகள் இல்லாமல் போவதில்லை என்றாலும், அந்த பேச்சுக்குள்ளேயே பின்னூட்ட
வழிமுறைகளை உருவாக்குவதாக அவை இருக்க வேண்டும். அனைவரின் கருத்துக்களும்
கேட்கப்படுவதாக, விவாதிக்கப்படுவதாக, இறுதியில் நினைவில் வைத்துக் கொள்ளப்படுவதாக
இருப்பதால், அனைவரின் பங்கேற்பை உள்ளடக்கி ஊக்குவிப்பதாக இந்த வழிமுறை இருக்கின்றது.
பார்வையாளர்களின்
இத்தகைய பங்கேற்பு, ஒவ்வொரு விவாதமும் தனித்துவமாக இருப்பதை உறுதி செய்கிறது; இதுபோன்று
இல்லையெனில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பேச்சை பல மாநாடுகளுக்கு பேச்சாளர்
ஒருவரால் எளிதில் அடுத்தடுத்து எடுத்துச் செல்ல முடியும். எடுத்துக்காட்டாக, சமீபத்திய
அமெரிக்க பூச்சியியல் கழகக் கூட்டத்தில் இருந்த சில உரைகள், உள்ளமைக்கப்பட்ட
அநாமதேய கருத்துக் கணிப்புகளுடன், அந்த உரையின் போதே பார்வையாளர்களும்
பதிலளிக்கக்கூடிய வகையில் கேள்விகளைக் கொண்டவையாக இருந்தன. இதுபோன்ற உரைகள் பங்கேற்பாளர்கள்
விழிப்புடன் இருப்பதையும், கட்டுரையைச் சமர்ப்பிப்பவருக்கு பின்னூட்டக் கருத்துக்களை
வழங்குவதையும் ஊக்குவிக்கின்றன. உண்மையில் பார்வையாளர்கள் வழிநடத்த உதவுகின்ற
வகையிலேயே அந்த உரை அமைந்து விடுகிறது. இந்தியாவில் முற்றிலும் வழக்கத்தில்
இல்லாத, பேச்சு குறித்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்குவதற்கான வாய்ப்புகளை
பார்வையாளர்களுக்கு இதுபோன்று அளிக்க வேண்டியது மிகமுக்கியமானதாகும்.
கூட்டத்தில்
கலந்துகொள்கின்ற ஏராளமான அறிவியலாளர்கள் கற்பிக்கும் பணியும் செய்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் மதிப்பீடு செய்யப்படுவதால், அவர்களில் பலரும் வகுப்பறைக்குள் பல
செயல்பாடுகளை இணைப்பது உட்பட வகுப்பறைகளை உற்சாகப்படுத்துகின்ற முயற்சிகளை
மேற்கொள்கின்றனர். எதிர்காலத்திற்கான உரைகள் அநாமதேயமான மதிப்பீடுகளை உள்ளடக்கியே இருக்க
வேண்டும். அதிகமான காட்சி சார்ந்த விளக்கங்கள், வட்டமேஜை விவாதங்கள் மற்றும் செயல்படுகின்ற
குழுக்கள் அனைத்தையும் உள்ளடக்கி, கூடுதலான இடைவினைகள் மற்றும் பலதரப்பட்ட
தகவல்தொடர்புகளை அனுமதிக்கிற சூழலை உருவாக்குகின்ற பலதரப்பட்ட உரைகளை பல தொழில்முறையான
சமூகங்கள் கொண்டிருப்பது மனதைக் கவர்கிறது. மாநாட்டின் பொருள் மற்றும்
பங்கேற்பாளர்களைப் பொறுத்து, அதன் வடிவங்கள் மாறுபடலாம். மாறுபட வேண்டும்.
எதிர்காலத்தில்
நடைபெறவிருக்கும் இன்னும் முழுமையான மாநாடுகளில், இதுபோன்ற விஷயங்கள் இருக்க
வேண்டும்: அதிக பதிவுக் கட்டணம், பயணம் மற்றும் தங்குமிடங்களுக்கான கட்டணங்களை எவ்வாறு
முன்பணமாக செலுத்துவது என்பது குறித்து கவலைப்படத் தேவையில்லை என்பதை முதலில் கற்பனை
செய்து பாருங்கள். இதற்குப் பதிலாக, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள்
இந்த செலவுகளை ஈடுசெய்வதற்கான கொள்கைகளைத்
தங்களிடம் கொண்டிருக்க வேண்டும். மாநாட்டு நிகழ்ச்சி நிரலை நிர்ணயிப்பதில்
அனைவரின் குரலும், யோசனைகளும் இணைத்துக் கொள்ளப்படுகின்ற மாநாட்டிற்கு அடுத்து நீங்கள்
வருவீர்கள். நீங்களும் மாநாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதாக உணருவதால், அதில் தீவிரமாக
பங்கேற்க நீங்கள் தூண்டப்படுவீர்கள். அங்கே நடைபெறுகின்ற உரைகள் வலுவானவையாக, அடுத்தவருடன்
ஊடாடுபவையாக, உரையாடல் நிறைந்தவையாக இருக்க வேண்டும். கால அவகாசம்
அறிவியலாளர்களால் ஒழுங்கமைக்கப்படாமல், பல்வேறு துறை சார்ந்த அறிவியலாளர்களால்
பகிரப்படும் அறிவியல் இலக்குகளால் தீர்மானிக்கப்படும். அந்த உரைகள் ஊடாடுபவையாக
இருப்பதால், சமூகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நமது வேகத்தைப் பற்றிய புதிய
புரிதலுடன் விளக்கக்காட்சியில் இருந்து நீங்கள் விலகி வருகிறீர்கள். இன்னும் ஏராளமாகச்
செய்ய முடியும். மேலும் அறிவியல் மாநாட்டை நவீனமயமாக்குவது குறித்து பல மனங்கள் சிந்திக்க
வேண்டும். ஒவ்வொரு நாளும் தொழில்நுட்பமும், புதுமைகளும் நடக்கின்ற உலகில் நாம்
வாழ்ந்து வருகிறோம். அறிவியல் மாநாடுகளின் எண்ணிக்கையையும், அவை நடக்க வேண்டிய
வடிவங்களையும் மாற்ற அனுமதிப்பதாக புதிய தொழில்நுட்பங்கள் இருக்க வேண்டும். மாற்றங்கள்
எளிதானவை அல்ல. இது வருகின்ற புதிய காலத்திற்கான மாநாட்டை வடிவமைப்பு குறித்து
சிந்திப்பதற்கான மாநாட்டை நடத்துவதற்கான நேரம்.
புகழ்பெற்ற
அறிஞரும் அரசியல்வாதியுமான டாக்டர்கரண்சிங் எழுதிய ’கருத்தரங்கு’ என்ற தலைப்பிலான
கவிதை ஒன்றை என்னுடைய ஆங்கிலப் பேராசிரியரின் மகள் எனக்கு அனுப்பியிருந்தார். அது
இன்றைய அறிவியல் சூழலுக்கு மிகவும் பொருந்தும் என்றே நான் நினைக்கிறேன். அவரை
மேற்கோள் காட்டி இந்த கட்டுரையை நான் முடிக்கிறேன்:
குடிப்பதற்காக காத்திருக்கும்
சோடா-தண்ணீர் பாட்டில்களைப் போல,
கற்றவர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள்.
ஒவ்வொருவராக, மைக்கின் முன் சென்று
நின்று,
பகுத்தறிவின் அங்கி கொண்டு
போர்த்தப்பட்ட
தங்களுடைய தனிப்பட்ட முற்சாய்வு
கருத்துக்களை அவிழ்த்து விடுகின்றனர்.
ஒருவர் சிறிய கரப்பான் பூச்சி போன்று,
பேசும் போது முன்னும் பின்னும் நகர்ந்து;
மற்றொருவர் அசைகின்ற உதடுகளை மட்டுமே கொண்ட
செதுக்கப்பட்ட சிலையாக கம்பீரமாக நின்று;
தாடியுடன் மூன்றாவதாக ஒருவர், பருந்து
போன்ற பிரகாசமான கடுமையான முகத்துடன்,
பார்வையாளர்கள் மீது அதீத
மூர்க்கத்தனத்துடன் மோதுபவராக;
எதிர்பார்க்கப்பட்ட நேரம் வரையிலும்
அது தொடர்கிறது.
நெரிசலான மண்டபத்தைச் சுற்றிலும்
அவர்களின் வார்த்தைகள் மோதிய பிறகு,
சற்றே இரக்கத்துடன் அவர்கள் மதிய
உணவுக்காக புறப்பட்டுச் சென்றனர்.
Comments